Sunday, November 27, 2011

ஞாபகமறதியை ஜெயிப்பது எப்படி?


           இந்தப் பதிவை 36 + என்று போடலாம் என்று நினைத்தேன், ஆனால் இப்போது ஞாபக மறதி இன்னும் சிறு வயதிலேயே ஆரம்பமாகி விடுகிறது.  இந்தப் பேனாவை எங்கு வைத்தேன், சாவி எங்கே, ATM card  எங்கே வைத்தேன் என்று அடிக்கடி தேடுபவரா நீங்கள்?  நானும் அப்படித் தான். 

           இன்னும் மேலே போய், 'டெலிஃஃபோன் பில்லை நான் இன்று கட்ட வேண்டும் என்று நீ ஏன் எனக்கு ஞாபகப்படுத்தவில்லை?' என்று உங்கள் ரங்கமணி/தங்கமணியை எகிறுகிறீர்களா? (என்ன ஒரு வில்லத்தனம்?)

          ஆஃபீஸ்/பள்ளி கிளம்பும் வேளை தான் இந்த ஞாபக மறதிக்கும் peak-hour.  'அம்மா, என் புக்கை/நோட்டை எங்கே ஒளிச்சு வைச்சே?' என்பது என் வீட்டில் அடிக்கடி கேட்கும் வசனம்.  (என் பிபி எகிறிப் போய் நான் என் மகனை எகிறினால், 'எங்கே ஒழிச்சு வைச்சேன்னு கேட்டேன்'  என்று மாற்றிப் பேசி சமாளிப்பான்!).  இந்த ஞாபகமறதி வில்லனை ஜெயிப்பது எப்படி?

            இதற்கு வழி கண்டால் நோபல் பரிசை வெல்லலாமே, நம் சக பதிவர்கள் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்களா என்று பார்த்த போது,  சிலரின் நல்ல ஐடியாக்களையும் பார்த்தேன்.   சும்மா சொல்லக் கூடாது, நம் பதிவர்கள் தொடாத துறையே இல்லை!  சரி, எதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்?... நீங்களும் மறந்துட்டீங்களா?!
       
         ஆராய்ந்து ஒரு வழியைக் கண்டுகொண்டேன்.  இந்த வழி மிக மிகச் சுலபமான வழி.  கணிணியில் உங்களுக்குப் பிடித்த விளையாட்டு இருக்குமில்லையா?  அதாவது நீங்கள் ஜெயிக்கும் விளையாட்டு - நேர் வழியிலோ, cheat  செய்தோ! இந்த விளையாட்டில் கணிணி போட்டியாளரின் பெயரை 'ஞாபக மறதி' என்று வைத்து விடுங்கள் - ஞாபகமறதியை ஜெயித்து விடலாம்.  இந்த வழியில் நான் ஞாபக மறதியை மட்டுமல்லாது சோம்பல், பொறாமை போன்ற தீய குணங்களையும் ஜெயித்திருக்கிறேன் பாருங்கள்:

இப்படி நீங்களும் ஜெயிக்கலாம்!
இந்த விளையாட்டில் ஜெயிக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது?  நான் தான் முதலிலேயே சொல்லிட்டேன் - ஜெயிக்கும் விளையாட்டாய் செலக்ட் பண்ணிக்கோங்க!! இல்லை, இருக்கவே இருக்கு cheat செய்வது (விளையாட்டில் மட்டும்!!) முயற்சி செய்தால் முடியாததே கிடையாது! (டூத் பேஸ்ட்டை வெளியில் எடுத்து பின் உள்ளே போடுவதைத் தவிர!!) திரும்பத் திரும்ப விளையாடி ஜெயித்து விடுங்கள்!!

