Friday, December 23, 2016

வெண்டைக்காய் புளி குத்தின கறி!

வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் 
வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும்? எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்றால் பொடியாக நறுக்கி ஃப்ரை செய்தால் என் குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும். ஸ்டஃப்ட் கறி என்றால் என் கணவருக்கும் பெரிய பையனுக்கும் மிகவும் பிடிக்கும். நேரம் இருப்பதைப் பொறுத்தும், வெண்டைக்காயின் தன்மையைப் பொறுத்தும் இன்ன மாதிரி செய்யலாம் என்று முடிவு செய்வேன்.
என் மாமியார் மிக அருமையாக சமைப்பார். ரசம் வைப்பதன் பேசிக் எல்லாம் அவரிடம் தான் கற்றுக் கொண்டேன். என் கணவர் தம் அம்மா செய்யும் வெண்டைக்காய் புளி குத்தின (விட்ட) கறிமேது பற்றி சிலாகித்து (சொல்லாடலுக்கு நன்றி - கலைஞரின் ராமானுஜர்!!)  சொல்ல, அவரிடம் இந்தச் செய்முறையைக் கற்றுக் கொண்டேன். சாதாரணமாக வெண்டைக்காய் வதக்கும் போது, அளவு கம்மியாகி விடும்.  இந்த முறையில் அளவு அவ்வளவு குறைவதில்லை. இம்முறையில் புளித் தண்ணீரில் வெண்டைக்காயை வேக விட்டு செய்வதால் இந்தப் பெயர்.   மற்ற  வெண்டை கறிகளுக்கு நான் சிறிதளவு ஆம்சூர் பவுடர் போடுவேன். 
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் -  அரை கிலோ அல்லது தேவையான அளவு
புளி - எலுமிச்சை அளவு
வத்தல் மிளகாய் - 6
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
பெருங்காயத் தூள் - சிறிது
எண்ணை - தாளிக்க
மற்றபடி அடுப்பு, வாணலி, கரண்டி இத்யாதி.....
செய்முறை: வெண்டைக்காயை அலம்பி துணியில் துடைத்து வைத்துக் கொள்ளவும்.   ஒரு சின்னக் கொசுவத்தி: சின்ன வயதில், என் அப்பா ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டிருந்த ஒரு முறை, என் அம்மா அப்பாவுக்குத் துணையாக அங்கேயே தங்கி இருந்தார்.  வெண்டைக்காய் தான் இருந்தது வீட்டில் சமைப்பதற்கு. அதற்கு முன் அம்மா என்னை சமையல் அறைக்குள் அனுமதித்ததே இல்லை - சமையலறை ஒரு ஆள் இருக்கும் அளவு தான் இருக்கும் என்ற முக்கியமான காரணமும் இருந்தது!! -  அம்மா என்னிடம் கொடுக்கும் காய்கறியை நறுக்கித் தரும் அளவு தான் அனுமதிக்கப் பட்டிருந்தேன் - இதனால் அப்போது சமைக்கும் போது, வெண்டைக்காயை நறுக்கிய பின் அலம்பி - இன்னமும் எனக்கு அந்த பிசினாக வந்த காட்சியை மறக்க முடியவில்லை!! கூட்டு கம் கறியாக அது பின்னர் பரிமளித்தது!! ஹாஸ்பிடலில் இருந்த அப்பாவுக்கு சாப்பிட ஈஸியாக இருந்தது!!!!

அதனால், வெண்டைக்காயை நன்றாக அலம்பி, நல்ல துணியால் ஈரம் போக துடைத்துக் கொள்ளவும்.  இந்த செய்முறையில் சிறிது ஈரம் இருந்தாலும் நோ ப்ராப்ளம்.


புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பின், வடிகட்டி புளித் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பு ஏற்றி, வாணலியை வைத்து, எண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கொள்ளவும். மிளகாய் வற்றலை போட்டு வறுக்கவும். வெண்டைக்காயையும் புளித் தண்ணீரையும் விட்டுக் கொதிக்க விடவும். மஞ்சள் பொடி, பெருங்காயத் தூள் இப்போது போட்டுக் கொள்ளலாம்.

