Sunday, November 27, 2011

ஞாபகமறதியை ஜெயிப்பது எப்படி?


           இந்தப் பதிவை 36 + என்று போடலாம் என்று நினைத்தேன், ஆனால் இப்போது ஞாபக மறதி இன்னும் சிறு வயதிலேயே ஆரம்பமாகி விடுகிறது.  இந்தப் பேனாவை எங்கு வைத்தேன், சாவி எங்கே, ATM card  எங்கே வைத்தேன் என்று அடிக்கடி தேடுபவரா நீங்கள்?  நானும் அப்படித் தான். 

           இன்னும் மேலே போய், 'டெலிஃஃபோன் பில்லை நான் இன்று கட்ட வேண்டும் என்று நீ ஏன் எனக்கு ஞாபகப்படுத்தவில்லை?' என்று உங்கள் ரங்கமணி/தங்கமணியை எகிறுகிறீர்களா? (என்ன ஒரு வில்லத்தனம்?)

          ஆஃபீஸ்/பள்ளி கிளம்பும் வேளை தான் இந்த ஞாபக மறதிக்கும் peak-hour.  'அம்மா, என் புக்கை/நோட்டை எங்கே ஒளிச்சு வைச்சே?' என்பது என் வீட்டில் அடிக்கடி கேட்கும் வசனம்.  (என் பிபி எகிறிப் போய் நான் என் மகனை எகிறினால், 'எங்கே ஒழிச்சு வைச்சேன்னு கேட்டேன்'  என்று மாற்றிப் பேசி சமாளிப்பான்!).  இந்த ஞாபகமறதி வில்லனை ஜெயிப்பது எப்படி?

            இதற்கு வழி கண்டால் நோபல் பரிசை வெல்லலாமே, நம் சக பதிவர்கள் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்களா என்று பார்த்த போது,  சிலரின் நல்ல ஐடியாக்களையும் பார்த்தேன்.   சும்மா சொல்லக் கூடாது, நம் பதிவர்கள் தொடாத துறையே இல்லை!  சரி, எதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்?... நீங்களும் மறந்துட்டீங்களா?!
       
         ஆராய்ந்து ஒரு வழியைக் கண்டுகொண்டேன்.  இந்த வழி மிக மிகச் சுலபமான வழி.  கணிணியில் உங்களுக்குப் பிடித்த விளையாட்டு இருக்குமில்லையா?  அதாவது நீங்கள் ஜெயிக்கும் விளையாட்டு - நேர் வழியிலோ, cheat  செய்தோ! இந்த விளையாட்டில் கணிணி போட்டியாளரின் பெயரை 'ஞாபக மறதி' என்று வைத்து விடுங்கள் - ஞாபகமறதியை ஜெயித்து விடலாம்.  இந்த வழியில் நான் ஞாபக மறதியை மட்டுமல்லாது சோம்பல், பொறாமை போன்ற தீய குணங்களையும் ஜெயித்திருக்கிறேன் பாருங்கள்:

இப்படி நீங்களும் ஜெயிக்கலாம்!
இந்த விளையாட்டில் ஜெயிக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது?  நான் தான் முதலிலேயே சொல்லிட்டேன் - ஜெயிக்கும் விளையாட்டாய் செலக்ட் பண்ணிக்கோங்க!! இல்லை, இருக்கவே இருக்கு cheat செய்வது (விளையாட்டில் மட்டும்!!) முயற்சி செய்தால் முடியாததே கிடையாது! (டூத் பேஸ்ட்டை வெளியில் எடுத்து பின் உள்ளே போடுவதைத் தவிர!!) திரும்பத் திரும்ப விளையாடி ஜெயித்து விடுங்கள்!!

உண்மையில் ஞாபக மறதியை ஜெயிப்பது எப்படி?  செய்ய வேண்டிய வேலைகளை ஞாபகம் வைத்துக் கொள்ள ஒரு சின்ன நோட்புக்/குறிப்பில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! :)) என்னைப் பொறுத்த வரையில், சின்ன சின்ன குறிப்புகளை  எழுதி வைப்பதன் மூலமாக - நிஜ பேப்பரிலோ இல்லை கணிணியிலோ -நான் ஞாபகம் வைத்துக் கொள்கிறேன்.  ஒரு சின்ன குறிப்பு நோட் வாங்க வேண்டும் என்பதையும் பலமுறை மறந்து போய் என் பையனின் போன வருஷ ஸ்கூல் டைரியை உபயோகிக்கிறேன்!  (என்ன கைபேசியில் reminder/to do வா?  கைப்பேசியையே எங்க வைச்சேன்னு landline நம்பரிலிருந்து கூப்பிட்டுத் தான் கண்டுபிடிக்கிறேன்!!)  

பொருட்களை எங்கே வைத்தது என்று திண்டாடாமல் இருக்க  systematic ஆக இருப்பதும், உபயோகித்த பின் பொருட்களை அவற்றிற்கு உரிய இடத்திலேயே வைப்பதும் தான் சரியான வழி! 

டிஸ்கி: இது ஒரு மீள் பதிவு - சின்ன எடிட்டிங்கோடு!! மறந்து போய் திரும்பப் பதிவிட்டு விட்டேன்!! :-)  

Sunday, November 20, 2011

தாங்க்ஸ் பூனைக்குட்டி!

"கண்ணு கமல்!" அம்மா கூப்பிடுவது காதில் விழுந்தது! 'கண்ணு' அடைமொழியோடு விளித்தால், ஏதோ எனக்குப் பிடிக்காத வேலை!

"என்னம்மா!"

"தம்பிக்கு ஜுரம் ஜாஸ்தியாயிருச்சு! கொஞ்சம் டாக்டர்கிட்ட அவனைக் கூட்டிகிட்டுப் போறயா?" அம்மா கெஞ்சுவது போல் கேட்டாள். "எனக்கு காமர்ஸில் நோட்ஸ் எடுக்கணும். நீயே கூட்டிப் போயேன்மா" என்றேன்.

"கிரைண்டர்ல இட்லிக்கு மாவரைக்கப் போட்டிருக்கேன். ஓடிட்டிருக்கு.  கரண்ட் இப்பத்தானே வந்தது... தம்பியை நீ அப்படியே உன் வண்டில வைச்சு கூட்டிட்டுப் போலாம்லயா? நாளைலருந்து அவனுக்கு மிட் டர்ம் டெஸ்டு நடக்குது. இன்னிக்கு ராஜன் டாக்டர் ஒரு ஊசி போட்டுவிட்டால், ஜுரம் சரியாயிரும்; நாளைக்கு நிம்மதியா டெஸ்ட் எழுதலாம்! அப்பா ஊருக்குப் போயிருக்கும் போதா இவனுக்கு ஜுரம் வரணும்!" என்று புலம்பிய அம்மா, "நீ கிரைண்டரைப் பார்த்து நிறுத்தறியா, நான் ஆட்டோவில் தம்பிய கூட்டிப் போறேன்" என்று என்னை ஆழம் பார்த்தாள்! எனக்குப் பிடிக்காத வேலை என்று அம்மாவுக்குத் தெரியும்!!

"சரி, சரி, நானே போறேன். டேய் விமல்! என்னைய கெட்டியாப் பிடிச்சுப்பியா வண்டில?" என்று கேட்டவாறு கிளம்பினேன். போச்சு, நோட்ஸ் எடுப்பது போச்சு! +2 வில் நல்ல மார்க் வாங்கி டே காலேஜிலேயே பி.காம். சேர்ந்து என்ன புண்ணியம்! எங்கள் காலேஜில் டே காலேஜை விட ஈவினிங் காலேஜுக்குத் தான் நல்ல லெக்சரர்ஸ்! காலையில் காலேஜ் முடித்து மதியம் சி.ஏ.வுக்கான கோர்ஸ் படிக்க வேண்டும் என ஆசை! படித்து பெரிய ஆடிட்டராக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. நிறைய படிக்க வேண்டும்! நோட்ஸ்??.. படிக்கத் தானே ஆசைப்படுகிறேன்! நான் என்ன அடுத்த வீட்டு சுரேஷைப் போல சினிமா, ஓட்டல் என்று வீட்டை ஏமாற்றிப் போகிறேனா என்ன...அலைந்த மனதை Be calm! என்று அடக்கிக் கொண்டே, "விமல்! போகலாமா! மேல போர்வை போர்த்தி விடட்டுமா?" என்று கேட்டபடி புறப்பட்டேன்.

விமல் என்னை இறுக்கப் பிடித்தவாறு பின் சீட்டில் உட்கார, டூ வீலரைக் கிளப்பினேன். டாக்டர் ராஜனின் கிளினிக்கில் ஏகப்பட்ட கூட்டம்! வேறு எந்த டாக்டரும் ஞாயிறு மதியம் கிளினிக் திறப்பதில்லை! இரண்டு மணி நேரமாவது ஆகலாம்! விதவிதமான நோயாளிகள், அவர்களின் செயல்கள் என்று வேடிக்கை பார்த்தவாறு காத்திருந்து டாக்டரைப் பார்த்தோம். கைராசியான டாக்டர்! தம்பியை ஞாபகமாகப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, "ஊசி போடட்டுமா, இல்லை மாத்திரையே போதுமா?" என்று கேட்டார். அவனும், "ஊசி வேண்டாம்" என்று விட்டான்! டாக்டர் மாத்திரைகளும் சிரப்பும் எழுதி, இரண்டு நாள் கழித்து வரச் சொன்னார். ஊரில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் என்று சொல்லி உணவுக்கான பத்திய முறைகளையும் சொன்னார்.

தம்பியை அங்கேயே உட்காரச் சொல்லி விட்டு, அடுத்திருந்த டாக்டரின் தம்பி நடத்தும் மருந்து பெட்டிக்கடை (அவ்வளவு சின்னது) சென்றேன். உள்ளேயிருந்த, வயலட் நிறத்தில் சூடிதார் அணிந்த அழகான பெண், கவுண்டரைத் தாண்டி ரோடையே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் மருந்துச் சீட்டை நீட்டினேன். "பூனைக்குட்டி அங்கே இருக்கா?" என்றாள். திரும்பிப் பார்த்த போது ஒரு பூனைக்குட்டி டாக்டரின் பைக்கின் கீழ் ஒளிந்திருந்தது!. "உங்களுக்கு வேணுமா? பிடித்துத் தரட்டுமா?" என்று கேட்டுத் திரும்பினால், அந்தப் பெண் ஸ்டூலின் மேல் நின்று கொண்டிருந்தாள். பூனைக்குட்டி, கடையின் படியேறி, கவுண்டரின் கீழ் நுழைய முயன்று கொண்டிருந்தது! "எனக்குப் பூனைக்குட்டின்னா பயம்!" என்று சொன்ன அவளைப் பார்த்து எனக்குச் சிரிப்பாக வந்தது! காட்டிக் கொள்ளாமல், "நீங்கள் அங்கிருந்து துரத்த வேண்டும். நான் துரத்தினால், உள்ளே தான் வரும்!" என்றேன்.


"கவலையில்லை! கவுண்டர் கீழ் ஓட்டையை அடைத்து வைத்திருக்கிறேன்!" என்றாள் அந்தப் பெண்! இப்போது என் சிரிப்பை அடக்க முடியவில்லை! "அப்ப ஏன் பயப்படறீங்க!" என்று கேட்டேன். இதற்குள் என் தம்பியும் வர, பூனைக்குட்டியை ஒருவழியாக அங்கிருந்து கிளப்பி விட்டோம்.

இந்தப் பெண்ணை எங்கேயோ பார்த்திருக்கிறோமோ என்று நினைத்த நான், "தப்பாக நினைக்கலேன்னா, உங்களை எங்கேயோ பார்த்த ஞாபகம்!" என்று இழுக்க, "  உங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆக்டிவாவில் பறப்பீர்களே! உங்கள் காலேஜில் தான் நானும் பி.காம் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன். நான் ஈவினிங் காலேஜ்;   இன்னிக்கு என் அண்ணனுக்கு ஹெல்ப் பண்ண மருந்துக் கடைக்கு வந்தேன்.  மதியமே வந்த நான், பூனைக்குட்டிக்குப் பயந்து உள்ளேயே உட்கார்ந்திருக்கிறேன்!  அண்ணன் வந்தவுடன் கிளம்பலாம் என்றிருந்தேன்!" என்றாள்!! ஆகா, பழம் நழுவிப் பாலில் விழுந்தது!

"அப்படியா! எனக்கு இன்னிக்கு லக்கி டே" என்று சொன்னேன் நான், என் தம்பி முறைப்பதையும் பொருட்படுத்தாமல். எப்படியும் கேட்கத் தானே வேண்டும்; நல்லதை ஒத்திப் போடக் கூடாது! "எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா? உங்கள் காமர்ஸ் நோட்ஸை எனக்குத் தந்து உதவ முடியுமா?" என்று ஆரம்பித்தேன்.

வியப்பில் விரிந்த கண்களோடு அவள், "ம், கட்டாயமாகத் தருகிறேன். நீங்கள் எனக்கு இங்கிலீஷ் நோட்ஸ் தந்தால்!! டாக்டரின் வீட்டுக்குப் பக்கத்து வீடு தான் என் வீடு். என் பெயர் ஸ்வேதா! நீங்கள்?" என்று கேட்டாள். "ஸ்... என்னை நான் இன்ரொடியூஸே பண்ணிக்கலையே, என் பெயர் கமலா" என்றேன் நான்.

ஒரு அழகான நட்பை உருவாக்கிக் கொடுத்த பூனைக்குட்டிக்குத் தாங்க்ஸ்!!

Sunday, November 13, 2011

ம்னாமடஅ!! (Reverse mortgage)

சமீபத்தில் ஒரு நாளிதழின் வரிகள் பற்றிய சந்தேகங்கள் கேட்கும் பகுதியில் ஒருவர் தாம் ஒரு சீனியர் சிட்டிசன் என்றும் பணத்தேவை காரணமாக, தாம் 20 வருடங்களாக வாழும் தம் சொந்த வீட்டை விற்றால், வருமான வரி கட்ட வேண்டுமா என்றும் கேட்டிருந்தார்.  பதிலளித்தவர் இதற்கு கேபிடல் கெயின்ஸ் என்ற வருமான வரி செலுத்த வேண்டி வரும் என்றும், அதற்குப் பதில் அவர் ரிவர்ஸ் மார்ட்கேஜ் செய்யலாம் என்றும் ஆலோசனை கூறியிருந்தார்.