உண்மையில் ஞாபக மறதியை ஜெயிப்பது எப்படி?  செய்ய வேண்டிய வேலைகளை ஞாபகம் வைத்துக் கொள்ள ஒரு சின்ன நோட்புக்/குறிப்பில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! :)) என்னைப் பொறுத்த வரையில், சின்ன சின்ன குறிப்புகளை  எழுதி வைப்பதன் மூலமாக - நிஜ பேப்பரிலோ இல்லை கணிணியிலோ -நான் ஞாபகம் வைத்துக் கொள்கிறேன்.  ஒரு சின்ன குறிப்பு நோட் வாங்க வேண்டும் என்பதையும் பலமுறை மறந்து போய் என் பையனின் போன வருஷ ஸ்கூல் டைரியை உபயோகிக்கிறேன்!  (என்ன கைபேசியில் reminder/to do வா?  கைப்பேசியையே எங்க வைச்சேன்னு landline நம்பரிலிருந்து கூப்பிட்டுத் தான் கண்டுபிடிக்கிறேன்!!)  

பொருட்களை எங்கே வைத்தது என்று திண்டாடாமல் இருக்க  systematic ஆக இருப்பதும், உபயோகித்த பின் பொருட்களை அவற்றிற்கு உரிய இடத்திலேயே வைப்பதும் தான் சரியான வழி! 

டிஸ்கி: இது ஒரு மீள் பதிவு - சின்ன எடிட்டிங்கோடு!! மறந்து போய் திரும்பப் பதிவிட்டு விட்டேன்!! :-)  

Sunday, November 20, 2011

தாங்க்ஸ் பூனைக்குட்டி!

"கண்ணு கமல்!" அம்மா கூப்பிடுவது காதில் விழுந்தது! 'கண்ணு' அடைமொழியோடு விளித்தால், ஏதோ எனக்குப் பிடிக்காத வேலை!

"என்னம்மா!"

"தம்பிக்கு ஜுரம் ஜாஸ்தியாயிருச்சு! கொஞ்சம் டாக்டர்கிட்ட அவனைக் கூட்டிகிட்டுப் போறயா?" அம்மா கெஞ்சுவது போல் கேட்டாள். "எனக்கு காமர்ஸில் நோட்ஸ் எடுக்கணும். நீயே கூட்டிப் போயேன்மா" என்றேன்.

"கிரைண்டர்ல இட்லிக்கு மாவரைக்கப் போட்டிருக்கேன். ஓடிட்டிருக்கு.  கரண்ட் இப்பத்தானே வந்தது... தம்பியை நீ அப்படியே உன் வண்டில வைச்சு கூட்டிட்டுப் போலாம்லயா? நாளைலருந்து அவனுக்கு மிட் டர்ம் டெஸ்டு நடக்குது. இன்னிக்கு ராஜன் டாக்டர் ஒரு ஊசி போட்டுவிட்டால், ஜுரம் சரியாயிரும்; நாளைக்கு நிம்மதியா டெஸ்ட் எழுதலாம்! அப்பா ஊருக்குப் போயிருக்கும் போதா இவனுக்கு ஜுரம் வரணும்!" என்று புலம்பிய அம்மா, "நீ கிரைண்டரைப் பார்த்து நிறுத்தறியா, நான் ஆட்டோவில் தம்பிய கூட்டிப் போறேன்" என்று என்னை ஆழம் பார்த்தாள்! எனக்குப் பிடிக்காத வேலை என்று அம்மாவுக்குத் தெரியும்!!

"சரி, சரி, நானே போறேன். டேய் விமல்! என்னைய கெட்டியாப் பிடிச்சுப்பியா வண்டில?" என்று கேட்டவாறு கிளம்பினேன். போச்சு, நோட்ஸ் எடுப்பது போச்சு! +2 வில் நல்ல மார்க் வாங்கி டே காலேஜிலேயே பி.காம். சேர்ந்து என்ன புண்ணியம்! எங்கள் காலேஜில் டே காலேஜை விட ஈவினிங் காலேஜுக்குத் தான் நல்ல லெக்சரர்ஸ்! காலையில் காலேஜ் முடித்து மதியம் சி.ஏ.வுக்கான கோர்ஸ் படிக்க வேண்டும் என ஆசை! படித்து பெரிய ஆடிட்டராக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. நிறைய படிக்க வேண்டும்! நோட்ஸ்??.. படிக்கத் தானே ஆசைப்படுகிறேன்! நான் என்ன அடுத்த வீட்டு சுரேஷைப் போல சினிமா, ஓட்டல் என்று வீட்டை ஏமாற்றிப் போகிறேனா என்ன...அலைந்த மனதை Be calm! என்று அடக்கிக் கொண்டே, "விமல்! போகலாமா! மேல போர்வை போர்த்தி விடட்டுமா?" என்று கேட்டபடி புறப்பட்டேன்.