முக்கால் பதம் வெண்டை வெந்தவுடன் அடுப்பை அணைத்து, காயை வடிகட்டிக் கொள்ளவும்.
புளித் தண்ணீரை ஒட்ட வடிகட்டியபின், மீண்டும் ஏற்றிய அடுப்பில் - வாணலியில் இதை இட்டு, தேவையான உப்பும் போட்டு வதக்கவும்.  நான் இந்த நேரத்தில் மிளகாய் வற்றலை எடுத்து விடுவேன், இல்லையென்றால் சாப்பிடும் போது கடிபடும். (பிடித்தவர்கள் மிளகாயோடு பரிமாறலாம்) வெண்டைக்காய் பதமாக வெந்த பின் அடுப்பை அணைத்து விடலாம்.

சூப்பர் லேசான புளிப்பு சுவையோடு கூடிய வெண்டைக்காய் புளி குத்தின கறி தயார்!!  

என் மாமியாரிடம் கற்றுக் கொண்டபின் முதல் முதலாக சமைத்த போது,  வேக வைத்த பின்  கரண்டியில் சிறிது எடுத்துக் கொண்டு போய் அவரிடம் கொடுத்து சரியாக இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னேன். அவர் 'நாங்கள்ளாம் மஞ்சள் பொடியும் பெருங்காயமும் போடுவோம்' என்று சொன்ன பின் அதையும் சேர்த்தேன்!!  இப்போது எழுதின பிறகும் அதை முதலில் விட்டு விட்டு பின்னர் தான் சேர்த்தேன். :-))  மாமியார் தாம் கற்றுக் கொடுத்தது என்பதை மறக்காமல் அவருக்கு உடனே நினைவு படுத்தி விட்டேன் என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன!!

Tuesday, December 6, 2016

புரட்சித் தலைவிக்கு அஞ்சலி!


நான் அதிமுக உறுப்பினர் இல்லை, அபிமானியும் இல்லை. அரசியலில் அவ்வளவு ஆர்வமும் இல்லை. ஆனாலும் என் மனதில் சோகத்தைக் கவிய வைத்தது இந்த மரணம்!!
புரட்சித் தலைவி என்ற பெயரை முதன்முதலில் கேட்ட போது என்ன புரட்சி செய்து விட்டு இந்தப் பட்டம் என்றே நினைத்தேன். புரட்சித் தலைவர் பட்டத்துக்குச் சமமாகக் கொடுக்கப்பட்டதே எனவும் நினைத்தேன்.  ஆனாலும் இந்தப் பட்டத்துக்கு தகுதியானவர் என்று தன் பல்வேறு தைரியமான விரைவான முடிவுகளாலும், அணுகுமுறையாலும், நீரூபித்திருக்கிறார்.  இனி ஒரு தலைவி இப்படி இருப்பாரா என்று சந்தேகம் தான்!  
கட்சி பாகுபாடின்றி அனைவராலும் அவர் உயிர் பிழைக்க வேண்டும் என்று வேண்டப்பட்டவர். அரசியல் எல்லைகளைத் தாண்டி இன்று அனைவரும் இரங்கல் தெரிவிக்கும் போது மிக நெகிழ்வாக உணர்கிறேன் - அந்த வார்த்தைகளின் பின்புலத்தை ஆராய வேண்டாத அளவு! வரலாற்றில் சுவடு பதித்த ஒரு நபர் மறைந்தார்.  
குறைகளாகத் தெரிந்த பலதும் இப்போது சொல்வது சரியாய் இராது. இருந்தாலும், .. பதவியில் இருந்த போது அவர் காலில் மற்றவர் விழுந்ததும் கூனிக் குறுகி வணங்கியதும் தம் அரசாங்கம் செய்தது என்பதற்கு பதில் 'நான் செய்தேன்' என்றதும் அபசுரமாய்ப் பட்டது. ஆனாலும் இத்தனை பேரைத் தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அவருக்கு இந்தக் கவசம் தேவைப்பட்டிருக்கலாம்.
இரும்பு மனிதராக இருந்து கடைசியில் எமனுடன் போராடி மீண்டும் வந்து திரும்பவும் சென்றார்!!  நாட்டின் முதல் குடிமகன் முதல் அனைவரையும் தமக்கு மரியாதை செய்ய வைத்த சரித்திர நாயகிக்கு ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் பெண்மணியின் வணக்கம்.  அஞ்சலி.

Saturday, November 12, 2016

ஐநூறு ரூபாயும், ஆயிரம் ரூபாயும் பின்னே ஞானும்!