நம் அரசாங்கம் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே இது பற்றி சொல்லியிருந்தாலும் இதைக் குறித்த தகவல்கள் இன்னும் நிறைய பேரைச் சென்றடையவில்லை. 

முதலில் மார்ட்கேஜ் - அடமானம் என்றால் என்ன?  நம்மில் பலர், கடன் வாங்கி வீட்டைக் கட்டியிருப்போம்/வாங்கியிருப்போம்; இல்லை, அதற்கான முயற்சியிலாவது இருப்போம்!! அப்படி வீட்டுக்காக கடன் வாங்கும் போது, கடன் கொடுக்கும் நிறுவனமோ, வங்கியோ, தம்மிடம் அடமானமாக அந்த வீட்டையோ அல்லது மனையினையோ வைத்துக் கொள்கிறார்கள்.  நாம் வட்டியும் முதலுமாக(!) திரும்பச் செலுத்துகிறோம்.

நகை அடமானம் எல்லாம் மணப்புரத்திலிருந்து கோவாபரேடிவ் பாங்க் வரை தரும் விளம்பரங்களினால் மற்றும் விளம்பரப் பலகைகளினால் தெரியும்.  இந்த மார்ட்கேஜ்களில் பல வகை இருக்கின்றன.

இம்மாதிரி அடமானம் வைக்கும் போது,   சொத்தின் மீதான நம் உரிமை, கடனை அடைக்க அடைக்க, படிப்படியாக அதிகமாகும்.  கடனை முழுமையாக அடைக்கும் போதுதான் சொத்தின் மீதான உரிமை நமக்கு முழுமையாகத் திரும்ப வரும்.  

ரிவர்ஸ் மார்ட்கேஜ் என்பது 60 வயது அதிகமானோருக்காக இந்தியாவிலும் நம் அரசு கொண்டு வந்திருக்கும் ஒரு திட்டம்.  60 வயதுக்கு மேற்பட்டோர், அவருக்குச் சொந்தமாக ஒரு வீடு இருக்கும் பட்சத்தில், அந்த வீட்டை வங்கிகளில் ரிவர்ஸ் மார்ட்கேஜில் வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம்.  இம்முறையில், ஏற்கெனவே சொந்தமான சொத்தை அடமானம் வைத்து, பணத்தைப் பெறுகிறோம்.  அதான் ம்னாமடஅ!! (Reverse mortgage)

கணவர், மனைவி இருவர் பெயரிலும் வீடு இருந்தால், கணவர் 60 வயதுக்கு மேற்பட்டிருக்க வேண்டும்; மனைவி வயது 58க்கு மேலிருந்தால போதும்.  அவர்கள் சேர்ந்து ரிவர்ஸ் மார்ட்கேஜுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் முக்கிய பயன் என்னவென்றால், பணத்தேவைக்காக தாம் குடியிருக்கும் சொந்த வீட்டை விற்க வேண்டாம். வீட்டைக் காலி செய்யவும் வேண்டாம். விதிமுறைகட்கு உட்பட்டு, தேவையான பணத்தை ஒரே முறையாகவோ, இன்ஸ்டால்மென்ட்களிலோ தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.  இந்தக் கடனை வாங்கியவர், வேண்ட் கடனை அடைத்து வீட்டை மீட்டுக் கொள்ளலாம்.  இல்லாவிடில், அதே வீட்டிலேயே தம் காலம் முடியும் வரை வாழலாம்.  ஒரு வேளை அவர் கடனை அடைக்காமல் இறந்து விட்டால், அவரது சட்டப்படியான வாரிசுகள் (legal heirs) கடனை வட்டியுடன் அடைத்து வீட்டை மீட்டுக் கொள்ளலாம்.  இல்லாவிடில், வீட்டை விற்றும் கடனை அடைக்கலாம்.  கடன் போக மிகுதி வாரிசுகளுக்குப் போகும்.  கடன் கொடுக்கும் போதே, வீட்டின் மதிப்பை வைத்துத் தான் கடன் கொடுப்பார்கள் என்பதால், நிச்சயமாக கடன் வீட்டு மதிப்பைத் தாண்டாது!! 
வருமான வரிச் சட்டத்தில் ரிவர்ஸ் மார்ட்கேஜுக்கு வரி விலக்கு உள்ளதாம் - இம்முறையில் வீட்டை வைத்து வாங்கும் பணத்துக்கு வரி கிடையாது. காபிடல் கெயின்ஸும் வராது.

ஆகவே, சொந்த வீடிருந்தும் ஆதரவில்லா முதியவர்களிடம் இந்தத் திட்டம் பற்றிச் சொல்லுங்கள்.  பல வங்கிகளில் இந்தச் சேவை இருக்கிறது. அருகாமையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியை அணுகினால் நல்லது.  உதாரணத்துக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் இந்தச் சுட்டியைப் பாருங்கள்.

இந்தக் கட்டுரையின் நீதி என்னவென்றால், இது வரை இல்லாவிட்டால், உங்களுக்கென்று கட்டாயமாக சொந்தமாய் வீடு ஒன்றை கட்டிக் கொள்ளுங்கள்/ வாங்கிக் கொள்ளுங்கள்!

டிஸ்கி: மேலும் இத்திட்டத்தைப் பற்றிச் சொல்ல, வங்கிகளிலும் வருமான வரி சம்பந்தப்பட்ட துறையிலும் இருக்கும் பதிவர்களை அழைக்கிறேன்!

Tuesday, November 8, 2011

அங்கீகாரம் - சிறுகதை

"நீ நல்லவளாகவே இருக்கலாம்; புத்திசாலியா, பார்க்க லட்சணமா இருக்கலாம்! ஆனால், நீ எங்கள் வீட்டுக்குத் தேவையில்லை! எங்கள் வீட்டுப் பழக்க வழக்கமும் உங்கள் பழக்க வழக்கமும் ஒத்துப் போகாது. என் மகன் உனக்கு வேண்டாம். உன்னை அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் என் மாப்பிள்ளைகள் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்?" இது ரிதம் படத்தில் வந்த வசனம் இல்லை. தேவியைப் பார்த்து ராஜாவின் அம்மா சொன்னது. தேவியும் ராஜாவும் காதலித்தனர். தேவியின் வீட்டில் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டனர். தேவி ராஜாவின் வீட்டிற்குச் சென்ற போது ராஜாவின் அம்மா பங்கஜம் சொன்னது தான் மேலே படித்தது!

ராஜா பிறகு எவ்வளவோ முயன்றும் அவன் அம்மாவின் மனதை மாற்ற முடியவில்லை. இப்படியே ஓரிரு வருடங்கள் கழிந்தன. கடைசியாக மணமகள் வீட்டில் 1 மாதம் கெடு கொடுத்து விட்டனர்! வேறு வழியில்லாமல், தேவி-ராஜா திருமணம், ராஜாவைத் தவிர மணமகன் தரப்பிலிருந்து ராஜாவின் தம்பி மட்டும் கலந்து கொண்டு நிறைவேறியது.  தம்பதியர் தனிக்குடித்தனம் சென்றனர்.

இரண்டு மாதம் உருண்டோடியது. ராஜா வீட்டிலிருந்து அவன் அம்மாவைத் தவிர, அவன் அப்பா உட்பட, அனைவரும் இந்தத் தம்பதியிடம் அன்பாகப் பழக ஆரம்பித்தனர். ராஜா திருமணமானதும் முதல் முதலில் அனுப்பிய காசோலையையும் திரும்ப அனுப்பிய அவன் அம்மா   பங்கஜம், அன்றொரு நாள் கூப்பிட்டு அனுப்பிய போது, ஆசையுடன் ஆசி வாங்கச் சென்றனர் இருவரும். பங்கஜத்தம்மாளோ, அங்கிருந்த ராஜாவின் சாமான்களை எடுத்துப் போகச் சொன்னதோடு, ராஜா கொடுத்து விட்ட தீபாவளிப் புடவையையும் திரும்பத் தந்தார்!! தம்பதி கண்ணீரோடு திரும்ப வந்தனர்.


இதோ, அந்தத் தம்பதிக்கு மகளும் பிறந்து விட்டாள்! லக்ஷ்மியை அப்பா வழிப் பாட்டியைத் தவிர அத்தனை சொந்தமும் கொஞ்சி மகிழ்ந்தனர். கூட்டிப் போன போதும் பாட்டி பார்க்க மறுத்து விட்டார்! ஆனாலும் சன்னலின் வழியே அவர் பார்த்ததை, இருவரும் கவனித்துக் கொஞ்சம் ஆறுதல் அடைந்தனர்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு திடீரென தேவியிடமிருந்து ராஜாவிற்குத் தொலைபேசி அழைப்பு - "அம்மா நம் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்". ராஜா உடனே வீட்டிற்குத் திரும்பினான். "ராஜா, நல்லாயிருக்கியா? பேத்தி, அப்படியே என் அம்மா ஜாடை!  லக்ஷ்மி தேவியே தான்" என்று பேசிய   பங்கஜத்தம்மாளைப் பார்த்து திகைத்தான் ராஜா. "எனக்கு லேசாக ஹார்ட் அட்டாக் வந்து, ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். உங்களிடம் எல்லாம் சொல்ல வேண்டாமென்று நான் தான் அப்பாவைத் தடுத்தேன்! ஆஸ்பத்திரியில் இருந்த போது தான் ஒரு கணத்தில் போயிருக்க வேண்டிய உயிர், எதற்கு இந்த வீண் சண்டை எனத் தோன்றியது. அதான் நல்லா குணமானதும் நானே உங்களைப் பார்க்க வந்து விட்டேன்!" என்றார் அவர்.

பங்கஜம்  அதன் பின் இவர்கள் வீட்டுக்கு அவ்வப்போது வந்து போக ஆரம்பித்தார். திடீரென ராஜாவின் அப்பா உடல் நலன் சரியில்லாமல் போக, அனைவரும் ஆஸ்பத்திரிக்கு அலைய ஆரம்பித்தனர். சிகிச்சைகள் பலனின்றி ராஜாவின் அப்பா இறைவனடி சேர்ந்தார். அவருக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தும் ஒன்றும் குறைவில்லாமல ராஜாவின் வீட்டிலேயே செய்து முடித்தனர்.

ஆயிற்று, மாமனார் இறந்து ஒரு வருடம் முடிந்து போனது -   வருஷத் திதி முடிந்த இரண்டாவது நாள் -  இன்று தேவியின் வீட்டில் எல்லா உறவினர்களும் கூடியிருந்தனர்.  வந்திருந்த உறவினர் ஊருக்குக் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். பங்கஜம், எல்லாரிடமும் ஆளுக்கு நூறு ரூபாயைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அங்கே அப்போது வந்த தேவி, "என்ன, எதற்குப் பணம்?" என்று கேட்க, "உன் மாமனார் இது வரை எல்லாருக்கும் கார்த்திகைப் பண்டிகைக்குப் பணம் கொடுத்தாரில்லையா, அதான் இப்போ நான் தொடர்கிறேன்" என்று பங்கஜம் பதில் சொன்னார். தேவியும் தனக்கும் அவர் ஆசிர்வாதமாகப் பணம் தருவார் எனப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் - அவர் இவள் பக்கம் திரும்பவே இல்லை!


பக்கத்தில் இருந்த நாத்தனாரிடம் தேவி மெல்லிய குரலில், "எனக்குக் கிடையாதா?" என்று கேட்க, அவளோ, 'அம்மா, அண்ணி கேட்கறாங்க பாரு!" எனப் போட்டுக் கொடுத்து விட்டாள்! பங்கஜம் தேவியிடம், "உனக்குக் கிடையாது" என்று சொல்லி விட்டு, "இந்தா, உனக்கு இந்தப் புடவை வாங்கி வைத்திருக்கிறேன். நீ பொறுப்பாக எல்லாக் காரியத்தையும் செய்தாய். நான என் கையால் உனக்குப் புடவை வாங்கித் தரணும் என்று தோன்றியது" என்று புடவையைக் கொடுக்க, சுற்றியிருந்தவர்கள் கை தட்டினர்.   தேவி அழ ஆரம்பித்தாள்!  

Sunday, October 30, 2011

போட்டி!! (சவால் சிறுகதைப் போட்டி 2011)

குறிப்பு:- இது பரிசல், ஆதி மற்றும் உடான்ஸ் இணைந்து நடத்தும் சவால் சிறுகதைப்போட்டி-2011 க்கான போட்டிக் கதை. 

முரளியும் விஷ்ணுவும் நண்பர்கள். ஒரே ஹைடெக் அலுவலகத்தில் ஒன்றாகப் பணியுரியும் அவர்கள் ஒரே வீடெடுத்துத் தங்கியிருந்தார்கள். தற்சமயம் முரளியின் கவலை புதையல் போட்டியில் ஜெயிப்பது பற்றி. புகழ்பெற்ற கோரகிள் & கோ இம்முறை நடத்தும் புதையல் போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. இம்முறை போட்டியும் கடினமாக இருக்கும் என்று நிர்வாகம் சொல்லி விட்டது. வெல்பவர்களுக்கு பரிசு, குழுவாகப் பங்கு பெறும் இருவருக்கு ஜோடியுடன் அமெரிக்க சுற்றுலா - 10 நாட்கள் உணவு, தங்கும் வசதியுடன்! ஆசை யாரை விட்டது?! தவிரவும் முரளிக்கு வேறு காரணமும் இருந்தது!

சென்ற முறை இப்போட்டியில் வென்றவர்கள் சத்யப்பிரகாஷும் அவர் மகன் கோகுலும். அவர்கள் நகரத்தின் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சத்யப்பிரகாஷ், சுருக்கமாக, எஸ்.பி., ஒரு வியாபார காந்தம். (அதாங்க பிஸினஸ் மாக்னெட்); தம் பரந்த வியாபாரங்களில் தன் மகன் கோகுலுக்கும் மகள் ராஜீவிக்கும் உரிய ட்ரெய்னிங் கொடுத்துக் கொண்டிருந்தார். போட்டிப் பரிசான அமெரிக்க சுற்றுலா எல்லாம் அவர்களுக்கு இலவசமாய்த் தேவையில்லை என்றாலும், போட்டியில் தாங்களே ஜெயிக்க வேண்டும் என்ற கௌரவப் பிரச்னை அவர்களுக்கு இருந்தது.

