Friday, July 29, 2011

அங்காடித் தெரு! - சிறுகதை

          என் மகன் கல்லூரியில் அடியெடுத்து வைக்கிறான். அவனுக்கு லேப்பில் போட்டுக் கொள்ள காக்கி சீருடை வேண்டும் என்று கேட்டான், அதுவும் அடுத்த திங்கட்கிழமைக்குள்! நகரின் ஒரு கோடியிலிருந்த புகழ்பெற்ற ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தோம். துணிகள் பிரிவுக்கு நாங்கள் போவது இதுவே முதல் முறை. கூட்டம் குறைவாகவே இருந்தது. காக்கி டிரஸ் கிடைக்குமா என்று விசாரிக்க, முதல் மாடிக்கு அனுப்பப்பட்டோம்!
         

          காக்கி உடை வாங்குவதுவதும் எங்களுக்கு இது தான் முதல் முறை.  . அங்காடியின் விற்பனையாளர் எங்களிடம் ஒரு துணியைக் காண்பித்தார். அது மிகவும் மொத்தமாக - அதாவது தடியாக இருப்பது போல எனக்குத் தோன்றியது. "இது பாண்ட் துணியா, ஷர்ட்டுக்கு?" என்று கேட்க, அவரோ, "இதிலேயே தான் ஷர்ட்டும் தைத்துக் கொள்ள வேண்டும்" என்றார். ஏற்கெனவே என் மகன் விதவிதமான வொர்க் ஷாப்பில் கஷ்டப்படுவானே என்று மனம் வருந்திய எனக்கு, இவ்வளவு கெட்டியான ஆடையில் வியர்த்துக் கொட்டுமே என்று தோன்றியது. வேறு துணியும் ஸ்டாக் இல்லை என்று சொன்ன அவர், "மேலே ரெடிமேட் ஆடை இருக்கு, அங்கே  கேட்டுப் பாருங்கள் -பாண்ட், ஷர்ட் இரண்டும் கிடைக்கலாம்! இல்லை,  ஷர்ட் மட்டும் கிடைத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள், பாண்ட்டுக்கு வேண்டுமானால் இந்தத் துணி வாங்கித் தைத்துக் கொள்ளலாம்" என்று ஐடியாவும் கொடுத்தார்!

          பிறகென்ன -  அடுத்த மாடிதான்! - அங்கே இருபது வயதுக்குள்ளே இருந்த ஒரு விற்பனையாளர், எங்கள் தேவையைக் கேட்க, என் மகன், "காக்கி டிரஸ் - வொர்க் ஷாப்புக்கு..." என்று இழுத்தான். விற்பனையாளர் முதலில் ரெடிமேட் பாண்ட்டை எடுத்துக் காண்பிக்க ஆரம்பித்தார். பாண்ட்டில் டிசைன் போட்டிருக்க, என் மகனோ, "இதுல டிசைனெல்லாம் போட்டிருக்கக் கூடாது, காலேஜில் திட்டுவாங்க!" என்றான். நானோ, நான் சொன்ன போதெல்லாம் கேட்காத மகன், கல்லூரிக்காவது பயப்படுகிறானே என்று வாய்விட்டு வியந்து கொண்டிருந்தேன். தேவையானது இல்லையென்று தெரிந்த பின், "ஷர்ட் காண்பியுங்கள், பாண்ட் தைத்துக் கொள்கிறோம்" என்று விற்பனையாளரிடம் சொல்ல, அவர், அக்கம்பக்கம் பார்த்து, பின் தயங்கியபடி, "இங்கு நீங்கள் கேட்கும் காக்கி ஷர்ட் இல்லை; நான் ஒன்று சொல்கிறேன். நகரின் மையப் பகுதியில் சரஸ்வதி என்ற பெரிய ஜவுளிக்கடை இருக்கிறது. அதில் கேட்டுப் பாருங்கள்!" என்று சொன்னார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு லிஃப்ட் பக்கம் நகர்ந்தோம்.