ஒரு பதிவை ட்ராஃப்டில் சேமித்து வைத்து அதன் கதாநாயகனிடம் அபிப்ராயம் கேட்டு பிரசுரிக்கலாம் என்று 8ந் தேதி மாலை முடிவு செய்திருந்தேன்!! 8 மணிக்கு மோடி அவர்கள் என் பதிவின் முக்கியத்துவத்தை மூடி விட்டார்!! கைப்பேசியில் வாட்ஸ் அப் பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் என் கணவர், ந்யூஸைப் பார் எனவும்,  முதலில் நான் அந்தச் செய்தியை நம்பவில்லை! சானல் சானலாக மாற்றிப் பார்த்த பின் தான் நம்பினேன்! உடனே முகநூலில் ஸ்டேடஸ் போட்டு, வாட்ஸ் அப் குரூப்பில் ஏத்தியது எல்லாம் இங்கே வேண்டாத விஷயம்!!


சில நாட்கள் முன்னால்,  Arthkranti அமைப்பைச் சார்ந்த Sri Anil Bokil பிரதமரைப் பார்க்க 9 நிமிடம் கிடைக்கப் பெற்றவர், 2 மணி நேரம் கறுப்புப் பண ஒழிப்பைப் பற்றி பேசியிருக்கிறார்!!  இதில் பெரிய தொகை ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்குவதும் அடக்கம்!!
அரசாங்கம் சில மாதங்களாக எடுத்து வரும் ஒவ்வொரு திட்டமும்  இந்த முடிவு நோக்கியே பயணப்பட்டதாகவும், வங்கிகளின் பண இருப்பு, பரிமாற்றம் பற்றி எப்படி தகவல்கள் நவீன தொழில்நுட்ப உதவியோடு உடனடியாய் பரிமாற்றப் பட்டன என்பதை எல்லாம் முகநூல், ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டோம்! 'பிச்சைக்காரன்' திரைப்படத்தின் காட்சியையும் டிவி சானல்கள் போட்டுக் காட்டின!
டிவி சானல்களின் சில நேர்முக உரையாடல்கள் மூலம் புதிய சிந்தனைகளையும் அறிய முடிந்தது!! 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரயில்வே, ஏர்லைன்ஸ் ரிசர்வேஷனுக்கு உபயோகிக்கலாம் என்றவுடன்,  நேரடி ரிசர்வேஷன் பல மடங்கு உயர்ந்து விட்டதாம்!! வெயிட்டிங் லிஸ்ட் எவ்வளவாயிருந்தாலும்!! பின்னர் கான்ஸல் செய்து செல்லத்தக்க ரூபாய்த் தாள்களாக வாங்கலாம் என்பது சிலரின் மாஸ்டர் பிளான்!! அரசாங்கமோ, கான்ஸல் செய்தால் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைப்போம் என்று விட்டதாம்!! 'வல்லவனுக்கு வல்லவன்!'