முரளியும் ராஜீவியும் மேலாண்மைப் படிப்பின் போது அறிமுகமாகி, காதலிக்க ஆரம்பித்தனர். முரளி எஸ்.பி. குடும்பம் போல பரம்பரைப் பணக்காரன் இல்லை; அவனுக்கு படிப்பே மூலதனம். நல்ல புத்திசாலி! தன் இப்போதைய வேலையில் கை நிறையவும் பை நிறையவும் வங்கி கணக்கு நிறையவும் சம்பாத்தித்துக் கொண்டிருந்தான்!. சந்தர்ப்பம் கிடைக்கும் போது, அடுத்த வேலைக்குத் தாவவும் தயாராயிருந்தான்!  இந்தத் துறையில் இருக்கும் இளைஞர்களைப் போல, தானே ஒரு கம்பெனியைத் தொடங்க வேண்டும் என்பது அவன் எதிர்கால லட்சியம்!

ராஜீவியின் ஐடியா தான் புதையல் போட்டி 2011-ல் பங்கு பெற்று எப்படியாவது வெல்வது! எஸ்.பியிடம் பெண் கேட்பது சுலபமல்லவா?! இவ்விஷயத்தை முரளி தன் உயிர் நண்பன் விஷ்ணுவிடம் சொல்லித் தங்களுக்கு உதவுமாறு கேட்டான். புதையல் போட்டி நிர்வாகம், போட்டியை நடத்தும் பணியை ஜிம்மிக்ஸ் கம்பெனியிடம் விட்டிருந்தது. அதன் முக்கிய அதிகாரியைச் சந்திக்க முடிவு செய்தனர் நண்பர்கள்.

முன்னறிவிப்பில்லாமல் அப்போது அங்கு வந்த ராஜீவி, "முரளி, கோகுலுக்கு நம் விஷயம் தெரிந்து விட்டது. நீ என்னைக் கல்யாணம் செய்து கொண்டால், அப்பா உன்னை எங்கள் கம்பெனியிலேயே டைரக்டர் ஆக உன்னைப் போடலாம்; நீ தன் முன்னேற்றத்துக்குத் தடையாய் இருப்பாய் என நினைக்கிறான்! அவன் ஜிம்மிக்ஸ் கம்பெனியில் ஒருவரிடம் செல்ஃபோனில் பேசியதை நான் தற்செயலாய்க் கேட்டேன். அவன் செல்ஃபோனைக் கீழே வைத்து பாத்ரூம் சென்றவுடன், பேசிய நம்பரை நோட் செய்து எடுத்து வந்திருக்கிறேன், இந்தா" என்று படபடப்புடன் எண்ணைக் கொடுத்தாள்.

அந்த நம்பருக்குத் தன் கைப்பேசியிலிருந்து பேசினான் முரளி. எடுத்துப் பேசியவர் பெயரும் விஷ்ணு!! தன் கம்பெனியிலிருந்து பிஸினஸ் விஷயமாக நேரில் சந்திக்க விரும்புவதாகக் கூறி, அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினான்; ஏற்கெனவே நண்பன் விஷ்ணுவின் பெயர் செல்ஃபோனில் இருந்ததால், ஜிம்மிக்ஸ் விஷ்ணு என்று அவர் பெயரைத் தன் கைப்பேசியில் காப்பாற்றி, இல்லையில்லை, சேமித்துக் (save) கொண்டான்! அவர் அலுவலகப் பக்கத்திலிருக்கும் காஃபி ஷாப்புக்கு நண்பன் முரளி, ராஜீவி சகிதம் சென்றான்.

ஜிம்மிக்ஸ் விஷ்ணு, அறை எண் 305-ல் கடவுள் பிரகாஷ்ராஜ் மாதிரி இருந்தார்! முரளி தன் காதல் கதையையும் போட்டியில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தையும் அவரிடம் சொன்னான்! அவனையும் ராஜீவியையும் மாறி மாறிப் பார்த்த ஜிம்மிக்ஸ் விஷ்ணு, "உண்மையான காதலர்களை உலகமே காதலிக்கும்! உங்கள் காதலுக்கு நான் உதவத் தயார்! ஆக்சுவலாக, கோகுல் அவர்களும் என்னைத் தொடர்பு கொண்டார்!  என்னிடம் இந்தப் போட்டியில் தான் தான் ஜெயிக்க வேண்டும் என்றும், உங்கள் பெயரைச் சொல்லி, உங்களைத் தோற்கடித்துத் தன்னை ஜெயிக்க வைத்தால் ரூபாய் 25 லட்சம் தருவதாகவும் சொன்னார்! லஞ்சத்திற்கு நான் மயங்குகிறவன் இல்லை! ஆனாலும், நான் மாட்டேனென்றால், அவர் வேறு யார் மூலமாக முயற்சிக்கலாம் என்பதால், என் பதிலை யோசித்துச் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்! நீங்கள் ஃபோனில் என்னிடம் பேசியவுடன் நான் உங்களைப் பார்க்க ஒப்புக் கொண்டதற்கு கோகுல் தான் முக்கிய காரணம்!" என்று புன்னகையுடன் சொன்னார்!

"சார், அப்போ நீங்க எங்களுக்கு உதவுகிறீர்கள்! கடவுளே நேரில் சொன்ன மாதிரி இருக்கு! புதையலுக்கான க்ளூவை மட்டும் சொல்லி விட்டால்..." என்று முரளி அவரைக் கேட்டான். "வெயிட், வெயிட்,  இதை நான் ஹேண்டில் செய்கிறேன். போட்டிக்கு நாலைந்து குறியீடுகள் கொண்ட க்ளூக்கள் இருக்கு! எதைக் கொடுப்போம் என்று கடைசியில் குலுக்கலில் தான் தீர்மானிப்போம்! என் கம்பெனிக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன், ஆனால் எப்படியாவது உங்கள் காதலுக்கு உதவி செய்கிறேன்! என்னை நம்புங்கள்! " என்று சொன்ன ஜிம்மிக்ஸ் விஷ்ணு, "நம்மை ஒன்றாக யாராவது பார்த்தால் ஆபத்து, இங்கிருந்து கிளம்பலாம்! என்னிடம் இனி பேச வேண்டுமானால், இந்த நம்பரில் கூப்பிடுங்கள், ஆனால் இது எமர்ஜன்சிக்கு மட்டும் தான்! தேவையான தருணத்தில் நானே உங்களுக்கு இன்ஃபர்மேஷன் தருகிறேன், இதே நம்பரிலிருந்து." என்று ஒரு கைப்பேசி இலக்கத்தைக் கொடுத்தார்! முரளி, விஷ்ணு இவர்களின் தொடர்பு எண்களையும் விலாசத்தையும் வாங்கிச் சென்றார்! முரளி   ஏற்கெனவே வேறு 'விஷ்ணு'க்கள் அவன் கைப்பேசியில் ஸேவ் செய்யப்பட்டிருந்ததால்,  அவர் புதிதாகக் கொடுத்த கைப்பேசி இலக்கத்தை 'Vishnu informer' என்று தன் கைப்பேசியில் அடைக்கலப்படுத்தினான்!  

போட்டி நாளும் வந்து விட்டது!  போட்டிக்குச் சற்று முன் ராஜீவி முரளியிடம், "கோகுல் ரொம்ப சந்தோஷமாயிருக்கான்; என்னிடம், நீ தோற்கப் போவது உறுதி என்று சொல்லியிருக்கிறான். எனக்கென்னவோ...." என்று ஆரம்பித்ததும், முரளி, "நான் விஷ்ணு சாரை நம்புகிறேன்! என் நண்பன் விஷ்ணு எனக்கு எப்படி உதவி செய்வானோ, அப்படியே அவரும் கட்டாயம் செய்வார்! அதனால் தான் அவர் பேரும் அதே பேராய் அமைந்திருக்கு!" என்று சிரித்துக் கொண்டே சொன்னான்! ஆனால், அவரிடமிருந்து எந்த ஃபோனும் வரவில்லை! அவருடைய ஃபோன் நம்பர்களுக்குப் பேசினால், சுவிட்ச் ஆஃப் என்றே தகவல் வந்தது! நேரம் ஆகி விட்டதால், ராஜீவியிடம் விடை பெற்று போட்டிக்குச் சென்றனர், முரளியும் அவன் நண்பன் விஷ்ணுவும்!

போட்டிக்கான க்ளூவைக் கொடுத்தனர். அந்தப் பெரிய மைதானத்தில், உலக வரைபட மாதிரியில் பல்வேறு நாடுகளும் அவற்றில் வித விதமான ஸ்டால்களும் அமைக்கப்பட்டிருந்தன. க்ளூவை வைத்துக் கொண்டு அவர்கள் குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு பொருளைக் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு வர வேண்டும். இவர்களுக்கு உதவ உலக வரைபட அட்லாஸ், என்ஸைக்ளோப்பீடியா இவையும் கொடுக்கப்பட்டன (எப்படியும் செல்ஃபோனை வைத்துக் கண்டுபிடிக்கப் போகிறார்கள், தாமே கொடுத்து விடலாமே என்று)! தன் க்ளுவைப் பார்த்தான் முரளி! கையால் எழுதப்பட்ட அந்தத் துண்டு சீட்டில், SUU H2 6F என்று எழுதியிருந்தது! முரளியும் விஷ்ணுவும் ஆலோசித்தனர்! SUU என்றால் என்ன, H2 மற்றும் 6F எவற்றைக் குறிக்கிறது என்று! உலக வரைபடம் இருந்ததால், நாட்டைக் கண்டுபிடித்தால், அந்த நாட்டின் பிரபலமான பொருளைக் கண்டுபிடித்து விடலாம்!! யோசித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு, H2 மற்றும் 6F உலக அட்லாஸில் அடையாளம் காண்பிக்க, வரைபடத்தை, A, B, C,... போன்ற எழுத்துக்களாலும், 1,2,3,... என்ற எண்களாலும் பிரித்திருப்பார்கள் என்று ஞாபகம் வந்தது!! அட்லஸில் அப்பெண்டிக்ஸ் H-ல் ஆரம்பித்த இண்டக்ஸில் H2 என்ற பக்கத்தில் பார்த்தனர்!! அதில் L-ல் ஆரம்பித்து நிறைய நாடுகளின் பெயர்ப் பட்டியல் இருந்தது! முதலில் இருந்த SUU முக்கிய க்ளூ என்று உணர்ந்தவுடன், இந்தப் பெயரை எங்கே கேட்டிருக்கிறோம் என்று இருவரும் விவாதித்தனர்!

சூ... என்ற பெயர் சைனாவில் வருமா இல்லை வேறு எங்கும் என்று யோசித்த போது Aung San Suu Kyi பெயர் நினைவுக்கு வந்தது! பர்மா என்ற மியான்மரில் வீட்டுச் சிறையிலே வைக்கப்பட்ட தலைவி, நோபல் அமைதிப் பரிசு, ஜவஹர்லால் நேரு பரிசு எனப் பல விருதுகளைப் பெற்றவர்!! "யுரேகா! நாம் மியான்மரைத் தான் தேட வேண்டும்!"

அவர்களுக்கு அளித்திருந்த அட்லஸில் மியான்மரில் 6 -F- கட்டத்தில் ரங்கூன் என்ற Yangon! உடனே மைதானத்தில் மியான்மர் நாட்டுப் பகுதிக்கு விரைந்தனர் அவர்கள்! அங்கே எதிர்கொண்டழைத்தன மூன்று ஸ்டால்கள்! அவற்றில் எதில் நுழைவது? கோவில் போன்ற ஒன்று, படகு வீடு போன்ற ஒன்று,கோவிலுமில்லாமல் மசூதியுமில்லாமல் ஒன்று! 

முரளி கையில் உள்ள என்சைக்ளோபீடியா உதவியுடன் சொன்னான், "நாம் மூன்றாவது ஸ்டாலில் தான் நுழைய வேண்டும்; ரங்கூனில் ஒரு பழங்காலப் புத்தரின் ஆலயம் இருக்கிறது - Shwe Dagon Pagoda – இது தான் அது" என்று! அந்த ஸ்டாலில் நுழைந்து 'வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்' என்ற குறிப்போடு இருந்த புத்தர் சிலையொன்றையும் கைப்பற்றினர்! 

 

             
போட்டி முடிந்த மணி ஒலித்த பின், பலரும் வெறுங்கையோடு வந்த போது ஒரு பொம்மைத் துப்பாக்கியோடு கோகுலும் வந்தான்!!

முரளியின் குழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது! கோகுல் கடுகடுத்தபடியும், எஸ்.பி. புன்னகைத்தபடியும் வாழ்த்தினர்! முரளி பற்றிய தகவல்களைக் கேட்டறிந்த எஸ்.பி., தம் அலுவலகத்திற்கு வேலைக்கு வர முடியுமா என்று கேட்டார்! அருகே வந்த ராஜீவி, "உங்கள் மாப்பிள்ளையாக வரவும் அவர் ரெடி!" என்று சொன்னாள்!! முரளி, "சார், நானே உங்களிடம் நேரில் வந்து இது குறித்துச் சொல்லலாம் என்றிருந்தேன்! உங்களுக்குப் பிடித்த போட்டியில் வென்ற பின் சொல்லலாம் என்று தான்....! ஆனால், உங்கள் கம்பெனியில் வேலை செய்ய எனக்கு தற்போது விருப்பமில்லை, மன்னித்துக் கொள்ளுங்கள்! அதற்குப் பதிலாக என் சிறந்த பாதி - better half தான் அங்கு இருக்கப் போகிறாளே!!" என்று சொன்னான். கேட்டுக் கொண்டிருந்த கோகுலுக்கும் மகிழ்ச்சி! முரளிக்குக் கைகொடுத்து "கங்கிராட்ஸ் மாப்பிள்ளை" என்று தன் ஒப்புதலையும் குறிப்பாக வெளிப்படுத்தினான்!! முரளியின் பெற்றோரோடு அடுத்த ஞாயிறன்று பேச வருவதாக எஸ்.பி. சொன்னார்!! திருமணம், வெற்றிப் பரிசான அமெரிக்க ட்ரிப்பை ஹனிமூன் ட்ரிப்பாக இருக்கும் வண்ணம் நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்!!

