Tuesday, October 26, 2010

விஜிலன்ஸ் வீக் - நினைவு கூர்கிறேன்

இந்த வாரம் விஜிலன்ஸ் அவேர்னஸ் வாரம்.  வருடம் முழுக்க நேர்மையாக இருப்பவர்களுக்கு இதைப் பற்றி நினைவு கூரத் தேவையில்லை.  நான் இங்கு சொல்லப் போவது இதைப் பற்றி இல்லை.  இப்படி வாழ வேண்டும் என்று எனக்குத் தூண்டுகோலாய் இருந்தவர் பற்றி நினைவு கூர்கிறேன.

படித்துக் கொண்டிருந்த எனக்கு பணியில் சேர அழைப்பு.  இதற்கு நான் குறிப்பிட்ட ஒரு  மாஜிஸ்ட்ரேட்டிடம் certificate வாங்கி அனுப்பச் சொல்லியிருந்தது.  எனக்கு கூட வர பொறுப்பான பெரியவர் யாரும் வரும் நிலையில் இல்லை.  நானும் என் தோழியும் Court campusக்குச் சென்றோம்.  ஒரு வக்கீல் குமாஸ்தா உதவ முன்வந்தார்.  எனது certificateல் கையெழுத்து வாங்க அந்த குமாஸ்தா எங்களை வெளியே நிற்க வைத்து விட்டு  ஒரு ஒரு இடமாக போய் வெளியே வந்து உதட்டைப் பிதுக்கியது தான் நடந்தது.   அவருடன் அந்த கோர்ட் முழுக்க அலைந்தது தான் மிச்சம்.  2,3 மணி நேரமானது.  களைத்துப் போனோம்.என்ன செய்வது எனப் புரியவில்லை.  அப்போது வக்கீல் உடையணிந்த ஒருவர் வந்து என்னிடம் என்ன விஷயம் என ஆங்கிலத்தில் கேட்டார்.  நானும் விடையளித்து என்னிடம் இருந்த formsஐக் காட்டினேன்.  அவர் எங்களை உடன் வரப் பணித்து ஒரு மாஜிஸ்ட்ரேட்டின் chamberக்குக் கூட்டிச் சென்றார்.  மாஜிஸ்ட்ரேட்டிடம் எனக்கு வந்த கடிதத்தைக் காட்டி, எங்கள் சிரமத்தை விளக்கினார்.  கொஞ்ச நேரம் அவருடன் உரையாடி விட்டு, என்னிடம் வக்கீல் சொன்னார் 'இந்த ஃபார்ம்-ல் குறிப்பிட்டுள்ள பதவி இப்போது கிடையாது. இந்த மாஜிஸ்ட்ரேட் அதற்கு equal rank தான். இவர் உனக்கு உதவுவார்' என்று.  அந்த மாஜிஸ்ட்ரேட்டிடம் கையெழுத்து வாங்கினேன்.  நன்றி கூறி வெளியே வந்தோம்.

வக்கீல் என்னைத் தனியே அழைத்து, 'என் பெயர் சொல்லி யாரும் பணம் கேட்டால் கொடுக்காதே.  அந்த் குமாஸ்தா உன்னுடன் காலை முதல் அலைந்ததாகச் சொல்கிறாய்.  அவருக்கு மட்டும் 20  ரூபாய் கொடு.  அவரே எனக்குத் தர வேண்டும் எனச் சொல்லிக் கேட்டாலும் தராதே' என்று சொன்னார்.  எனக்கு இருந்த களைப்பில் அந்த மனித தெய்வத்தின் பெயரைக் கூடக் கேட்கத் தோன்றவில்லை.  நன்றி மட்டும் சொன்னதாக நினைவு.

ஆனால், இந்த சம்பவத்தை மட்டும் நான் மறக்கவில்லை.  என்னைப் போல பலருக்கும் வழிகாட்டியாக விளங்க அந்த வக்கீல் பல்லாண்டு வாழ   என்றென்றும்  என் ப்ரார்த்தனை உண்டு.

1 comment:

kekkepikkunni said...

நேர்மை நம்ம ஊர்ல இன்னும் இருக்கு. வாழ்த்துவோம், வணங்குவோம்!