9ந் தேதி நான் என் அம்மாவுடன் டாக்டரிடம் செக் அப் செய்ய வேண்டும்! அவர் மாதக் கணக்கில் மருந்து எழுதித் தருவதால், நிறைய பணம் தேவைப்படும்! எங்களுடைய வீட்டில்  ஏடிம்மில் எடுத்து வைத்திருந்ததில் கைவசம் 500ம் 1000மும் தாமிருந்தன.  அந்த மருத்துவமனை மருந்தகத்தில் டெபிட் கார்டு, நெட் பாங்கிங், பேடிம்   வசதி எதுவும் இல்லை! டாக்டர் எழுதித் தரும் மருந்துகளோ அந்த மருந்தகத்தில் தான் கிடைக்கும்! டாக்டர் ஃபீஸும் தரணும்!! குழப்பத்தில் அன்று நான் மருத்துவமனைக்குச் செல்லவில்லை!! அடுத்த நாள் என்ன தான் நடக்குமென்று பார்ப்போம் - மாத்திரை மருந்து கைவசம் தீர்ந்து விட்டது வேற -  என்று கிளம்பி விட்டோம்!! பழகின இடம் என்பதால் எல்லா இடத்திலும் 500 ரூபாய்த் தாள்கள் வாங்கிக் கொண்டனர் - ஒரு கண்டிஷனோடு - 300 ரூபாய்க்கு மேல் என்றால் 500 ரூபாயும், 800 ரூபாய்க்கு மேல் என்றால் 1000 ரூபாயும் பெற்றுக் கொள்ளப்பட்டது!! சில்லறைப் பிரச்னைக்காக இந்த கண்டிஷன்!! சில வயதானவர்கள் பல மாதங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை   500, 1000  ரூபாய்த் தாள்களைக் கொடுத்து வாங்கிக் கொண்டதையும் பார்க்க முடிந்தது! பாவம், அவர்கள் பணத்தை மாற்ற க்யூவில் போய் நிற்க இயலாதவர்களாகவோ,  வங்கிக்கு அனுப்ப வேறு ஆட்கள் இல்லாதவர்களாகவோ இருக்கலாம்!
பக்கத்து மளிகைக் கடையிலும் 500 ரூபாய் வாங்கிக் கொண்டனர்! அதை அவர்கள் தங்கள் கடையின்   வங்கி நடப்புக் கணக்கில் விற்பனை என்று போட முடியுமல்லவா!! ஆக, நடுத்தர மக்களிடையே அவேர்னஸ் இருப்பதையே பார்த்தேன்!!
நான் எப்போதும் ஒரு குறிப்பிட்ட சின்ன தொகையை 'எமர்ஜன்ஸி ஃபன்ட்' என்று சாமிக்கு நேர்ந்து விட்டதைப் போல் தனியாக வைத்திருப்பேன் - (கணக்கில் வந்த தொகை தான் - வீட்டின் உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும்) - இதில் சில 1000, 500, 100, காயின்ஸ் என்று பல்வேறு டினாமினேஷனில் வைத்திருப்பேன்.  100 ரூபாய்த் தாள்கள் 20 இருந்தன - இது தான் இந்த எமர்ஜன்ஸியில் எங்களுக்கு உதவுகிறது.  தற்சமயம் செல்லாத  பெரிய நோட்டுகளை மாற்றி வைக்க வேண்டும் - பிற்கால எமர்ஜன்ஸிக்கு.
நான் பிறகு எவ்வளவு பணம் மாற்றினேன் என்று கேட்கிறீர்களா!! கும்பலில் போய் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பது என் அப்பா எனக்கு எடுத்த பால பாடம்!! போக மாட்டேனே!! இன்னும் ஒரு வாரமாவது ஆகும்!! காய்கறி, பூ வாங்குவது தவிர எல்லாம் ஆன்லைன் தான்!!
உங்கள்  அனுபவத்தையும் பகிருங்களேன்!!

Monday, October 10, 2016

வந்துட்டேன்!!

உள்ளே வரலாமா வேண்டாமா என்றிருந்தேன்.  என்னை வம்பிழுத்து வர வைத்து விட்டது ஒரு ஃபேஸ்புக் பதிவு,  சூடான ஜோக்ஸ் என்ற பதிவில் எனது ஜோக் ஒன்றைத் தன் குட்டிக் கதையாக ஒருவர் முகநூலில் போட, தெரிந்தவர் பார்க்க நேர்ந்தது. அதில் ‘மற்றொருவர்’ என்று நான் தொடங்கியிருப்பதை ‘ஒருவர்’ என்று மாற்றியதைத் தவிர, அனைத்தும் காப்பி பேஸ்ட்!! இங்கிருந்து எடுத்தது என்று போடவில்லை! பரவாயில்லை, இணையத்திலிருந்து என்றாவது போடலாமில்லையா, அதுவுமில்லை.  இது இங்கிருந்து சுடப்பட்டது என்று தெரிந்தவர் முகநூலில் கமென்ட் போட, இல்லை, இது வாட்ஸ் அப்பில் வந்தது என்கிறாராம் அந்த நபர்!! (அதையும் அவர் முன்பு பகிரவில்லை என்பது வேறு விஷயம்!!) அவ்வளவு ஃபேமஸ் ஆகிவிட்டதா என் எழுத்து?!!

அதனால், இதனால் அறிவிப்பது என்னவென்றால், எனது வலைப்பூவிலிருந்து ஏதேனும் பகிரும் போது, ஒரு வார்த்தை இங்கிருந்து எடுத்தது என்று சொல்லுங்கள்.

இத்தனை நாளாக வலைப்பூக்களை விளிம்பில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.  சில சமயம், சொந்த ஊருக்கு வந்து, சமயமும் இருந்தால், கமென்டினேன்.  வாழ்க்கையின் போராட்டமான நாட்களைக் கழித்தேன்.  என் குடும்பத்துக்கு நான் யார் என்றும், எனக்கு என் குடும்பத்தையும் புரிய வைத்த நாட்கள்.  இதற்கும் மேல், சில மனித மனங்களின் வன்மத்தையும் வக்ரத்தையும் போட்டு வந்த வேஷத்தையும், பல மனிதர்களின் சக மனித நேயத்தையும் புரிந்து கொள்ள வைத்த நாட்கள்!! இதில் முன்பின் தெரியாத மனிதர்களும் அடக்கம்!!