தம் தங்குமிடத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்த முரளியும், விஷ்ணுவும், ஜிம்மிக்ஸ் விஷ்ணு ஒன்றும் உதவி செய்யாமலேயே வென்று விட்டதாகப் பேசிக் கொண்டிருந்தனர்!! ஆனாலும் கோகுல் ஏன் பொம்மைத் துப்பாக்கியுடன் வந்தான் என்றும் அவர்களுக்குப் புரியவில்லை! வீட்டில் நுழையும் போது கொரியரில் ஒரு கவர் வந்ததாக பக்கத்து ஃப்ளாட்டில் கொடுத்தனர். பிரித்த போது அதில் இரு துண்டுச் சீட்டுகள்:

Mr. கோகுல்,
S W H2 6F - இதுதான் குறியீடு கவனம்
- விஷ்ணு

Sir,
எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான
குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்
கவலை வேண்டாம்.
-- விஷ்ணு


அவற்றை மேஜையில் வைத்து, புரிந்து கொள்ள முரளி முயற்சித்த போது, கைப்பேசி ஒலித்தது; Vishnu Informer கூப்பிடுவதாக அறிவித்தது கைப்பேசி! 

பேசிய ஜிம்மிக்ஸ்-கம்-இன்ஃபார்மர் விஷ்ணு, "கங்கிராட்ஸ், என் சீட்டுகளைப் பார்த்தீர்களா? போட்டிக்கு முன்பே உங்களிடம் கொடுக்க முயற்சித்தேன், முடியவில்லை!  அதான் கொடுத்தனுப்பினேன்!  கோகுலுக்கு உதவுவதாகச் சொல்லி, அவனுக்கு SUU என்பதை SW என்று - அதாவது எஸ் டபுள்யூ என்று படிக்க வேண்டும் என்று சொல்லி விட்டேன்! க்ளூவை மாற்றி விட்டேன்! அவனுக்கு போட்டி தொடங்கும் முன் கொடுத்த அந்தச் சீட்டையும் உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன், பாருங்க! SW என்றால் ஸ்வீடனா, ஸ்விட்சர்லாந்தா என்று குழம்பி கடைசியில் Smith Wesson பொம்மைத் துப்பாக்கியை பிடித்து வந்து விட்டான் கோகுல்! ஹா ஹா ஹா!" எனச் சிரித்து விட்டு, "முரளி, தயவு செய்து கல்யாண இன்விடேஷனை எனக்கு அனுப்பிடாதீங்க, அனுப்பினாலும் நான் வர முடியாது இல்லையா?!! கல்யாணப் பரிசை தான் நான் முன் கூட்டியே கொடுத்து விட்டேனே!! குட்-பை! God bless you!" என்று சொல்லி, முரளி நன்றி சொல்லக் கூட வாய்ப்பளிக்காமல் ஃபோனைத் துண்டித்தார்!

தனக்கும் ராஜீவிக்கும் பிறக்கப் போகும் முதல் குழந்தைக்கு, விஷ்ணு என்றோ, விஷ்ணுப்ரியா என்றோ தான் பெயர் வைக்கப் போவதாக முரளி முடிவு செய்து விட்டான்!! கைப்பேசியில் அந்தக் குழந்தையின் ஃபோன் நம்பரை ஸேவ் செய்யும் காலம் வரும் போது ஒரு வேளை - 'விஷ்ணு ஜுனியர்' என்று வைப்பானோ என்னவோ!!

Friday, October 28, 2011

ஏழாம் அறிவு - வேலாயுதம் - Assassin's creed!

ஏழாம் அறிவும் வேலாயுதமும் இப்போது ரிலீஸ் ஆன திரைப்படங்கள். Assassin's creed என்றால் என்ன என்று கேட்கும் என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு(!), அது ஒரு game - விளையாட்டு!. Assassins என்னும் பெரும் கொலைகாரர் பரம்பரை (creed)- யில் பிறந்து மிஞ்சியிருக்கும் சிலரில் ஒருவருக்கு, அவரது DNA இன்ன பிற அம்சங்கள் மூலம் அந்தக் காலத்துக்கே சென்று, பற்பல சாகசங்களைச் செய்யும் கணிணி - வீடியோ கேம் விளையாட்டு! Bleeding effects மூலம் தன் முன்னோரின் ஸ்கில்ஸை அவர் அடைவார்!  இதன் சமீபத்திய வெர்ஷன் - Brotherhood ஆகும்.  நவம்பரில் அடுத்ததாக Revelations வரப் போகிறது.  இந்த விளையாட்டுக்கு என் மகன்கள் இருவரும் ரசிகர்கள். அவர்கள் சொல்லி நான் இதைப் பற்றித் தெரிந்து கொண்டேன். முழுமையான விவரங்களுக்கு விக்கிபீடியாவில் பாருங்கள்!

Assassin's creed கதையை எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தால், --- ஏழாம் அறிவு விமர்சனத்தைப் படித்தவர்களுக்குக் கட்டாயம் இப்படித் தோன்றும்!!  போதி தருமர் என்னும் தமிழர், இங்கிருந்து சீனா சென்று அங்கு அவர் சொல்லித் தரும் உடற்பயிற்சிக் கலையே குங்க்ஃபூ (உண்மை); அவரது வம்சாவழியில் வரும் சூர்யா, DNA இன்ன பிற சமாச்சாரம் மூலம் அழிந்த கலைகளை இக்காலத்துக்கு கொணரும் முயற்சி கதையில் ஒரு முக்கிய அம்சமாக வருகிறது.

வேலாயுதத்திற்கும் Assaassin's creed -க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், கீழே உள்ள படங்களைப் பாருங்கள்:


ஃபேஸ் புக்கில் இது குறித்து ஏற்கெனவே சிலர் படித்திருந்திருக்கலாம். வேலாயுதம் Azad என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக் என்பதை அறிந்திருப்பீர்கள்.  தமிழ்க் கதையில் காமெடி கலந்து, வெகு நாட்களுக்குப் பின் விஜய் ரசிகர்களுக்குப் பிடித்தமான படமாக வந்திருப்பதாக விமர்சனங்கள் கூறுகின்றன.  Assassin's creed விளையாட்டிலிருந்து காட்சிகளை நகலெடுத்திருப்பது இளைய ரசிகர்களைக் கவர்வதற்காக இருக்கலாம்!  

தமிழ் சினிமாவில் கற்பனை வளங்கள் குறைந்து விட்டனவா?!!

Tuesday, October 25, 2011

தீபாவளி - சிறப்புப் பேட்டி!!

அந்தக் காலத்தில் என் அப்பா ஒவ்வொரு தீபாவளிக்கு முதல் நாளும், 'விடிந்தால் தீபாவளி, பௌர்ணமி நிலவு ஒளி வீசிக் கொண்டிருந்தது' என்று கடி ஜோக் அடித்துக் கொண்டிருப்பார்!   இப்படி எழுதிக் கொண்டிருந்த போது, சக பதிவர்களின் அன்றைய தீபாவளி - இன்றைய தீபாவளிப் பதிவுகள் பலவற்றைக் கண்டேன்.  சரி, தொலைக்காட்சி பாணியில் சிறப்புப் பேட்டி எடுக்கலாம் என்று கிளம்பி விட்டேன்!  கேள்விகளை எழுதித் தயார்ப்படுத்திக் கொண்டேன்.

அந்த முக்கியமான மனிதரிடம் பேட்டி வேண்டும் என்று கேட்டவுடன் ரொம்பவும் தான் அலட்டிக் கொண்டார்!  மிகவும் கெஞ்சிக் கேட்ட பின் ஐந்து நிமிட பேட்டிக்கு ஒத்துக் கொண்டார்!  இனி மினி பேட்டி:

கேள்வி 1: பேட்டியை ஆரம்பிக்கலாமா? உங்களைப் பற்றி...
பதில்:   'லோக க்ஷேமம் வஹாம்யகம்'!!  எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ இறைவன் அருளட்டும்!  

கேள்வி 2: தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?
பதில்:    இப்போதைய தீபாவளிக் கொண்டாட்டங்களில் விதவிதமான பட்டாசுகள் வந்து விட்டன.  வாண வேடிக்கைகளை, வானத்தில் பார்த்து மகிழ நன்றாகத் தான் இருக்கிறது.  தொலைக்காட்சி பார்ப்பதும் வெடிகளின் சத்தத்தில் கடினம் தான்; அதனால், புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து,   சுற்றம், சொந்தத்தோடு, இனிப்புகள் பரிமாறி, பண்டிகையைக் கொண்டாடுவோம்!!      

கேள்வி 3: ம்,... உங்கள் முதல் தீபாவளி நினைவுகளைச் சொல்லுங்கள்
பதில்:   தீபாவளி என்றால் குடும்பத் தலைவனுக்கு செலவுகள் தான் ஞாபகம் வரும்! குழந்தைகளுக்கு பட்டாசும் புத்தாடையும் ஞாபகம் வரும்!  

கேள்வி 4:  தலைதீபாவளி..?
பதில்:  எங்கள் குடும்பத்தில் அப்போது 8 குழந்தைகள்.  அப்பா ஐம்பது ரூபாய்க்கு பட்டாசு வாங்கி, எல்லாருக்கும் பங்கு பிரிச்சுத் தருவார்! ஒரு சர வெடி, ஒரே ஒரு கலசம், சக்கரம், ஒத்தை வெடி பாக்கெட் என்று என் பங்குக்கு வருவதை சந்தோஷமாக வெடிப்பேன்.  எல்லாருடனும் சேர்ந்து வெடிகளை வெடித்து, ஜாலியாகப் பொழுது போகும். 

கேள்வி 5: இப்போதைய தீபாவளி.?
பதில்:  தலை தீபாவளியை மறக்க முடியுமா?  ஆமாம், அந்த தீபாவளிக்கு என் மனைவி பணியின் காரணமாக வெளியூரில் இருந்ததால், அந்த ஒரு நாள் மட்டும் வந்து போனாள்; சொந்தக்காரர்கள் அவளுக்கு முன்பே வந்திருந்தனர்!! 
 
கேள்வி 6: மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
பதில்: வணக்கம்.  என்னைப் பற்றித் தெரியாதா என்ன? நான் என்ன பெரிய ஆளுன்னு என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள்?


பேட்டி கொடுத்த முக்கிய நபர் என் கணவர்!  பதில் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறதே என்று என் மேல் பரிதாபப்படும்முன் (!!)   என் கேள்விக் குறிப்புகளின் கீழே, பதில்களை நான் தான் மாற்றி எழுதி விட்டேன்!!  முதல் மற்றும் கடைசிக் கேள்விகளின் விடைகள் அப்படியே மாறி விட்டன. இரண்டாம் கேள்விக்கான பதில்   மூன்றில்,  மூன்றாம்   கேள்விக்கான பதில்   நான்கில்,   நான்காம் கேள்விக்கான பதில   ஐந்தில் , ஐந்தாம் கேள்விக்கான பதில்    இரண்டில் !!


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! முடிந்த வரை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தீபாவளியைக் கொண்டாடுவோம்!.  ராக்கெட் போன்ற வெடிகளை அதற்கான  உரிய இடத்தில் தகுந்த பாதுகாப்போடு வெடிப்போம்!   கீழே இருக்கும் வாணத்தை மட்டும் இங்கேயே விடலாம்!! :-))

Tuesday, October 18, 2011

கதம்பம் -9

சவால் - சிறுகதைப் போட்டி 2011 
இம்முறையும் சிறுகதைப் போட்டியை பரிசல்காரன்   சிலரோடு சேர்ந்து அறிவித்துள்ளார். விவரங்களை இந்த இரண்டு   சுட்டிகளிலும் பார்க்கவும். போட்டிக்கான விதிமுறைகளைப் பின்பற்றி, கடைசி நாளான 31-10-2011 க்குள் அனுப்புங்கள்! முன்பே இந்த அறிவிப்பைப் பார்க்காதவர்களுக்குத் தான் இந்த தகவல்!

இந்த தகவலை நான் இங்கு சொல்லக் காரணம் இருக்கிறது. 18-10-2010 அன்று தான் சவால் சிறுகதைப் போட்டி (2010 )க்காக நான் முதல் முதலாக இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்தேன். இந்த அனுபவத்தை இன்னொரு பதிவிலும் பகிர்ந்துள்ளேன்!! சிறுகதை ராஜா/ராணி களே, தூள் கிளப்புங்க!

3 முட்டாள்கள் - நண்பன்


பல நாட்களாகப் பார்க்க ஆசைப்பட்டு, தற்சமயம் தான் 3 இடியட்ஸ் ஹிந்தித் திரைப்படத்தைப் பார்க்க முடிந்தது. மிகவும் ரசித்துப் பார்த்தோம் - தெரிந்த ஹிந்தியில் புரிந்த வரை! ஆமிர் கான், (நம்) மாதவன், ஷர்மான் ஜோஷி, கரீனா கபூர் மற்றும் பலர் நடித்த படம். வீரு என்ற வைரஸ் ப்ரொஃபஸரிடம் ஆமிர்கான் பாத்திரம் (எந்தப் பெயரைச் சொல்வது? :-)) ) கேட்கும் கேள்வியிலிருந்து படத்துடன் ஒன்ற ஆரம்பித்து விட்டோம்! 

வைரஸ் அந்த இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு முதல் நாள் பேச்சில், 'இந்தப் பேனா மிகவும் அபூர்வம், விண்வெளியில் அஸ்ட்ரோநாட்ஸ் எழுதுவதற்கு எந்தப் பேனாவினாலும் இயலவில்லை, பல கோடிகள் செலவழித்து இந்தப் பேனாவைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். எந்த மாணவன் மிகவும் திறமைசாலியோ அவனுக்கு இதை நான் தருவேன், உங்களில் யார் இந்தப் பேனாவை வாங்கப் போகிறீர்கள்?' என்று கேட்டவுடன், எல்லாரும் தான் என்று கை தூக்குகிறார்கள் -  கை தூக்கும் கான், 'ஏன் அவர்கள் பென்சிலில் எழுதவில்லை, இவ்வளவு கோடிகளை மிச்சம் பண்ணியிருக்கலாமே!' என்று வினா எழுப்பினார். ரசித்த காட்சி!

படத்தைப் பற்றி வேறொன்றும் சொல்லப் போவதில்லை - இந்தப் படம் நண்பன் என்ற பெயரில் இயக்குனர் சங்கர் எடுக்கப் போவதாகவும், அதில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா நடிக்கப் போவதாகவும் செய்தி வந்திருந்ததாக ஞாபகம். அப்போது படத்தின் சஸ்பென்ஸ் உடையக் கூடாது இல்லையா, அதனால் தான் கதையைச் சொல்லவில்லை! ஆனாலும் ஆமிர் கான் ரோலில் விஜய்.....  ஹிந்திப் படத்தில் வில்லன் சதுர் ராமலிங்கம் என்ற பாண்டிச்சேரியில் படித்த ஹிந்தி தெரியாத காரக்டர் - நம்மைக் கிண்டலடிக்கிறார்களோ என்ற என் ஆதங்கம், தமிழ்ப் படத்தில் ஹிந்திக்காரர் வில்லனா என்று பார்க்கும் போது தீரலாம்!

