ஏற்கெனவே http://middleclassmadhavi.blogspot.com/2010/10/blog-post_29.html மற்றும்
http://middleclassmadhavi.blogspot.com/2010/10/blog-post_27.html பதிவுகளில் என் மகன்கள் பற்றி எழுதியுள்ளேன். இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். இன்னும் 6 ஆண்டுகளுக்கு முன்னே, இருவரும் சிறு குழந்தைகளாக இருந்த போது பள்ளியிலிருந்து வந்து வீட்டில் தனியே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். (நான் பணி முடிந்து திரும்பும் வரை.) பெரியவனே சின்னவனுக்கு வேண்டிய சகலத்தையும் செய்தான். இவர்கள் அன்பை விளக்க ஒரு பின்னோட்டம் -
இன்றைக்கு 4 ஆண்டுகளுக்கு முன்---வழக்கம் போல நான் என் குழந்தைகளுடன் அந்தி நேரத்தில் பக்கத்தில் இருந்த பூங்கா பக்கம் நடைப் பயிற்சி, கூடவே புது ஊரில் புது பள்ளியில் நடந்த அனுபவங்களை நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தோம். இருள் கவியத் தொடங்கியது. வெளிச்சமும் சரியாக இல்லை. ஒரு பக்கம் மூத்த்வன், மறுபக்கம் இளையவன், நடுவே நான். திடீரெனக் கண்முன்னே ஒரு வெள்ளி நதி போல ஒரு உருவம்.. சின்னவன் அடுத்த அடி வைத்திருந்தால், அந்தப் பாம்பு மேல் தான்! உள்ளுணர்வில், அவனைப் பிடித்து பின்னே இழுத்து விட்டேன். பாம்பு ஓடி விட்டது. பெரியவன் அதிர்ச்சியுடன் என்னிடம் "ரொம்ப தாங்க்ஸ்மா, என் தம்பி உயிரைக் காப்பாற்றியதற்கு" என்றான்!!!.
இம்மாதிரி நிகழ்ச்சிகள் நம் எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கும். (வயதான பின்பு ஞாபகத்தில் வைத்து மகிழ எனக்கு இந்தப் பதிவு உதவும்!! :-)) ) சில சமயம் இம்மாதிரி பேச்சுகளால் சங்கடம் வருவதும் உண்டு. காலாண்டு தேர்வின் போது, சின்னவன் அறிவியல் இரண்டாம் தாள் சரியாக எழுதவில்லை என்றான். என் நாக்கில் சனி புகுந்து 'ஏன் சரியாகப் படிக்கவில்லை' எனக் கேட்டு விட்டேன். (அறிவியல் அதுவும் இரண்டாம் தாள் எனக்கு வராது என அவனுக்குத் தெரியும் - இந்த சப்ஜெக்ட்டில் சந்தேகம் இருந்தால் அவன் அப்பா தான் சொல்லித் தருவார்). "இந்த வாரம் சனிக் கிழமை நீ என் பாடப் புத்தகத்தைப் படிக்கிறே, ஞாயிறு என் question paperக்கே ஆன்ஸர் பண்றே" என்று சொல்லி விட்டான். அந்த வார விடுமுறையில் விருந்தினர் வர, நான் தப்பித்தேன்.
இப்படி எல்லாம் பேசினாலும், உதவுவதில் மன்னர்கள் என் பிள்ளைகள். என் handbag-ல் இருந்து ஒரு பொருளைக் கொண்டு வரச் சொன்னால், பையையே கொண்ர்ந்து கொடுத்துவிட்டு, 'நான் ஹனுமார்' என்று ஹைக்கூ படிப்பார்கள். (தேடச் சோம்பல்?!!)
சரி, எனது இப்போதைய சங்கடத்துக்கு வருகிறேன் - 'கடுகை எண்ணையில் போட்டால், ஏன் வெடிக்கிறது? அதனுள்ளே வெடிபொருள் இருக்கா?' இது சின்னவனின் இப்போதைய கேள்வி. சின்னவனின் பரிட்சைகள் முடிவதற்குள் யாரேனும் எனக்கு விடை சொல்கிறீர்களா?????