என்ன கேட்கிறீர்கள்? என்னவாயிற்று? எங்கே போயிருந்தேன் என்றா? சொல்லத் தான் போகிறேன், அவ்வப்போது பகிர்கிறேன். 


நட்புக்கள் அனைவரும் நலமென்று நம்புகிறேன். தொடரும் வலைப்பூக்களின் பதிவுகளனைத்தும் படித்தேன்.  நான் படிப்பதற்குள் நாள் பல கடந்திருந்ததால், கருத்துரை எழுதுவது இயலவில்லை.  இனி அட்டென்டன்ஸ் சரியாக இருக்கும்!! ஓகே?

Tuesday, April 24, 2012

நல்லதோர் வீணை!

     பக்கத்து வீட்டுப் பரிமளாவை ரொம்ப நாட்கள் கழித்து அன்று பார்த்தேன். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது சகஜம் தான். ஒருவரையொருவர் பார்த்து புன்னகையுடன் நலம் விசாரித்துக் கொண்டோம். ஞாயிற்றுக் கிழமையாதலால், பேச பொழுதிருந்தது! பேச்சின் இடையே, “உங்களுக்குத் தெரியுமா, லதாவுக்கு, அதாங்க, உங்க வீட்டுக்காரர் ஆஃபீசிலே வேலை பார்க்கிறாங்களே, அவங்களுக்கு மறு கல்யாணமாம்!” என்றார். இது எனக்குத் தெரியாத விஷயம். லதாவை இதே காலனியில் இருப்பவர் என்ற வகையிலும் என் மகனின் கிளாஸ்மேட்டின் அம்மா என்ற வகையிலும் எனக்குத் தெரியும் “அப்படியா! ரொம்ப நல்ல விஷயம்!” என்று பரிமளாவிடம் சொன்னேன். பேச்சு வேறு பகுதிகளில் திரும்பியது. எங்கள் சிறு அளவளாவல் முடிந்து, ஞாயிறின் மற்ற வேலைகளுக்குத் திரும்பினோம்.


     என் மனம் லதாவின் மறுமணம் குறித்து யோசிக்க ஆரம்பித்தது. விதவை விவாகத்துக்கு நான் ஆதரவானவள் தான். நான் வேலை பார்த்த பழைய அலுவலகத்தில் நடந்தது நினைவுக்கு வந்தது. படித்து முடிந்த கையோடு வேலைக்குச் சேர்ந்த போது, ஒழுங்காக எனக்கு சேலை கட்டக் கூடத் தெரியாது; வெறும் கழுத்தோடும், ரப்பர் வளையல்களோடும் அலுவலகம் சென்ற எனக்கு, புடவையை எப்படி ஒழுங்காகக் கட்டுவது, கழுத்துக்கு மெல்லிய செயின் போடவேண்டும் என்ற விஷயங்களை பானு என்ற பெண் தான் கற்றுக் கொடுத்தாள்(ர்). எனக்கு 4 அல்லது 5 வயது தான் மூத்தவராக இருந்ததால், என்னாலும் ஃப்ரீயாக அவரிடம் பழக முடிந்தது. அவரது வாழ்க்கைக் கதையைப் பின்னால் தெரிந்து கொண்டேன். மலேஷியாவில் வேலை பார்த்த அவரது தந்தை, இந்தியாவில் தம் மனைவி அவசரப்படுத்தியதால், பானுவை சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொடுத்தார். பானுவின் கணவர் வேலையில் இருந்த போது ஒரு சின்ன விபத்தில் மேலிருந்து கீழே விழுந்து அடிபட்டு மரணமடைந்தார். அப்போது தான் அவர்கள் திருமணம் முடிந்து இரண்டு மாதங்களாகி இருந்தன. பின்னர் கருணை அடிப்படையில் பானுவுக்கு வேலை கிடைத்தது. நான் வேலைக்குச் சேர்ந்த போது, பானு வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடங்களாயிருந்தன.