பாப்பையும் ஆலிவ்வும் மற்றும் நானும்.. 


இந்த ஞாயிறு இந்தியன் எக்ஸ்பிரஸில் Popeye and Olive கார்ட்டூனில், ஆலிவ் பாப்பையைக் கோவித்துக் கொள்கிறாள், 'நான் இன்று என் பிறந்த நாளுக்காக ஒன்றும் வாங்காதே என்று சொன்னேன் அல்லவா,' என்று; அவன் கேட்கிறான், 'ஆமாம், அதற்கென்ன' வென்று. அவளும், 'திரும்பத் திரும்ப சொன்னேனல்லவா, ஒன்றும் வாங்காதே என்று' என்று கேட்கிறாள். அவனும், 'ஆமாம், அதுதான் நான் ஒன்றும் வாங்கவில்லையே!' என்கிறான். ஆலிவ் கோபமாகக் கேட்கிறாள், 'அதான் நானும் கேட்கிறேன், ஏன் ஒன்றும் வாங்கவில்லை??' !!

படித்துச் சிரித்த எனக்கு பயமாகவும் உள்ளது. என் மாமியார், அம்மா இருவருமே இந்தத் தீபாவளிக்கு தங்களுக்கு புதுப் புடவை ஏற்கெனவே இருப்பதால் வாங்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள் (தனித் தனியாகத் தான்); நானும் வாங்கவில்லை  .......

Thursday, October 6, 2011

ஃபிஃப்டி-ஃபிஃப்டி!!

     அது ஒரு ஞாயிறு மதியம். அப்பா ராஜா, அம்மா தேவி, மகன் ஆனந்த், மகள் ஆர்த்தி நால்வரும் மதிய உணவு முடிந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். நடுவில் தொலைகாட்சிப் பெட்டியும் பேச்சுக்குத் தீனி கொடுத்துக் கொண்டிருந்தது. ஓடிக் கொண்டிருந்த திரைப்படத்தில் ஹீரோ, ஹீரோயினோடு திடீர் ம்யூஸிக்கோடு வெளிநாட்டுக் காட்சிகள் வர, ஆர்த்தி "பாட்டு வரப் போகுது!" என்று தன் ஞானத்தை வெளிப்படுத்தினாள். ஆனந்த், " அப்பா, சானல் மாத்துங்க!" என்றான்.

     ராஜா, "ஏன்ப்பா, உன் வயசுப் பசங்க SS Music, Sun Music அது இதுன்னு தான பார்க்கறாங்க, நீ ஏன் மாத்தச் சொல்றே?" என்றவாறே டைம்ஸ் நவ்விற்கு சானலை மாற்ற, ஆர்த்தி, "அப்பா, அவன் எமினம் பாட்டெல்லாம் ஐபாடில டவுன்லோட் செய்து கேட்டுட்டுத் தான் இருக்கான்!" என்று போட்டுக் கொடுத்தாள்! ஆனந்த சட்டென்று, "அப்பா, நம்ம சினிமால தான் மரத்தச் சுற்றி, மலையைச் சுற்றி பாட்டு வருது, நிஜ வாழ்க்கையில யாராவது டூயட் பாடுவாங்களா?" என்றான். தேவி உடனே, "ஆமாங்க, நாம டூயட் பாடியிருக்கோமா என்ன, அதுவும் வெளிநாட்டுக்குப் போய்?" என்றாள்!

     ராஜா, "குட்டீஸ், இசையை எந்த மொழில வேணும்னாலும் ரசிங்க, தப்பில்லை; ஆனந்த், நம் நாட்டில் இயல், இசை, நாடகம்னு இருந்தது. இயலும் இசையும் நாடகத்தில் கலந்தது, இந்த நாடகத்திலருந்து தான் நம் நாட்டில் சினிமா வந்தது. அதனால தான் இன்னமும் நம் சினிமால பாட்டு" என்று விளக்கினான். தேவி, "அவனுக்கு விளக்கம் சரி, என் கேள்விக்கென்ன பதில்?" என்று கடைசிப் பகுதியைப் பாட்டாகவே கேட்டாள்!

     ஆர்த்தி, "அம்மா, அப்பாவை ஏன் சண்டைக்கு இழுக்கறே, நாங்க ரண்டு பேரும் சண்டை போட்டா மட்டும் திட்டறே?" என்று கேட்க, "ம், இப்போ என் பெண் கேள்விக்கென்ன பதில்?" என்று சிரித்துக் கொண்டே ராஜா தேவியைக் கேட்டான். தேவி, "ஆர்த்திக்குட்டி, இது சண்டையில்லம்மா, சும்மா விளயாட்டு வம்பு. ரண்டு பேர் இருந்தா கருத்து வேறுபாடு வரத்தான் வரும், சண்டை -ஆர்க்யுமென்ட் வரும். ஆனால், ஒருத்தரொருத்தர் கருத்தைத் தெரிந்த பிறகு, ஒருத்தர் மற்றவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். இத நீங்க செய்யாத போது தான் நான் திட்டறேன்!" என்றாள்.

     ஆனந்த், "ஆர்த்தி எப்பவுமே விட்டுக் கொடுக்க மாட்டேன்றாள், நானே விட்டுக் கொடுக்கணுமா? நான் மட்டும் உங்கள் பிள்ளயில்லயா?" என்று முறையிட, தேவி, "விட்டுக் கொடுக்கறதில எப்பவும் ஃபிஃப்டி-ஃபிஃப்டி தான் இருக்கணும் - ரண்டு பேரும் விட்டுத் தரணும்! ஆர்த்தி, இனி உன் அண்ணன்கிட்டயிருந்து இந்த மாதிரி புகார் வரக் கூடாது, சரியா?" என்று சொல்ல, ஆர்த்தி சரியென்று தலையாட்டினாள். ஆனந்த், "ஹை, அம்மா, அதனாலத் தான் எங்களுக்கு அடிக்கடி ஃபிஃப்டி-ஃபிஃப்டி பிஸ்கெட் வாங்கித் தரயா?" என்று கேட்க, "குறும்பு!" என்று சொன்னபடி அவன் காதைத் திருகிய தேவி, "என் குழந்தைங்க ரண்டும் ஜெம்ஸ்னுட்டு அடிக்கடி ஜெம்ஸும் வாங்கித் தரேனே" என்று தன் பங்குக்குக் 'கடி'க்க, 'ரம்பம்!" என்று சொன்னபடி எல்லாரும் சிரித்தனர்.

     மாலையானதும் குழந்தைகள் விளையாடிவிட்டு, ஹோம்வொர்க் செய்ய, தம் அறைக்குச் சென்றனர். ராஜா, இசையுலகில் உலவ, கணிணிக்குச் சென்றான். வீட்டு வேலைகளை முடித்த தேவி அயர்வுடன், திரும்பத் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்தாள். சானல் சர்ஃபிங்கில் மசாலாப் படங்களில் மாறுபட்டுத் தெரிந்த அந்த படத்தைப் பார்க்க ஆரம்பித்தாள். குழந்தைகள் இரவு உணவு உண்டு, மிச்ச ஹோம்வொர்க் எழுத்து வேலையை அங்கேயே முடிப்பதாகச் சொல்லி எழுத ஆரம்பித்தனர்.
    ராஜா, "குழந்தைங்க சாப்பிட்டாச்சா?" என்று கேட்டபடி சாப்பிட வர, ராஜாவும் தேவியும் சாப்பிட ஆரம்பித்தனர். "என்ன சினிமா பார்க்கறே?" என்று ராஜா கேட்க, தேவி, "ஏதோ மதுரை டு தேனின்னு பஸ் ரூட் போட்டு படம்; வித்தியாசமா இருக்கு" என்று ரிமோட்டில் தன் உரிமையை நிலைநாட்டினாள்!. சாப்பிட்டு முடித்தாயிற்று.

    ஒரு பாட்டு ஓட ஆரம்பிக்க, தேவி, "இந்த ட்யூன் தெரிஞ்சா மாதிரி இருக்கே, ம்...." என்றவள், "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே" என்று பாட ஆரம்பித்தாள். ராஜா, "இல்லை, இது 'ஏச்சுப் பொழக்கும் தொழிலே சரிதானா, எண்ணிப் பாருங்க'ங்கற பாட்டு, நீ சொல்ற பாட்டு இல்ல!" என்றான்!
 
     "என் அப்பா பாடி நான் கேட்டிருக்கேன், நான் சொன்ன பாட்டுத் தான், M K தியாகராஜ பாகவதர் பாடினது" என்றாள். ராஜாவோ, "இது MGR பாட்டு, மதுரை வீரன் படம்" என்று சொல்ல, அங்கு ஒரு கருத்து வேறுபாடு - சண்டையானது. திரையில் பாடல் முடிவுக்கு வந்தது, "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே"என்ற வரிகளோடு! தேவியின் கொண்டாட்டத்தைக் கேட்க வேண்டுமா! ராஜாவோ தான் சொன்ன பாட்டு சரி தான் என்றும், இந்தப் பாடல் முடிந்தது வேண்டுமானால் - தேவி சொன்ன பாட்டில் என்றும் சொல்லிக் கொண்டிருந்தான்!

    குழந்தைகள் பெற்றோரிடம் வந்து, "அம்மா, எங்களை சண்டையில் விட்டுத் தரச் சொன்னியே, இப்ப நீ விட்டுத் தாம்மா! அப்பா, நீயும் தான்ப்பா" என்று கேட்க, தேவி "விட்டுத் தரதில ஃபிஃப்டி-ஃபிஃப்டி வேணாமா?" என்று சொன்னவாறு அந்த இடத்தை விட்டு நகர, சண்டை ஒருவழியாக ஓய்ந்தது.

     தேவி அடுத்த நாள் ராஜா, குழந்தைகள் கிளம்பி அலுவலகம், பள்ளி என்று சென்றபின் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, கணிணியில் வலைத் தளங்களில் தங்கள் பிரச்னைக்குரிய பாடல்கள் பற்றியத் தகவல்களைத் தேட ஆரம்பித்தாள்.

     1939-ல் வெளியான 'திருநீலகண்டர்' படத்தில் M K தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே". இப்படத்தின் இசையமைப்பாளர் பற்றிய குறிப்புகள் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறாக இருந்தது.

     இசை மேதை திரு G.ராமனாதன் அவர்கள் M K தியாகராஜ பாகவதரின் தீவிர அபிமானி. அவர் இந்தப் பாடலின் இசையில் கவரப்பட்டு, தான் இசையமைத்த M G R நடித்த மதுரைவீரன்(1956-ல் வெளியானது) படத்தில் இதே ட்யூனில் "'ஏச்சுப் பொழக்கும் தொழிலே சரிதானா, எண்ணிப் பாருங்க" என்று TMSஐயும் ஜிக்கியையும் பாட வைத்தார்!

    தேவிக்குத் திகைப்பு - ஜெயித்தது யார், - இருவரும் ஆளுக்கு ஒரு பாடல் - அவரவருக்குத் தெரிந்ததைச் சொன்னோம், இருவரும் சரி!, ஜெயிச்சதிலயும் ஃபிஃப்டி-ஃபிஃப்டி!! ராஜாவுக்குக் கைப்பேசியில் விவரத்தைச் சொல்ல, ராஜா, "அப்போ, நான் ஆஃபிஸ் விட்டு வரும்போது ஸ்வீட் காரம் வாங்கி வரவா, ஜெயிச்சதுக்கும் தோத்ததுக்கும் ஃபிஃப்டி-ஃபிஃப்டி!!" என்றான்!!
குறிப்பு: பாடல்கள் இதோ:

1. 'மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி' படத்தில் இவர்களுக்குப் பிரச்னையான பாடல் 'கலகலக்கும் எங்க காலேஜ்..'(கடைசி வரிகள் சினிமாவில்):


2.  "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே" பாடல்:




3. "'ஏச்சுப் பொழக்கும் தொழிலே சரிதானா, எண்ணிப் பாருங்க" பாடலுக்கு: 


வீடியோவில் பார்க்க http://www.youtube.com/watch?v=VdDyCcros6g

டிஸ்கி: இது ஒரு மீள்பதிவு - பெயரிலேயே காரணம் இருக்கு!  உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி!
Thank You Graphics, Scraps and CommentsOrkut Scraps - Butterfly

Wednesday, September 28, 2011

சுண்டல் - அடுப்பில்லாமலே!

ஈஸியான சுண்டல் செய்யலாமா? செய்ய அடுப்பே தேவையில்லை. ஒரே ஒரு விஷயம், இன்னிக்கு சாயங்காலம் சுண்டல் சாப்பிடணும்னா, நேத்திக்கே முடிவு செய்து கொஞ்சம் தயார் செய்துக்கணும்! ! அதாவது, பச்சைப் பயறு இருக்கில்லையா, (டவுட் இருந்ததுன்னா, கீழே படத்தைப் பார்க்கவும்), அதை 10-12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கணும்.

ஊறிய பின் தண்ணீரை வடித்து, ஒரு துணியில் கட்டி வைத்தால், 10-12 மணி நேரம் கழித்து முளை விட்டிருக்கும்.

இந்த முளை கட்டிய பயறு, உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இதை ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடலாம்! இன்னும் சுவை வேணுமா, இத்துடன் கொஞ்சம் உப்பு, கொஞ்சம் மிளகுத்தூள் - கலந்து சாப்பிடுங்க! இன்னும் மாறுதலான சுவை தேவையா, கொஞ்சம் எலுமிச்சைச் சாறைக் கலந்துக்கோங்க!!

சுண்டல் எங்கேன்னு கேட்கறீங்களா,... இது தாங்க இயற்கைச் சுண்டல்! பழங்காலத்து முறைப்படி சுண்டல் வேணும்னா, கொஞ்சம் கடுகு, உளுத்தம் பருப்பு, வத்தல் மிளகாய் தாளித்துக் கொட்டி, லேசாக உப்பும், தேங்காயும் போட்டுச் சுண்டல் தயாரிக்கலாம்! ஆனால், இதற்கு அடுப்பு தேவைப்படும்!!