          பின்னாலேயே அந்த விற்பனையாளர் வந்தார்
- என்னவென்று பார்க்க, அவர் என் மகனிடம், "தம்பி, நீ தப்பாக நினைக்கவில்லையென்றால், என் காக்கி ஷர்ட் இருக்கிறது; நான் பக்கத்தில் உள்ள சிவா பாலிடெக்னிக்கில் சேர்ந்து படிக்க ஆரம்பித்து, முதல் வருடத்திலேயே படிப்பை விட்டு விட்டேன். ஒரே ஒரு முறை தான் அந்த ஷர்ட்டைப் போட்டிருப்பேன். பாண்ட்டை பிறகு அடிக்கடி போட்டு பழசாக்கி விட்டேன்! அந்த ஷர்ட்டை வேண்டுமானால் நாளை கொண்டு வந்து தரட்டுமா?" என்று கேட்டார்!

        என் மகன் என் முகத்தைப் பார்த்து, தயங்கிய குரலில் "அம்மா.. என்ன சொல்றது?" என்று கேட்டான்.  நான் என் கலங்கிய கண்களை மறைத்து, ஒரு வலுக்கட்டாயப் புன்னகையுடன், "வேண்டாம்ப்பா, ரொம்ப தாங்க்ஸ்.  எப்படியும் இவனுக்கு பாண்ட் வாங்கியாகணும். அதனோட சேர்த்து வாங்கிக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு மகனுடன் கடையை விட்டு வெளியே வந்தேன். 

          "ஏன்மா அழறே?" என்றான் மகன்.  "அந்த விற்பனையாளருக்கு என்ன பிரச்னையோ, படிப்பை விட்டு விட்டு இந்த உத்யோகத்துக்கு வந்திருக்கிறாரே - உன்னை விட இரண்டு மூன்று வயது தான் ஜாஸ்தியாயிருக்கும்!  நம்மை முன்ன பின்ன தெரியாது.. ஆனால் இப்படிக் கேட்க வேண்டும்னு தோன்றி கேட்டார் பாரு..." என்று சொன்னேன் நான். 

          பேசிக் கொண்டே ஆட்டோ ஸ்டாண்ட் தேடி நடந்து கொண்டிருந்தோம், சரஸ்வதி ஜவுளிக்கடல் செல்ல.  பேச்சைத் தொடர்ந்த என் மகனோ, "ஏம்மா, அவர் தன் சட்டையைக் கொடுத்து ஒரு விலையைக் கூடக் கேட்டிருக்கலாம் இல்லையா,  நீ ரொம்பத் தான் ஃபீல் பண்றே?!" என்று சொன்னான்.  "அப்படியே கேட்டிருந்தாலும், ஒரு ப்ராபளத்தைப் புரிந்து கொண்டு, அடுத்தவர் பக்கத்திலிருந்தும் யோசித்து ஒரு முடிவையும் சொன்னாரே, அந்தப் பையன் கட்டாயமாக முன்னுக்கு வருவான், என் ப்ரார்த்தனைகள் அவனுக்குத் துணையாயிருக்கும்" என்று சொன்னேன் நான்.  "என்னம்மா, என்னை எல்லாருக்கும் மரியாதை கொடுக்கச் சொல்லுவாய், நீ திடீர்னு மரியாதை இல்லாம பேசறே" என்று மகன் வியக்க, "ஒரு தாயின் குணாதிசயமே இது தான், எந்தப் பிள்ளையையும் தன் பிள்ளையாக அவளால் பார்க்க முடியும்!" என்று பதில் சொன்னேன்! புரிந்ததோ இல்லையோ!!  ஆட்டோவில் ஏறினோம் சரஸ்வதி ஜவுளிக்கடல் செல்ல!!
          

Sunday, July 10, 2011

'தண்ணி'




           ஜகன் அவன் நண்பர்களோடு அரட்டைக் கச்சேரியில் இருந்தான். ராஜ், திவாகர், அவன் -மூவரும் ஒரே அலுவலகத்தில் அடுத்தடுத்தப் பிரிவுகளில் பணிபுரிவர்கள். டீ டைம், லன்ச் டைம் இவை இவர்கள் நட்பை வளர்த்தன. இதில் ராஜ் மீது ஜகனுக்கு ஒரு தேவதா விசுவாசம். ராஜ் என்ன சொன்னாலும் அவனுக்கு சரி தான். ராஜ் மேல் யாராவது தவறு சொன்னால், தவறு- குற்றம் சொன்னவர் மீது தான் என்று சாதிப்பான். 'கூடப் பிறந்தவர் கூட எப்போதும் இப்படி விட்டுக் கொடுக்காமல் பேச மாட்டார்கள், உங்கள் இருவருக்கும் இடையே அப்படி என்ன பாசம்?' என்று யாராவது கேட்டால், 'ராஜ் என் கூடப் பிறக்காத அண்ணன், அதனால் தான்!' என்று ஜகன் பதில் கூறுவான். திவாகர் பட்டும் பட்டுக் கொள்ளாத ரகம்; கேட்டால் மட்டுமே தன் அபிப்ராயத்தைச் சொல்லுவான். 
         