     பானு ஒரு ஹாஸ்டலில் தங்கியிருந்தார். வார விடுமுறை நாட்களில் தனது ஊருக்குச் சென்று வருவார். தாயாரும் தம்பியும் ஊரில் இருந்தனர். தம்பிக்கு வரன் பார்க்கலாமா என்று அம்மா யோசித்து வருவதாக என்னிடம் பானு கூறினார். நான் தயங்கியவாறே, “பானு, நீங்கள் ஏன் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது?” என்று கேட்ட போது, “அப்பா, அம்மாவின் ஆதரவு இருக்கிறது. தம்பியும் என்னைக் கவனித்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருக்கு” என்றார். “அப்பா, அம்மா அவர்கள் காலம் முடியும் வரை பார்த்துக் கொள்வார்கள். அவர்களுக்கு மட்டும் தம் மகள் இப்படி தனியே நிற்பது பிடிக்குமா என்ன? உங்கள் தம்பி அவருக்கு கல்யாணம், குடும்பம் என்று வந்த பின் தம் குடும்பத்துக்குத் தான் முதலிடம் கொடுக்க வேண்டியிருக்கும் – அதுவும் வெளியூர் வேறே..” என்று சொல்லிப் பார்த்தேன். முதலில் சரியாகப் பதில் சொல்லாத பானு, மறுபடி மறுபடி தொந்தரவு செய்ததில், இதே ஊரிலேயே இருக்கும், தன் சொந்தக்காரர் ஒருவர், தம்மை மறுமணம் செய்து கொள்வாயா எனக் கேட்டதாகவும் தான் மறுத்து விட்டதாகவும் கூறினார். இதற்குள் அலுவலக்த்தில் என் தரப்புக்கு இன்னும் சில சிநேகிதர்களைப் பிடித்திருந்தேன். அவர்களும் பானு குறிப்பிட்ட அந்த நபரைப் பற்றி விசாரித்து, நல்லவரே என்று தீர்ப்பும் சொல்லி விட்டனர்! பிறகென்ன, கரைப்பார் கரைக்க, கல்லும் கரைந்தது! தம் பெற்றோரிடம் பானு சொல்ல, பானுவின் அப்பா மலேஷியாவிலிருந்து விடுப்பில் வந்து கல்யாணத்தை நடத்தி விட்டுச் சென்றார்! என் வீட்டுக்கு வந்து, என் அப்பாவிடம், “உங்கள் மகள் தான் இந்தக் கல்யாணம் நடக்கக் காரணம். நல்லா வளர்த்திருக்கீங்க” என்று நன்றி சொல்லிப் போனார்!


    லதாவின் விஷயமே வேறு. லதாவின் மகனுக்கு ஐந்து வயதான போது அவர் கணவர் இறந்து விட்டார். மிதமிஞ்சிய குடிப் பழக்கம் காரணமானது. லதா தற்சமயம் தம் பெற்றோர், உடன் பிறந்தோர் எனப் பெரிய கூட்டுக் குடும்பத்தில் இருந்தார். இப்போது அவர் மகன் விடலைப் பருவம் – டீன் ஏஜில் நுழைந்து கொண்டிருக்கிறான்! அவன் எப்படி ஏற்றுக் கொள்வான்?



     ஞாயிறு மாலைப் பொழுது. கரண்ட் இல்லாத குடும்பப் பொழுதானது. அப்போது தயங்கியபடியே லதாவின் தந்தை வீட்டுக்குள் நுழைந்தார். “வாங்க” என்று வரவேற்று அமர வைத்தோம் “லதாவுக்கு கல்யாணம் பண்ண நிச்சயம் பண்ணியிருக்கோம். அவளுக்கும் பின்னால் ஒரு ஆதரவு வேணும். பார்த்திருக்கும் வரன் தெரிந்தவர் தான். ஏற்கெனவே டிவோர்ஸ் ஆனவர். லதாவையும் பேரனையும் நன்றாகப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்களோடு தான் அவரும் இருப்பார். வரும் புதன் கிழமை வீட்டில் தான் கல்யாணம். கட்டாயம் வந்து கலந்து கொண்டு ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்று என் கணவரையும் என்னையும் அழைத்துச் சென்றார்!


                                                                *****


     திருமணம் நிறைவுற்றது. நாட்கள் பறந்தோடின. என் மகனிடம் அவனது கிளாஸ்மேட் எப்படி இருக்கிறான் என்று அவ்வப்போது கேட்பேன். அவ்வப்போது தென்படும் அந்தப் பையனின் முகத்தில் ஒரு தெளிவையும் நம்பிக்கையும் பார்ப்பதாக எனக்குள் தோன்றியது. இருந்தாலும் என் மனத்துக்குள் எழுந்த பயம் இருந்தது. லதாவை அவர் கணவர் அலுவலுகத்துக்கு டூ வீலரில் கொண்டு விடுவதைப் பார்த்த போதும் பயம் தீரவில்லை!