நாம் இப்போது அடுப்பை  உபயோகிக்காமல் சுண்டல் செய்யப் போறோம்! இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் தலைமுறைக்கு ஏற்ற சுண்டலா செய்யணும்னா, முளை கட்டிய பயறுடன், துருவிய காரட், நறுக்கிய தக்காளி, எலுமிச்சைச் சாறு, மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகுப் பொடியுடன் கலந்தால், ஹெல்த்தி சுண்டல் தயார், அடுப்பில்லாமலே!  உங்கள் தேவைக்கேற்ப சிப்ஸ், குர்குரே,  கார்ன்ஃப்ளேக்ஸ் போன்றவை சேர்க்கலாம்!!

இந்த சுண்டலுக்கு இனனுமொரு அட்வான்ட்டேஜ் என்னன்னா, முளை கட்டிய பயறை ஃப்ரிட்ஜில் சில நாட்கள் வைத்து  உபயோகிக்கலாம்! திடீர் விருந்தாளிகளுக்கு ரெடி சுண்டல் கொடுத்து அசத்தலாம்!

(யாராவது அறிவுஜீவிகள் இதை சுண்டல் இல்லை, சாலட் என்று சொன்னால், சொல்லி விட்டுப் போகட்டும்!! After all, what is in a name, a sundal is a salad is a sundal....)!!

நன்றி: ஃபோட்டோக்களுக்கு

Monday, September 26, 2011

நானும் ஆசிரியராகப் போறேன்!

அன்புத் தோழமை உள்ளங்களே,

நான் 26 செப்டம்பர் முதல் ஒரு வாரம் வலைச்சரத்தில் ஆசிரியராகப் பணியாற்றும் பணியை ஏற்றிருக்கிறேன்.  உங்கள் மேலான ஆதரவை எதிர்நோக்குகிறேன்.
 

எனது அறிமுகப் பதிவுக்கான சுட்டி இதோ. (26.09.2011 முதல் நாள் - ஊருக்கு நல்லது சொல்ல..)


நன்றியுடன்,
மிடில் கிளாஸ் மாதவி

02.10.2011
பணியை முடித்து விட்டேன் - இதோ மற்ற சுட்டிகளும்:
27.09.2011 இரண்டாம் நாள்: சொல் புதிது...சுவை புதிது...பொருள் புதிது....
28.09.2011 மூன்றாம் நாள்: மண் பயனுற வேண்டும்!!
29.09.2011 நான்காம் நாள்: வானகமிங்கே தென்பட வேண்டும்!
30.09.2011 ஐந்தாம் நாள் : கனவு மெய்ப்பட வேண்டும்!
01.10.2011 ஆறாம் இடுகை: மாநிலம் பயனுற வாழ்வதற்கே!
      ,,           ஏழாம் இடுகை: புதிய கோணங்கி!
02.10.2011 ஏழாம் நாள்: வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

நன்றி

Saturday, September 24, 2011

பழையன புகுதலும்...?

சந்திரலேகா - பட விமர்சனம்

இந்தப் படத்தை இப்போது தான் ரசித்துப் பார்த்து விமர்சனம் எழுத முடிகிறது!  அந்த மதியப் பொழுதில், வ்யிற்றுக்கு தயிர் சாதமும் வத்தக் குழம்பும் ஈந்து கொண்டு, கண்ணுக்கும் செவிக்கும் உணவுக்காக, தொலைக்காட்சியைப் பார்த்தேன்.  எப்போதோ, இரவு நேரத்தில் தூக்கக் கலக்கத்துடன் பார்த்த, 'சந்திரலேகா!'.  ஏற்கெனவே, என் பள்ளி நாட்களில், உணவு இடைவேளையில் வீட்டுக்கு சாப்பிட நானும் என் தங்கையும் வரும் பொழுதுகளில், கச்சட்டியில் பிசைந்த தயிர் சாதம், குழம்புடன், கையில் அம்மா உணவு உருட்டிப் போட்ட பழைய மலரும் நினைவுகளில் இருந்தேனா, இந்த கறுப்பு- வெள்ளைத் திரைப்படத்தை ஆர்வமுடன் பார்க்கலானேன்! (அன்று பழைய பட எதிர்ப்பாளர்கள் கல்லூரி/பள்ளிக்குச் சென்று விட்டனர்!)  கறுப்பு- வெள்ளைப் படங்களைப் பொறுத்த வரை, இந்த இரு நிறங்களைத் தவிர, வெவ்வேறு ஷேடில் அமைந்த சாம்பல் வர்ணங்கள் தாம் இருக்கும்  நிறங்கள் - இந்திந்த நிறங்கள் இப்படித் திரையில் தெரியும் என்று அதற்கும் திட்டமிட்டே அந்தக் காலத்தில் படம் எடுத்திருக்கின்றனர் என்ற ஆச்சரியமும் எப்போதும் எனக்கு உண்டு!  கூடவே, படமெடுக்கும் நேரத்தில் நடித்தவர்களை நேரில் பார்த்திருந்தால் என்னென்ன வண்ண ஆடைகளில் தோற்றமளித்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்த்து சிரித்ததுமுண்டு!

சந்திரலேகா - 1948-ல், எனக்கு ஓரிரு மூன்று தலைமுறைக்கு(!) முன்னே வந்த படம்.  ஆனாலும், தொழில் நுட்பத்தில், வசனத்தில், நடிப்பில் என்று எல்லாத் தரப்பையுமே ரசிக்க முடிந்தது.  கதை என்று பார்த்தால், சந்திரலேகா(டி.ஆர்.ராஜகுமாரி)வை, அந்த நாட்டின் இளவரசன் வீரசிம்மனும்(எம்.கே.ராதா), அவன் தம்பி சசாங்கனும்(ரஞ்சன்) விரும்புகின்றனர்.  சந்திரலேகாவின் அன்போ, மூத்தவருக்குத் தான், அவன் தான் இளவரசர் என்று தெரியாமலே!  சசாங்கன், தன் பெற்றோரைச் சிறையில் தள்ளி, அண்ணனைக் குகையில் போட்டு அடைத்து, அரசைக் கைப்பற்றுகிறான்.  சந்திரலேகாவையும் சிறைப்பிடிக்க, அவள் சாமர்த்தியமாக தப்பி ஓடி விடுகிறாள்.  அப்படி ஒளியும் போது, வீரசிம்மனை (அவளுக்கு பாபா) அடைத்து வைப்பதைப் பார்த்து விடுகிறாள்.  அந்த வழியில் போன ஒரு சர்க்கஸ் குழுவின் துணையோடு, அவனை விடுவித்து, அந்த சர்க்கஸ் குழுவினரோடு செல்கிறாள். 

சர்க்கஸ் சாகசங்களை மிக அருமையாகப் படம் பிடித்துள்ளனர்.  சர்க்கஸ் குழுவில் என்.எஸ். கிருஷ்ணனும் இருக்கிறார்; டி.ஏ.மதுரமும் இருக்கிறார் - பின் நகைச்சுவைக்குக் கேட்பானேன்!  கணக்கு உதைத்த போது, கணக்கர், யானைக்கு அல்வா வாங்கிப் போட்டதாகவும் புலிக்கு புல் வாங்கியதாகவும் எழுதச் சொல்லி, இன்றைய கணக்காளர்களுக்கு பாடம் எடுக்கிறார்!! ஆனால், அப்படி கணக்கு எழுதக் கூடாது என்று அவருக்கே மதுரம் அம்மாள் பாடம் எடுத்து விட்டார்!

கதை இன்னும் காடு, மலை தாண்டி, சந்திரலேகாவும் வீர்சிம்மனும் வில்லன்களுக்குத் தப்பும் போது, வேற்று மொழிப் பெண்கள் கூட்டத்தில் சேர்கின்றனர்.  அவர்கள் வேறு பாஷை பேசினாலும், அதற்கு மொழிபெயர்ப்போ, ஸப்-டைடிலோ வைக்காமல், சைகையிலேயும் பேச்சிலேயுமே புரிந்து கொள்ள வைத்திருக்கிறார்கள்! சபாஷ்!  சந்திரலேகா, வில்லன் பிடியில் மாட்டுகிறாள் - வீரசிம்மன் படைகளைத் தயார் செய்கிறான் - தம்பியை வென்று, பெற்றோரையும் சந்திரலேகாவையும் விடுவிக்க!

நான் ரசித்த இன்னொரு கதாபாத்திரத்தைச் சொல்ல வேண்டுமே -  அவர் சுந்தரிபாய் - ஆம், நாம் பிற்காலப் படங்களில் வில்லி சின்னம்மாவாகவோ, மாமியாராகவோ பார்த்தவர் தாம் - 'மழலைப்பட்டாளம்' என்ற படததிலும் வீட்டு ஓனர் மாமியாக வருவார் - இந்தப் படததில் சர்க்கஸ் பெண்ணாக வருகிறார்.  கதாநாயகியை, அரண்மனைச் சிறையில் பார்த்து, சசாங்கனைப் பிடித்ததாக நடித்து, தப்பிக்க வழியும் சொல்லிக் கொடுக்கும் கதாபாத்திரம்.  அருமையான நடிப்பு!  அந்தப் புகழ் பெற்ற முரசு நடனத்தை நடத்த வேண்டும் என்று சந்திரலேகா சசாங்கனைக் கேடக, பிரம்மாண்ட முரசு நடனம்!  முரசுகளிலிருந்து (Helen of Troy?) வீரர்கள் வந்து, சண்டை நடந்து, இறுதியில் சசாங்கன் வெல்லப்படுகிறான்!

அந்த முரசு நடனம் அனைவராலும் மறக்க முடியாதது - (அந்தத் தருணத்தில் பள்ளியிலிருந்த வந்த என் இளைய மகனை - இது தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான காட்சி பார் என்றவுடன் அவனும் ஆவலுடன் பார்த்தான்!)


ஆனால், இதை விட, சர்க்கஸில் 'நாட்டியக் குதிரை' பாட்டும் நடனமும் எனக்குப் பிடித்தது.  எவ்வளவு அழகான நடனம், பாட்டில் கிண்டல் எல்லாம் அமைந்திருக்கிறது பாருங்கள்! 'குதிரை'யின் கண்ணடிப்பைப் பார்க்க விட்டுவிடாதீர்கள்!



இந்தப் படத்தை எடுக்க 5 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன - சுதந்தரம் பெறுமுன்னே ஆரம்பித்து, பெற்ற பின்னர் வெளிவந்துள்ளது!  ஜெமினி ஃபிலிம்ஸில் திரு எஸ்.எஸ்.வாசன் முதல்முதலாகத் தயாரித்துள்ளார்.  பல சாதனைகளைப் படைத்துள்ள இந்தப் படத்தில் இடம்பெறும் சர்க்கஸ், தயாரித்த 'ஜெமினி' பெயராலேயே அழைக்கப்பட்டது என்றால் பாருங்கள்! ஹெலிகாப்டரிலிருந்து படத்தின் விளம்பர நோட்டீஸ்கள் பறக்கவிடப்பட்டதாம் - படத்தின் வசூலோ, அந்தக் காலத்திலேயே 2 கோடி  ரூபாய்கள்! ட்ரம் டான்ஸ் எடுக்க மூன்று மாதங்கள் ஆனதாம் - பின்னே இவ்வளவு தூரம் சொல்லிவிட்டு அந்த முரசு ஆட்டத்தைப் பார்க்காமல் இருக்க முடியுமா?

Sunday, September 11, 2011

கதம்பம்-8


நம்பிக்கை இந்தியர்கள்!

என் நண்பர் சொன்ன சம்பவம் இது.  அவர் டூரிஸ்ட் பேருந்துகளும் வாகனங்களும் நிறைய நிற்கும் இடத்தின் அருகே தான் தினமும் நகரப் பேருந்துக்காகக் காத்திருப்பார்.  அப்போது  'வாடிக்கை'யாக அங்கே நிற்கும் வாகனங்களிடம் 'மாமூல்' வாங்கும் ஒரு போலீஸையும் கவனித்திருக்கிறார். 

அன்று  மஹாராஷ்ட்ரா மாநில பேருந்து ஒன்றில் ஒரு போலீஸ்காரர் மாமூல் கேட்க, உள்ளிருந்து மூன்று, நான்கு பேர் இறங்கி வந்துள்ளனர்.  அவர்கள், 'அண்ணா ஹஸாரே ஜிந்தாபாத்!" என்று முழக்கமிட்டனராம்! பின்னர், ஹிந்தியில், 'ராம் லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராக ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார்.  நாடே அவருக்கு ஆதரவு தருகிறது!  நீ லஞ்சமா கேட்கிறாய்?' என்று எகிற,  லஞ்சம் கேட்டவர் எஸ்கேப்!

ஒரு விழிப்புணர்வோடு கிளம்பி விட்டது இந்தியா!


சகோதர உணர்வு எங்கே?

மேற்கண்ட சம்பவத்தில் சந்தோஷப்பட்ட சில நாளிலேயே, டில்லி ஹைகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்து சக இந்தியரைச் சாகடித்த துயர சம்பவம் வருத்தப்பட வைத்தது.

ராஜீவ் கொலை வழக்கில் அண்மையில் மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஒற்றுமையாக அனைவரும் எதிர்க்க முக்கிய காரணம், அது நியாயமா, இல்லையா என்பதை விட, இருபது வருடங்களாக அவர்கள் சிறையில் வாடி விட்டனர்;  மனித உயிரை மனிதரே பறிக்கக் கூடாது என்பதினால் தானே! 

சம்பந்தமே இல்லாத அப்பாவி மக்களை, அதுவும் நியாயத்திற்காக நீதிமன்றம் வருபவர்களை, அதிகம் மக்கள் நடமாடும் தினமாகப் பார்த்து,  குண்டு வைத்து அவர்தம் உயிரினைப் பறிப்பது எந்த வகையில் நியாயம்?  இப்படிப்பட்ட தீவிரவாதச் செயலகளுக்கு எதிரான விழிப்புணர்வு வருவது எப்போது?  அதற்கும் யாராவது ஒரு முக்கியப் பிரமுகர் உண்ணாவிரதம் இருக்கக் கூடாதா?!

இன்று செப்டம்பர் 11ந் தேதி இந்தப் பதிவு - தீவிரவாதச் செயல்களத் தீர ஒழிக்க வகை செய்வோம்!

லீலைகள் புதிது!
குழந்தைகள் கேள்விகளுக்குப் பதில் சொல்வதே கடினம் தான்.  அதுவும் என் குழந்தைகள், "காக்கா ஏன் கறுப்பா இருக்கு?" என்று கேட்டு,  "அது வெயிலில் அலைவதினால்" என்று பதில் சொன்னால் ஒத்துக் கொள்ளும் ஸ்டேஜைத் தாண்டி விட்டனர்!  இருந்தாலும் வீட்டில் அடிக்கும் கூத்துகளால் தான் மற்ற வருத்தங்களைத் தாண்டி வாழ்க்கை இனிமையாகப் போகிறது.