விமல் என்னை இறுக்கப் பிடித்தவாறு பின் சீட்டில் உட்கார, டூ வீலரைக் கிளப்பினேன். டாக்டர் ராஜனின் கிளினிக்கில் ஏகப்பட்ட கூட்டம்! வேறு எந்த டாக்டரும் ஞாயிறு மதியம் கிளினிக் திறப்பதில்லை! இரண்டு மணி நேரமாவது ஆகலாம்! விதவிதமான நோயாளிகள், அவர்களின் செயல்கள் என்று வேடிக்கை பார்த்தவாறு காத்திருந்து டாக்டரைப் பார்த்தோம். கைராசியான டாக்டர்! தம்பியை ஞாபகமாகப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, "ஊசி போடட்டுமா, இல்லை மாத்திரையே போதுமா?" என்று கேட்டார். அவனும், "ஊசி வேண்டாம்" என்று விட்டான்! டாக்டர் மாத்திரைகளும் சிரப்பும் எழுதி, இரண்டு நாள் கழித்து வரச் சொன்னார். ஊரில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் என்று சொல்லி உணவுக்கான பத்திய முறைகளையும் சொன்னார்.

தம்பியை அங்கேயே உட்காரச் சொல்லி விட்டு, அடுத்திருந்த டாக்டரின் தம்பி நடத்தும் மருந்து பெட்டிக்கடை (அவ்வளவு சின்னது) சென்றேன். உள்ளேயிருந்த, வயலட் நிறத்தில் சூடிதார் அணிந்த அழகான பெண், கவுண்டரைத் தாண்டி ரோடையே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் மருந்துச் சீட்டை நீட்டினேன். "பூனைக்குட்டி அங்கே இருக்கா?" என்றாள். திரும்பிப் பார்த்த போது ஒரு பூனைக்குட்டி டாக்டரின் பைக்கின் கீழ் ஒளிந்திருந்தது!. "உங்களுக்கு வேணுமா? பிடித்துத் தரட்டுமா?" என்று கேட்டுத் திரும்பினால், அந்தப் பெண் ஸ்டூலின் மேல் நின்று கொண்டிருந்தாள். பூனைக்குட்டி, கடையின் படியேறி, கவுண்டரின் கீழ் நுழைய முயன்று கொண்டிருந்தது! "எனக்குப் பூனைக்குட்டின்னா பயம்!" என்று சொன்ன அவளைப் பார்த்து எனக்குச் சிரிப்பாக வந்தது! காட்டிக் கொள்ளாமல், "நீங்கள் அங்கிருந்து துரத்த வேண்டும். நான் துரத்தினால், உள்ளே தான் வரும்!" என்றேன்.


"கவலையில்லை! கவுண்டர் கீழ் ஓட்டையை அடைத்து வைத்திருக்கிறேன்!" என்றாள் அந்தப் பெண்! இப்போது என் சிரிப்பை அடக்க முடியவில்லை! "அப்ப ஏன் பயப்படறீங்க!" என்று கேட்டேன். இதற்குள் என் தம்பியும் வர, பூனைக்குட்டியை ஒருவழியாக அங்கிருந்து கிளப்பி விட்டோம்.

இந்தப் பெண்ணை எங்கேயோ பார்த்திருக்கிறோமோ என்று நினைத்த நான், "தப்பாக நினைக்கலேன்னா, உங்களை எங்கேயோ பார்த்த ஞாபகம்!" என்று இழுக்க, "  உங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆக்டிவாவில் பறப்பீர்களே! உங்கள் காலேஜில் தான் நானும் பி.காம் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன். நான் ஈவினிங் காலேஜ்;   இன்னிக்கு என் அண்ணனுக்கு ஹெல்ப் பண்ண மருந்துக் கடைக்கு வந்தேன்.  மதியமே வந்த நான், பூனைக்குட்டிக்குப் பயந்து உள்ளேயே உட்கார்ந்திருக்கிறேன்!  அண்ணன் வந்தவுடன் கிளம்பலாம் என்றிருந்தேன்!" என்றாள்!! ஆகா, பழம் நழுவிப் பாலில் விழுந்தது!