                                                             *****


     இன்று என் மகனின் பள்ளியில் மாலை 4.30 மணிக்குப் பெற்றோரை வரச் சொல்லியிருக்கின்றனர். என் கணவரின் அலுவலகத்தில் பெர்மிஷன் கிடைக்காது. நான் என் அலுவலகத்தில் மேலதிகாரியிடம் அனுமதி பெற்று, அந்த ‘பேரண்ட்ஸ் மீட்டிங்’க்குக்குச் சென்றேன். ஆடிட்டோரியத்தில் நடக்கும் மீட்டிங்கில் கிட்டத்தட்ட 500 பேராவது இருப்பார்கள். நான் தான் கடைசியோ?! நிகழ்ச்சியில் பிள்ளைகளை இந்த வயதில் பெற்றோர் எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பள்ளியின் நிர்வாகி விரிவாக எடுத்துரைத்தார். வழக்கம் போல் கரண்ட் இல்லாததால் அவர் மிகவும் சத்தமாகப் பேச வேண்டியிருந்தது. குழந்தைகளைத் தனியாக மாடியில் அமர வைத்திருந்தனர். ஒரு வழியாக வியர்வை சொட்டிய மீட்டிங் முடிந்து வெளியே வந்தேன். மாணவர் கூட்டத்தில் என் மகனைத் தேடிப் பிடித்து அவனுடன் நடந்தேன். மீட்டிங்கில் என்ன சொன்னார்கள் என்று அவன் கேட்க, சொல்லிக் கொண்டே வந்தேன். என் மகன் அவன் சைக்கிளைத் தள்ளியவாறே என்னுடன் வந்தான். அப்போது எங்களைத் தாண்டி ஒரு பைக் சென்றது. அதில் என் மகனின் கிளாஸ்மேட் – லதாவின் மகனைப் பின்னால் உட்கார வைத்து ஓட்டிச் சென்றார், பேரண்ட்ஸ் மீட்டிங்கை அட்டெண்ட் செய்த லதாவின் கணவர்.. இல்லையில்லை, அந்தப் பையனின் தந்தை!! என் மனம் இப்போது லேசானது. எங்களைப் பார்த்துச் சிரித்தவாறே கையாட்டிச் சென்ற அந்தப் பையனைப் பார்த்து நானும் சந்தோஷமாகச் சிரித்தேன்!

டிஸ்கி: இந்தச் சிறுகதை 'வல்லமை' இதழில் 23.4.2012 அன்று பிரசுரமானது.  சுட்டி இதோ!

Sunday, April 15, 2012

சுண்டைக்காய்!

சுண்டைக்காய் மேட்டரு.... சுண்டைக்காய் கால் பணம்; சுமைக்கூலி முக்கால் பணம் - இப்படி நம் அன்றாட வாழ்வில் பேச்சில் உபயோகப்படுத்தும் சுண்டைக்காயைச் சமையலில் உபயோகிக்கலாமா?

 'அதான், எனக்குத் தெரியுமே! சுண்டைக்காய் விஷயம்!! - சுண்டை வத்தல், வத்தல் குழம்பு..', என்றெல்லாம் சொல்பவரா நீங்கள்?  என் அம்மா செய்யும் சுண்டை வதக்கல் இதோ! 

தேவையான பொருட்கள்:
நாட்டுச் சுண்டைக்காய் - 1/4 கிலோ (காம்புகளை நீக்கிக் கொள்ளவும்)
தாளிக்க - எண்ணை (வேண்டுமளவு)
கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்கத் தேவையான அளவு

வறுத்துப் பொடி செய்து கொள்வதற்கு:
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
வத்தல் மிளகாய் - 4/5 தேவைக்கேற்ப
தனியா - 2 டீஸ்பூன்
எள்ளு- சிறிதளவு


உப்பு - தேவைக்கேற்ப
அப்புறம் அடுப்பு, பாத்திரங்கள், கரண்டி, லைட்டர்/தீப்பெட்டி, மிக்சி எட்செட்ரா