என் இளைய மகன் சொன்னால் சொன்ன வேலையை மட்டும் சரியாகச் செய்வான்.  ஒரு விஷயத்தைக் கேட்டு வரச் சொன்னால், அதை மட்டும் கேட்டு வருவான்; கூடுதல் விவரங்கள் வராது!அவனை "நீ கம்ப்யூட்டர் மாதிரி!" என்று (வஞ்சப் புகழ்ச்சி அணியில்) சொல்வேன்!  

இந்த வாக்கியத்தையே திருப்பி இன்னொரு நாள் சொன்னவுடன் இதை ஏன் சொல்கிறேன் எனக் கேட்டான்;  'கம்ப்யூட்டர் கொடுத்த கமாண்ட்ஸ் மட்டும் சரியாகச் செய்யும்.  ப்ரொகிராமில் இல்லாத கட்டளைகளைச் செய்யாது.  நீ நான் சொன்ன வேலைகளை மட்டும் செய்கிறாய்!' என்று சொன்னேன்.  'அப்போ தவறு ப்ரொகிராம் செய்தவர் மேல் தான்!' என்று சொல்லிவிட்டான்!

இன்னொரு நாள், நான் காலை நேர அவசரத்தில் வேலைகளைச் செய்து கொண்டே அவனிடம், 'கொஞ்சம் ந்யூஸ்பேப்பரில் ஹெட்லைன்ஸ் படிச்சுச் சொல்லு!' என்று கேட்டேன்.  அவனும் சில தகவல்களை படித்துச் சொன்னான்.  எட்டிப் பார்த்த போது நாளிதழின் மேல் பக்கம் உள்ளவற்றை மட்டும் சொல்லியிருந்தான் - 'ஏன் கீழே உள்ளதைச் சொல்லவில்லை?' என்று கேட்டதற்கு, 'ஹெட்டர்(Header) பக்கம் இருப்பவற்றைச் சொல்லிட்டேன்; நீ ஃபுட்லைன்ஸ் படிக்கச் சொல்லி எங்கிட்ட கேட்கலை, அதனால் நான் ஃபுட்டர்(footer) பக்கம் போகலை!  நான் தான் கம்ப்யூட்டராச்சே!' என்றான்!! நான் என்ன சொல்ல?!!


Friday, September 2, 2011

காலம் மாறிப் போச்சு... கண்ணீர்..?

முஸ்கி: இது மின்னஞ்சலில் எனக்கு வந்த ஒரு கதையின் மொழிபெயர்ப்பு.  நீங்கள் முன்பே படித்துக் கூட இருக்கலாம்.  52 நாடுகளுக்கு இடையே, 16-18 வயதுக்குள்ளிருப்போருக்கு நடத்தப்பட்ட ஒரு கதைப் போட்டிக்கு, அமெண்டா சாங்க் (Amanda Chong of Raffles Girls' School (Secondary)) என்ற 15 வயதுப் பெண் கலந்து கொண்டு (ஆம், தன்னிலும் பெரியவர்களுடன் போட்டி போட்டுத்தான்), முதல் பரிசு பெற்றதாக, அனுப்பப்பட்ட கதை.  சில சொற்களை மட்டும் இந்தியப் படுத்தியிருக்கிறேன்.


"நவீனப் பெண்ணின் விருப்பங்கள்"

அந்த முதிய பெண்மணி, ஒரு சின்ன மஜந்தா காரின் பின் ஸீட்டில் அமர்ந்து கொண்டு, சீறிப் பாயும் காரின் வேகத்தில் தன் ப்ளாஸ்டிக் பை பறக்காமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தார்.

 அவ்வளவு வேகத்திற்கு அவர் பழக்கபட்டவர் அல்லர்; நடுங்கும் கைகளால், காய்த்துப் போன தம் கைவிரல்கள் சீட்டின் மேல் படாதவாறு சீட் பெல்ட்டைப் போட்டுக் கொண்டார்.  ("வெள்ளை சீட்களில் விரல் கறைகள் பட்டால், நன்கு வெளியில் தெரியும்மா")


அவர் மகள், பீ சூ, வெள்ளி நிறத்து அழகு கைப்பேசியில் அவருக்குப் புரியாத பாஷையில் பெரிய பெரிய வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்தாள்.

 "ஃபைனான்ஸ்', 'லிக்விடேஷன்', 'அசெட்ஸ்', 'இன்வெஸ்ட்மெண்ட்ஸ்'...இப்படி பேசிக் கொண்டிருந்தவளின் குரல் புதிதாகவும் திருத்தமாகவும்  இருந்தது. 

 அவருடைய பீ சூ, டிவியில் வரும் மேல்நாட்டுப் பெண்களைப் போலப் பேசுகிறாள்!  அவள் அமெரிக்க உச்சரிப்போடு பேசுவதை முதிய பெண்மணி ரசிக்கவில்லை... "ப்ஸு" என்று தன் அதிருப்தியை வெளிப் படுத்தினார்.

 மகள் "இதைக் கட்டாயம் ஒத்துக் கொள்ள மாட்டேன், நாம் இப்போது விற்க வேண்டும்" என்று பேசியவாறே ஆக்ஸிலேட்டரை இன்னும் அமிழ்த்தினாள்; அழகாக ப்யூட்டி பார்லரில் மேனிக்யூர் செய்யப்பட்ட கைவிரல்கள், ஸ்டியரிங் வீலை எரிச்சலுடன் அழுத்தின

 "இதுக்கு மேல் என்னால் இதைப் பற்றி பேச முடியாது" என்று கைப்பேசியில் கத்தி விட்டு, அதை மூடி, பின்சீட்டை நோக்கி விட்டெறிந்தாள் மகள்.  முதிய பெண்மணியின் நெற்றியில் பட்டு, பின் அவர் மடியில் சப்தமின்றி அடைக்கலமானது கைப்பேசி.  அவர் மெதுவாக அதை எடுத்துத் தன் மகளிடம் கொடுத்தார்.

மகள், "ஸாரிம்மா" என்று மாண்டரின் மொழிக்கு மாறிப் பேசினாள்.  அமெரிக்க உச்சரிப்பு இப்போது இல்லை.  "எனக்கு அமெரிக்காவில் ஒரு முக்கிய கிளையண்ட்... அதில் நிறைய பிரச்னைகள்....".  முதியவர், புரிந்து கொண்டதாகத் தலையை ஆட்டினார்.  அவர் மகள், முக்கியமானவள், பெரிய வேலை செய்பவள்.

 பீ சூ அம்மாவை பின்பக்க கண்ணாடி மூலம் வெறித்துப் பார்த்தாள்.  அம்மா என்ன நினைக்கிறார் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.  அவரது சுருக்கம் விழுந்த முகம் எப்போதும் ஒரே தோற்றத்துடன் தான் தெரிகிறது!

 கைப்பேசி மறுபடியும் ஒலிக்க ஆரம்பிக்கிறது, அங்கிருந்த கனத்த மௌனத்தைக் கிழித்துக் கொண்டு.  "ஹலோ பியஹ்ட்ரிஸ், ஆமாமா, எலைன் தான்"

‘எலைன்’ முதியவர் அதை ரசிக்கவில்லை  ‘நான் அவளுக்கு எலைன் என்று பெயர் சூட்டவில்லை’  மகள் ‘நெட்வொர்க்கிங்’கிற்கு எவ்வாறு ஆங்கிலப் பெயர் தான் ஒத்து வரும் என்றும் சைனீஸ் பெயர் எளிதாக மறந்து விடும் என்றும் ஒருமுறை சொன்னது நினைவுக்கு வந்தது.

 மகள் ஆங்கிலத்திலேயே தொடர்ந்தாள், “ஓ நோ: இன்று லன்சுக்கு உன்னைச் சந்திக்க முடியாது. பழைய பஞ்சாங்கத்தை தினசரி பூஜை சமாச்சாரத்திற்கு அழைத்துப் போக வேண்டியிருக்கிறது!”

 ‘பழைய பஞ்சாங்கம்’  இது தன்னைத் தான் குறிக்கிறது என்று முதியவருக்கு நன்றாகத் தெரியும்.  அவர் மௌனமாக இருப்பதை வைத்து, அவர் மகள் இது அவருக்குப் புரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

 பேச்சு இன்னும் தொடர்கிறது, “ஆமாமா, என் கார் சீட்ஸ் முழுக்க சாம்பிராணி, ஊதுபத்தி மணம் தான்!”

 முதியவர் சுய பச்சாதாபத்தில் கையில் இருந்த பிளாஸ்டிக் பையை பிடித்தவாறே, உதட்டை இறுக மூடிக் கொண்டார்.  கார் மெதுவே கோயிலுக்கு முன் சென்று நின்றது.  அந்தப் பழைய கோயிலின் நாளடைந்த கூரைக்கு முன் கார் கொஞ்சம் வினோதமாகவே தெரிந்தது.


முதியவர் காரின் பின்பக்க சீட்டிலிருந்து இறங்கி, மெதுவாக கோயிலின் உள்ளே நுழைந்தார். பிஸினஸ் கோட்டு-சூட்டிலும் ஹைஹீல்ஸ் ஷூவிலும் இருந்த அவர் மகள் காரிலிருந்து இறங்கி, லிப்ஸ்டிக்கை சரி செய்தவாறே அவருடன் நடந்தாள்.

 “அம்மா, நான் வெளியே நிற்கிறேன், எனக்கு ஒரு முக்கியமான ஃபோன் கால் செய்ய வேண்டியுள்ளது” என்று சொன்னாள் அவள், உள்ளிருந்து வந்த ஊதுபத்தி புகை மணத்திற்கு முகம் சுளித்தவாறு.


தத்தித் தடுமாறியவாறே முதியவர் கோயிலுக்குள் நுழைந்து ஒரு ஊதுபத்தியைக் கொளுத்தினார்.  தற்போது அவருக்கு மனனம் ஆகிவிட்ட தினசரி பிரார்த்தனையைக் கூற ஆரம்பித்தார்.

 ‘ஆகாயத்திலிருக்கும் கடவுள்களே, என் மகளுக்கு இத்தனை வருடங்களாக கொடுக்கும் அதிர்ஷ்டத்துக்கு நன்றி!  நான் வேண்டிக் கேட்டுக் கொண்டதை எல்லாம் நீங்கள் அவளுக்கு அளித்திருக்கிறீர்கள்.  ஒரு பெண் எதற்கெல்லாம் இந்த உலகத்தில் ஆசைப்படுவாளோ அத்தனையும் அவளிடத்தில் உள்ளன’.

‘நீச்சல் குளத்தோடு பெரிய வீடு, சமையல் செய்யத் தெரியாது மற்றும் பிடிக்காது என்ற காரணத்தினால் சமையலுக்கும் மற்ற வேலைக்கும் ஆட்கள்; அவள் காதல் வாழ்க்கையும் நன்றாக அமைந்து விட்டது – ஒரு அழகான பணக்கார வாலிபன் * ‘மார்க்’குடன் அவளுக்கு திருமண உறுதி செய்யப்பட்டு விட்டது.’

 ‘அவளது கம்பெனி இப்போது முன்னணியில் உள்ளது – ஆண்கள் கூட அவள் சொல்வதைக் கேட்கிறார்கள்….  அவள் முழுமையான வாழ்க்கையை வாழ்கிறாள்.  கடவுள்களே, நீங்கள் மகிழ்ச்சியைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அவளுக்குத் தந்திருக்கிறீர்கள்.  வெற்றியை அவள் அறுவடை செய்து கொண்டிருக்கும் போது வேர்களை அவள் மறந்து விட்டாலும் நீங்கள் அவள் மேல் கருணை கொள்ளுங்கள்’.

 ‘நீங்கள் காண்பதை நம்பாதீர்கள் – அவள் எனக்கு ஒரு நல்ல மகளாகத் தான் இருக்கிறாள்! எனக்கு அவள் வீட்டில் ஒரு பெரிய அறையைக் கொடுத்திருக்கிறாள், என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறாள்.  என் மேல் சமயத்தில் எரிந்து விழுகிறாள் என்றால், காரணம் அவளது சந்தோஷத்திற்கு நான் தடையாக இருப்பது தான்.  இளம் வயதுப் பெண் ஒரு வயதான தாய் தனக்கு இடைஞ்சலாக இருப்பதை விரும்புவதில்லை.  இது என் தவறு தான்’.

 முதியவர் அவர் கண்களிலிருந்து கண்ணீர்ப் பூக்கள் உதிரும் வரை பிரார்த்தனை செய்தார்.  இறுதியில் தலைவணங்கி, பாதி எரிந்திருந்த ஊதுபத்தியை, அருகிலிருந்த சாம்பல் பாத்திரத்தில் வைத்தார்.

 மீண்டுமொருமுறை வணங்கினார்.  அவர் தம் மகளுக்காக 32 வருடங்களாகப் பிரார்த்தனை செய்து வருகிறார்.  அவருடைய வயிற்றில் குழந்தை இருந்த போது, கோயிலுக்கு வந்து அது ஒரு மகனாக இருக்க வேண்டும் என வேண்டினார்.

 காலம் கனிந்தவுடன் பிள்ளைப் பேற்றில் ஒரு அழகிய மகவு கொழு கொழுவெனப் பிறந்தது –பெண் மகவு!  வேலைக்குச் செல்லவோ, குடும்பப் பெயரைக் காக்கவோ உருப்படாத குழந்தை பெற்றதற்கு அவர் கணவர் அவரைப் போட்டு அடித்துத் துவைத்தார்!

 அப்படியும் சரோங்கில் இடுப்பில் குழந்தையைக் கட்டிக் கொண்டு அவர் கோயிலுக்கு வந்து கொண்டுதானிருந்தார்.  தாம் விரும்பிய அனைத்தையும் தம் மகள் அடைய வேண்டுமென்று இறையருளை வேண்டியபடி இருந்தார்.

 அவர் கணவர் அவரை விட்டுச் சென்று விட்டார்.  தம் மகள் ஒரு ஆண் மகனை அண்டியிருக்கக் கூடாது என்று வேண்டினார்.  ஒவ்வொரு நாளும், தம்மைப் போல படிப்பறிவில்லாமல், ஜடமாயில்லாமல், தம் மகள் ஒரு உயர்ந்த பெண்மணியாக வேண்டும் என பிரார்த்தித்தார். 