          புதிதாக அப்பாயின்ட்மென்ட் ஆன நடேசன், நண்பர்களின் அறிமுகம் எல்லாம் முடிந்தவுடன்  'என்னப்பா, உங்கள் க்ரூப்பில் தண்ணி பார்ட்டியெல்லாம் உண்டா?' என்று கேட்டான். ராஜ் ஒரு நையாண்டிச் சிரிப்புடன், 'ஜகனிடம் 'தண்ணி'ன்னு சொன்னாலே அவன் மயங்கிடுவான்! இதில் தனியா பார்ட்டி எதுக்கு?' என்று சொல்ல, இதன் பின்னால் ஏதோ கதை இருக்கிறது என்று தெரிந்து கொண்ட நடேசன், ஜகனிடம் இந்த ரகசியத்தை சொல்லுமாறு கேட்டான்.  ஜகனும் சொல்ல ஆரம்பித்தான்...
#######
      முன்னம் ஒரு நாள் அரட்டையின் ஆரம்பத்திலேயே ராஜ் கொஞ்சம் பரபரப்புடன், 'ஜக்கு, என் ஆஃபீஸில் இன்று தேவதையின் பிரவேசம்!' என்று சொல்ல, 'ஆஃபீஸ் ஜோக்குகளில் வருகிற மாதிரி டேபிளில் உட்கார்ந்தே தூங்கினாயா? கனவில் வந்த தேவதை என்ன வரம் தந்தது?' என்று ஜகன் கேட்டான். திவாகர், 'இல்லப்பா, புது அப்பாயிண்ட்மெண்ட் - வந்திருக்கிறது நமீதா, காஜல் அகர்வால் மாதிரியெல்லாம் இல்ல. ஒரு ஹோம்லி ஃபிகர், அவ்ளோதான்' என்று விளக்கினான்.
         
          'என்ன திவா, உன் ப்ரான்ச்சே இல்லையே, உனக்கு எப்படித் தெரியும்? அதுவும் கேட்காமயே சொல்றே' என்று ஜகன் கேட்க, திவாகர், 'நான் பர்சனல் ப்ரான்ச்னு மறந்துட்டயா?' என, அதுவரை பொறுமை காத்த ராஜ் தாங்க முடியாமல், 'அவள் பெயர் லதா என்று தெரியும், மத்த டீடெய்ல்ஸ் சொல்லுடா' என்று கெஞ்சினான்.
         'மேட்டர் இவ்வளவு சீரியஸா! அஃபிஷியல் சீக்ரெட் ஆக்ட் படி நான் மற்ற விவரம் எல்லாம் சொல்ல முடியாது' என திவாகர் பிகு பண்ண, டீ டைமே முடிந்து போனது.

          தொடர்ந்து வந்த நாட்களில் லதாவை பற்றி ராஜ் நிறையவே பேசினான். ஜகன் இந்தப் பெண்ணைத் தான் பார்த்தே ஆக வேண்டும் என்று, வேறு வேலையாகச் செல்வது போல, ராஜின் அலுவலகப் பிரிவிற்குச் சென்று அந்தப் பெண்ணைப் பார்த்தான். குனிந்த தலை நிமிராமல் வேலையையே பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை அவனுக்கும் மிகவும் பிடித்துப் போனது. அடிக்கடி அந்தப் பிரிவுக்குப் போக ஆரம்பித்தான். ராஜின் அலுவலக கண்காணிப்பாளர், 'என்ன ஜகன், உங்கள் சூப்ரண்ட் இன்னி்க்கு லீவா, இல்லை தூங்கறாரா, நீங்க இங்கயே சுத்தறீங்க?' என்று கேட்கும் அளவுக்குப் போனபிறகு தான் ஜகன் தன் போக்கைத் தானே உணர ஆரம்பித்தான்.