சுண்டைக்காய்களை நாலாகவோ அல்லது இளசாக இருந்தால் இரண்டாகவோ நறுக்கிக் கொள்ளவும்.  இந்த சமையலில் கஷ்டமான விஷயம் இது தான். நறுக்கும் போது விரலை வெட்டிக் கொள்ளாமல் இருப்பது உங்கள் சாமர்த்தியம்.  விரல்கள் விதைகள் ஒட்டி, சாறு ஒட்டி - கொஞ்சம் கஷ்டம் தான்!! :-)) சுண்டைக்காய் நறுக்கும் போது ரொம்ப சுலபமாக நறுக்க வந்தால் - அது அழுகி விட்டது; நறுக்கும் போதே கறுப்பாய் இருந்தால் - அது கெட்டுப் போய் விட்டது; இத்தகையவற்றைத் தூக்கிப் போட்டு விடவும்


சுண்டைக்காய் நறுக்கியவுடன் மிக விரைவில் பிரவுனாகி விடும்.  நோ ப்ராப்ளம்! கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக அலம்பிக் கொள்ளவும்.  விதைகள் நீரில் தங்கும் - கொட்டி விடலாம்!!  

ஏற்றிய அடுப்பில் வெறும் வாணலியைப் போட்டு,  கடலைப்பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், எள்ளு இவற்றை  வறுத்து, ஆறியபின் மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். பின்னர்,  வாணலியை திரும்பவும் ஏற்றிய அடுப்பில் வைத்து, கொஞ்சம் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பைத் தாளித்துக் கொள்ளவும்.  நறுக்கி வைத்துள்ள சுண்டைக்காயைப் போட்டு வதக்க ஆரம்பிக்கவும். பாதி வதங்கிய பின்னர், வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியையும், தேவையான அளவு உப்பையும் சேர்த்து, வதக்கவும்.  நடுவில் மூடி போட்டு வைத்தால், சீக்கிரம் வதங்கும். இந்த ஸ்டேஜில் கமகமவென்று வாசனை பரவும்!! குட்டீஸ் வந்து எப்போது சாப்பிட வரலாம் என்று கேட்பார்கள்!! (எங்கள் வீட்டு நடப்பை வைத்துச் சொன்னேன்!)  நன்றாக சுருள வதங்கியவுடன் அடுப்பை அணைத்து விடவும்.  சுண்டை வதக்கல் ரெடி! இதை சூடான சாதத்தில் கலந்து சாப்பிட சுவையோ சுவை!  தேவைப்பட்டால், நல்லெண்ணெய் விட்டுக் கொள்ளலாம்.  தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம்.
ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், இரண்டு நாட்கள் உபயோகிக்கலாம்.

நாட்டுச் சுண்டைக்காய் என்று எழுதியிருக்கிறேனே, என்ன என்று கேட்பவர்களுக்கு - சுண்டையில் நாட்டுச் சுண்டைக்காய், மலைச் சுண்டைக்காய் என்று இரு வகை உள்ளது.  வீடுகளில், தோட்டங்களில் வளர்வது நாட்டுச் சுண்டை.  மலையில் வளர்வது - யெஸ்! கரெக்ட்!! மலைச் சுண்டைக்காயில் வற்றல் போடுகிறோம்.  

சுண்டைக்காய் கசக்கும் - இதில் என்ன பலன் என்று கேட்பவர்களுக்கு - சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்;  வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.  மெலும், அஜீரணக் கோளாறுகளை நீங்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும். நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது.

முக்கியக் குறிப்பு: செய்து பார்த்து நல்லா இருந்தா, பாராட்டுகள் என் அம்மாவுக்கு!  அவர் சொல்லிக் கொடுத்த ரெசிபி தான் இது.  நல்லா வரவில்லையென்றால், நான் தான் சொல்வதில் எங்கோ தப்பு செய்திருக்கிறேன்.  :-)).  தாங்க்ஸ் அம்மா!

முக்கிய முக்கிய குறிப்பு: முன்னேயே சொல்ல விட்டுட்டேன் பாருங்க! சுண்டைக்காயின் இயல்பு கசப்பு. ஆனால், இந்த முறையில் செய்து சாப்பிட்டால், அவ்வளவு கசப்பு இருப்பதில்லை பாகற்காய் சாப்பிடாத என் மூத்த மகனும் இந்த சுண்டை வதக்கலை விரும்பிச் சாப்பிடுவான்.

Thursday, April 12, 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள்!









'நந்தன' வருடத்தில் நல்லதே நடக்கட்டும்!!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு/ சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!