மனதில் எண்ணியதை அடையும் இரும்புப் பெண்ணாக – ஆண்களின் மனதில் எண்ணியவுடனே மரியாதை தோன்றும் பெண்ணாக – வாயைத் திறந்தாலே வார்த்தை முத்துக்கள் உதிர மக்கள் காத்திருக்கும் பெண்ணாகத் தம் மகள் இருக்க வேண்டும் என விரும்பினார்.

 ‘அவள் என்னைப் போல் இருக்கக் கூடாது’ எனத் தினமும் வேண்டும் போதே அவர் மகள் வளர்ந்து, அவரிடமிருந்து விலகிப் போவதையும் உணர்ந்தார். அவருக்குப் புரியாத பாஷையையும் அவள் பேச ஆரம்பித்திருந்தாள்…

தம் மகள் ஒரு அமைதியான பெண்ணிலிருந்து அவரையே எதிர்த்துப் பேசும் பெண்ணாக, அவரையே ‘கட்டுப்பெட்டி’ எனச் சொல்லும் பெண்ணாக மாறுவதைப் பார்த்தார்.  அவள் தன் அம்மாவை ‘மாடர்ன்’ ஆக இருக்க வேண்டும் என விரும்பினாள் – ‘மாடர்ன்’ என்ற வார்த்தையே புதிது – எவ்வளவு புதிது என்றால் அதற்கு சைனீஸில் வார்த்தையே இல்லாத அளவு புதிது!

மகள் இப்போது ரொம்பப் புத்திசாலி ஆகிவிட்டாள்!  ஏன் தாம் அப்படி வேண்டினோம் என்று முதியவர் இப்போது வியந்தார்!  அவரது பிரார்த்தனைகளுக்கு எல்லாக் கடவுள்களும் செவி சாய்த்து விட்டன!  ஆனால் இந்த செல்வமும் வெற்றிகளும் அவர் மகளின் சுயத்தை அழித்து வேர்களை மூடி விட்டன – அவள் இப்போது முன்னோர்களின் மண்ணோடு  பணத்தாள்களால் செய்த ஓரிகமி மூலம் மட்டும் ஒட்டப்பட்டவள் போல இருக்கிறாள்!...

 அம்மாவின் மதிப்பை மகள் மறந்து விட்டாள்.  அவளது விருப்பங்கள் மின்மினி போல தோன்றி மறைவன – ஒரு நவீன பெண்மணிக்கானவை.  அதிகாரம், செல்வம், பெரிய ஃபாஷன் பொடிக்ஸ்… இவை கிடைத்தும் இன்னும் அவளுக்கு நிறைவான சந்தோஷம் இல்லை.  முதியவருக்கு இவற்றை விடக் குறைந்த அளவிலேயே மகிழ்வான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் எனத் தெரியும்.

 அவர் மகள் இவ்வுலகை விட்டுப் போகும்போது, இவ்வுலகில் அவள் கொண்டாடியவை அனைத்தும் அவளுக்குத் துணை போகப் போவதில்லை! அவளைப் பற்றி அவள் ஒரு சிறந்த பெண்மணியாக இருந்தாள் என்று பேசிக் கொள்வார்கள் சில காலம் – பின் கால ஓட்டத்தில் அவளை மறந்து விடுவார்கள். காகிதத்தால் செய்த மாளிகைகளும் கார்களும் எரிந்தால் சாம்பல் மட்டுமே மிஞ்சுமே, அது போல!

இறந்த காலத்துக்கு திரும்பப் போய் தமது வேண்டுதல்களை எல்லாம் அழிக்க முடியாதா என முதியவர் ஏங்கினார்.  வாயிலுக்கு வெளியே அவர் மகள் கைப்பேசியில் முகத்தில் கோபமும் கவலையும் மாறி மாறித் தெரிய பேசிக் கொண்டிருந்தாள்.  உலகின் உச்சியில் இருப்பது நல்லதல்ல என்று முதியவர் நினைத்துக் கொண்டார் – வீழ்வதானால் ஒரே வழி தான் – கீழே!!

தமது பிளாஸ்டிக் பையிலிருந்து கோயிலின் பீடத்தின் மேல் பீ ஹூன் (bee hoon – அரிசியால் செய்யப்பட்ட சேமியா) பாக்கெட்டைப் பிரித்துப் பரப்பினார்.  அவர் மகள் அவர் பீங்கானால் செய்யப்பட்ட கடவுட்களை கும்பிடுவது பற்றி அடிக்கடி கேலி செய்வதுண்டு;  இவ்வளவு தூரம் இந்தக் கடவுள்களை நம்பிக் கும்பிட்டால், உதவி தேவைப்பட்டால் பீங்கான் துண்டுகளா பறந்து வரும் என்பது அவளது வாதம்.

 ஆனால், அந்த மகளுக்கும் சில கடவுள்கள் உண்டு – செல்வம், வெற்றி, புகழ், அதிகாரம் – நாள்தோறும் இவற்றைத் தொழுது, இவற்றின் அடிமையாகவே வாழ்ந்தாள்.  ஒவ்வொரு நாளும் இந்தக் கடவுள்களின் தேடல் தான் – ஆனால் இவை நிம்மதியான பெருவாழ்வின் முன் ஒன்றும் இல்லை.  அவரது மகள் விரும்பும் அனைத்தும் அவளுடைய வாழ்வின் ஜீவனையே உறிஞ்சி வெறும் உடலை மட்டும் விட்டுச் செல்வன. 

முதியவர் எரிந்து முடிந்து கொண்டிருக்கும் பத்தியையே பார்த்தார்.  எரிந்த சாம்பல் உதிரும் நிலையில் இருந்தது.


நவீனப் பெண்கள்!...ஒரு பெருமூச்சுடன் எழுந்து, கிழக்கு நோக்கி வணங்கி, தமது தினசரி பிரார்த்தனையை முடித்தார்.  இக்காலப் பெண்கள் நிறைய ஆசைப்படுகிறார்கள் – அந்தத் தேடலில் தங்கள் ஆத்மாக்களையே இழக்கிறார்கள், அவர்கள் அறியாமலே!  பிறகு அதைத் தேடுவதில் என்ன பயன்?

ஊதுபத்தி சாம்பல் விழுந்து விட்டது.  முதியவர் வெளியே வந்து, மகளை அடைந்தார்.  அவள் அப்போதும் கவலையுடனும் பதற்றத்துடனும் இருந்தாள். அவளது ஆசைகள் என்னும் விளைநிலத்தினூடே மகிழ்ச்சிச் செடியை வளர்க்க அதன் விதைகளைத் தேடுபவள் போல காட்சியளித்தாள்.

மௌனமாகவே காரில் ஏறினர் இருவரும். மகள் ஹைவேயில், முன்பு போல் இல்லாமல் மெதுவாகவே காரைச் செலுத்தினாள்.

மகள் பேச ஆரம்பித்தாள், “அம்மா, இதை எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை.  ‘மார்க்’கும் நானும் பேசிக் கொண்டிருந்தோம்.  இந்தப் பெரிய வீட்டைக் காலி செய்து விடலாம் என்றிருக்கிறோம்.  இப்போது வீடு நல்ல விலைக்குப் போகும் – வாங்க ஒரு ஆளும் கிடைத்து விட்டார்.  ஏழு மில்லியன் விலை பேசியிருக்கிறோம்.  எங்களுக்கு ஒரு அப்பார்ட்மென்ட்டில் பென்ட்-ஹவுஸ் போதும் என்று தீர்மானித்திருக்கிறோம்.  ஆர்ச்சர்ட் ரோடில் சரியாக ஒரு வீட்டையும் பார்த்து விட்டோம்.  அந்த வீட்டில் நாங்கள் குடிபுகுந்த பின், வேலைக்காரியை நிறுத்தி விடலாம் என்றிருக்கிறோம்,… அப்போது தான் எங்களுக்குத் தாராளமாய் இடம் இருக்கும்….”

 முதியவர் புரிந்ததாகத் தலையசைத்தார்.  பீ சூ சங்கடத்துடன் எச்சில் முழுங்கிக் கொண்டாள்.

“வீட்டு வேலைகளைப் பார்க்க யாராவது ஒருவரை நியமித்துக் கொள்வோம்.  சாப்பாட்டிற்கு - வெளியேயும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.  ஆனால், வீட்டிலேயே இப்போது இருக்கும் வேலைக்காரியை அனுப்பிய பின், உன்னைப் பார்த்துக் கொள்ள யாரும் இருக்க மாட்டார்கள்.  நாங்களும் வேலைக்குப் போன பின் உனக்குத் தனியே இருக்க ரொம்பக் கஷ்டமாக இருக்கும்.  மேலும், அது சிறிய வீடு.  அவ்வளவு இட வசதி இல்லை.  நாங்கள் நிறைய யோசித்து, ஒரு ஹோமில் உன்னைச் சேர்ப்பது தான் உனக்கு நல்லது என முடிவு செய்திருக்கிறோம்.  ஹௌகங்க் அருகில் ஒரு நல்ல ஓல்ட் ஏஜ் ஹோம் இருக்கிறது – கிறிஸ்டியன் ஹோம், நல்லதாகவும் இருக்கிறது…..”

 முதியவரிடமிருந்து ஒரு பதிலும் இல்லை – புருவத்தைக் கூட அசைக்கவில்லை!

“நான் அங்கே போய்ப் பார்த்தேன்.  அங்கிருப்பவர் உன்னைச் சேர்த்துக் கொள்ளச் சம்மதித்து விட்டார்.   ஹோமைச் சுற்றித் தோட்டம் இருக்கிறது, உனக்கு கூடப் பேசிப் பழக நிறைய வயதானவர்கள் இருக்கிறார்கள்!  உனக்கு அங்கே நேரமே போதாது, மிகவும் சந்தோஷமாக இருப்பாய்!” சொன்ன அவர் மகள், “நிச்சயம் அங்கே ரொம்ப சந்தோஷமாக இருப்பாய்!” என்று மறுபடி தனக்கே சொல்வது போல் சொல்லிக் கொண்டாள்.

 இப்போது கையில் பிடித்துக் கொள்ள பிளாஸ்டிக் பையும் இல்லாததால், முதியவர் உதட்டை அழுந்தக் கடித்துக் கொண்டார்.  சீட் பெல்ட்டை மாட்டிக் கொண்டார், ஏதோ தம்மை விரும்பாத மகளிடமிருந்து அது பாதுகாக்கும் என்பது போல.  தொய்ந்து போன தோள்களோடு சீட்டில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, விரல்களால் சீட்டைத் தடவினார்.   

“மா” – ரியர் வ்யூ கண்ணாடியில் அவர் மகள் அவரைப் பார்த்துக் கேட்டாள், “எல்லாம் சரியாம்மா?”

எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்யத் தான் வேண்டும்.

“ஆமாம்” நினைத்ததை விட உரத்த குரலில் சொன்ன முதியவர், “உனக்கு எது சந்தோஷத்தைக் கொடுத்தாலும் அது எனக்கு சரி தான்” என்றார்.

“இது உனக்காகத் தான், அம்மா.  நீ அங்கே ரொம்ப சந்தோஷமாய் இருப்பாய்.  நீ நாளைக்கே அங்கு போகலாம்.  வேலைக்காரியை விட்டு உன் சாமான்களை எல்லாம் ஏற்கெனவே பாக் பண்ணச் சொல்லிட்டேன்”

எலைன் வெற்றியுடன் புன்னகைத்துக் கொண்டாள் – செய்ய வேண்டிய வேலைகளில் ஒன்று முடிந்து விட்டது!

அதே புன்னகையுடன் எலைன், “எல்லாம் நல்லபடியாக இருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்” என்று சொன்னாள்.  அவளுக்கு விடுதலை கிடைத்த மாதிரி இருந்தது.  ஒரு வேளை, அவள் அம்மாவை அனுப்பி விட்டால் அவளுக்கு சந்தோஷம் கிடைக்குமோ என்னவோ….

அவள் ஆழ்ந்து யோசித்திருக்கிறாள் – இது தான் மகிழ்ச்சிக்கான அவள் தேடலில் தடைக்கல்லாக இருந்திருக்கிறது.  இப்போது அது சரியாகி,  அவள் மகிழ்ச்சியாயிருக்கிறாள்.  ஒரு நவீனப் பெண்ணுக்கு என்ன வேண்டுமோ – பணம், அந்தஸ்து, வேலை, காதல், அதிகாரம், இப்போது சுதந்திரமும் அவளுக்குக் கிட்டி விட்டன  ஆம், அவள் அம்மாவும் அவர் கட்டுப்பெட்டித்தனமும் இல்லாத சுதந்திரம்…..

ஆம், அவளுக்கு விடுதலை கிடைத்து விட்டது.  அவள் கைப்பேசி அடித்தது.  எடுத்து, வந்த மெசேஜைப் பார்த்ததும், மகிழ்ச்சியில் முகம் பூரித்தது.  “ஸ்டாக் 10% அதிகரித்திருக்கிறது”

இப்போது தான் அவளுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கிறது!  வாழ்க்கையின் அர்த்தத்தை, கைப்பேசியின் வெளிச்சத்தில் கண்டுபிடிக்க முயலும் அவளுக்கு, பின்சீட்டில் இருந்த முதிய தாய் கண்ணுக்கே தெரியவில்லை, அவரின் கண்ணீரும் தெரியவில்லை.

###################################################################

டிஸ்கி:  இதைப் பார்த்து நெகிழ்ந்து, சில நாட்கள் முயன்று மொழி மாற்றம் செய்துள்ளேன்.  இது நவீனப் பெண்களுக்கு மட்டுமல்ல,  இந்தத் தலைமுறைக்கே பொருந்துமோ என நினைக்கத் தோன்றுகிறது.

எனக்கு வந்த மின்னஞ்சலில், இதனால்- குழந்தைகளுக்குத் தேவையான கல்வியும் பிறவும் வழங்கிய பிறகு, உங்கள் ஓய்வு காலத்துக்கு வேண்டியதையும் சேமியுங்கள்; உங்கள் எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் உங்களைக் காப்பாற்றுவார்கள் என எதிர்பார்க்காதீர்கள்.. அவர்களுக்கு அவர்கள் வாழ்க்கை இருக்கிறது; உங்களை அவர்கள் கவனித்துக் கொண்டால் அது இறைவன் உங்களுக்குத் தரும் பரிசு என எடுத்துக் கொள்ளுங்கள் என அறிவுரையுடன் முடிகிறது.