          அந்த செக்ஷனுக்கு இனி போகக் கூடாது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் ஜகன். ஆனால், அடுத்த நாள் லதாவே அவன் பிரிவுக்கு வந்து அவனிடம், 'ஸார், நான் ஆஃபீஸ் அசிஸ்டெண்ட் ஆக பக்கத்து பிரிவில் ஜாயின் பண்ணியிருக்கேன், இந்த ஃபைல் உங்கள் பிரிவிலிருந்து அங்கே ட்ரான்ஸ்ஃபர் ஆகி வந்திருக்கிறது; சில விவரங்கள் புரியவில்லை; ராஜ் சார் தான் உங்களிடம் கேட்டுக் கொள்ளச் சொன்னார்' என்று கேட்டாள். அந்த ஃபைலுக்காக பல தடவை அவர்கள் சந்திப்பு நேர்ந்தது. லதாவின் அறிவும் கண்ணைப் பார்த்து பேசும் கம்பீரமும் தன்னை ஈர்ப்பதை ஜகன் உணர்ந்தான். ராஜ் விரும்பும் லதாவையே தானும் விரும்புவதையும் புரிந்து கொண்டான்.

          அவன் மனதுக்குள் ஒரு போராட்டம். வெகு நாட்களாக ராஜ் மீது தான் வைத்திருக்கும் பிரியமா, அல்லது லதா மீது கொண்ட காதலா எது முக்கியம் என்று மிகவும் யோசித்தான். பிறகு, ராஜ் தான் முக்கியம், ராஜ்-லதா இருவருக்கும் திருமணம் முடித்துவிட்டால் தான் ஒருவழியாக மனக் குழப்பத்திலிருந்து தப்பிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தான்.


          மறு நாள் லதாவைத் தனியாகச் சந்தித்து, 'ராஜ்-ம் நானும் ஃப்ரெண்ட்ஸ் என்று உங்களுக்குத் தெரியும். ராஜ் என் அண்ணன் மாதிரி. நீங்கள் என் அண்ணியாக முடியுமா?' என்று கேட்டான். லதா, அவனைக் கூர்ந்து பார்த்துவிட்டு, 'அண்ணன் மனைவின்னா அண்ணியா?! நான் அப்போ தண்ணியாக இருந்துவிட்டுப் போகிறேன்' என்று சொல்லி அந்த இடத்தை விட்டு அகன்றாள்.  தற்செயலாக அங்கு வந்த ராஜ், 'ஜக்கு, என்ன லதா என்னவோ சொல்லிட்டுப் போகிறா மாதிரி இருக்கு, நீ முழிமுழின்னு முழிச்சிட்டு அந்தப் பக்கமே பார்த்துட்டு நிக்கறே' என்று கேட்டான். அன்று அப்போது நடந்ததை மட்டும் ஜகன் ராஜிடம் சொல்ல, ராஜ் சிரிப்போடு, 'ஏய் மக்கு, இன்னுமா புரியல, கங்கிராட்ஸ்!,' என்றான். ஜகன் 'என்ன சொல்றே?' என, ராஜ் 'டேய் மண்டு, நான் அண்ணன்-னா நீ என் தம்பி - அண்ணன் வைஃப் அண்ணி -தம்பி வைஃப் தண்ணி - அவள் தண்ணியாக இருக்க விரும்புகிறாள்! - அவள் உன்னைத் தான் விரும்புகிறாள்!' என்று சொன்னான்.

          ஜகன், 'ராஜ், இது... உனக்கு...' என்று  இழுக்க, 'ஜக்கு, நீ என் மீது வைத்திருப்பது போல எனக்கும் உன் மீது பிரியம் இருக்காதா; திடீர்னு என் ப்ரான்ச் பக்கம் நீ வர ஆரம்பித்த போதே நான் யூகித்து விட்டேன். உன் மனம் எனக்குப் புரியாதா? உங்கள் ஜோடிப் பொருத்தம் பிரமாதம்! தம்பியையும் தண்ணியையும் நான் சேர்த்து வைக்கிறேன்' என்றான் ராஜ். சொன்னதைச் செய்யவும் செய்தான்!!
########

          ஜகன் சொல்லி முடிக்க, 'இப்போ புரிஞ்சுதா தண்ணி ரகசியம்?' என்று நடேசனிடம் ராஜும் திவாகரும் கேட்டனர்!!