"அப்படியா! எனக்கு இன்னிக்கு லக்கி டே" என்று சொன்னேன் நான், என் தம்பி முறைப்பதையும் பொருட்படுத்தாமல். எப்படியும் கேட்கத் தானே வேண்டும்; நல்லதை ஒத்திப் போடக் கூடாது! "எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா? உங்கள் காமர்ஸ் நோட்ஸை எனக்குத் தந்து உதவ முடியுமா?" என்று ஆரம்பித்தேன்.

வியப்பில் விரிந்த கண்களோடு அவள், "ம், கட்டாயமாகத் தருகிறேன். நீங்கள் எனக்கு இங்கிலீஷ் நோட்ஸ் தந்தால்!! டாக்டரின் வீட்டுக்குப் பக்கத்து வீடு தான் என் வீடு். என் பெயர் ஸ்வேதா! நீங்கள்?" என்று கேட்டாள். "ஸ்... என்னை நான் இன்ரொடியூஸே பண்ணிக்கலையே, என் பெயர் கமலா" என்றேன் நான்.

ஒரு அழகான நட்பை உருவாக்கிக் கொடுத்த பூனைக்குட்டிக்குத் தாங்க்ஸ்!!

Sunday, November 13, 2011

ம்னாமடஅ!! (Reverse mortgage)

சமீபத்தில் ஒரு நாளிதழின் வரிகள் பற்றிய சந்தேகங்கள் கேட்கும் பகுதியில் ஒருவர் தாம் ஒரு சீனியர் சிட்டிசன் என்றும் பணத்தேவை காரணமாக, தாம் 20 வருடங்களாக வாழும் தம் சொந்த வீட்டை விற்றால், வருமான வரி கட்ட வேண்டுமா என்றும் கேட்டிருந்தார்.  பதிலளித்தவர் இதற்கு கேபிடல் கெயின்ஸ் என்ற வருமான வரி செலுத்த வேண்டி வரும் என்றும், அதற்குப் பதில் அவர் ரிவர்ஸ் மார்ட்கேஜ் செய்யலாம் என்றும் ஆலோசனை கூறியிருந்தார்.

நம் அரசாங்கம் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே இது பற்றி சொல்லியிருந்தாலும் இதைக் குறித்த தகவல்கள் இன்னும் நிறைய பேரைச் சென்றடையவில்லை. 

முதலில் மார்ட்கேஜ் - அடமானம் என்றால் என்ன?  நம்மில் பலர், கடன் வாங்கி வீட்டைக் கட்டியிருப்போம்/வாங்கியிருப்போம்; இல்லை, அதற்கான முயற்சியிலாவது இருப்போம்!! அப்படி வீட்டுக்காக கடன் வாங்கும் போது, கடன் கொடுக்கும் நிறுவனமோ, வங்கியோ, தம்மிடம் அடமானமாக அந்த வீட்டையோ அல்லது மனையினையோ வைத்துக் கொள்கிறார்கள்.  நாம் வட்டியும் முதலுமாக(!) திரும்பச் செலுத்துகிறோம்.

நகை அடமானம் எல்லாம் மணப்புரத்திலிருந்து கோவாபரேடிவ் பாங்க் வரை தரும் விளம்பரங்களினால் மற்றும் விளம்பரப் பலகைகளினால் தெரியும்.  இந்த மார்ட்கேஜ்களில் பல வகை இருக்கின்றன.

இம்மாதிரி அடமானம் வைக்கும் போது,   சொத்தின் மீதான நம் உரிமை, கடனை அடைக்க அடைக்க, படிப்படியாக அதிகமாகும்.  கடனை முழுமையாக அடைக்கும் போதுதான் சொத்தின் மீதான உரிமை நமக்கு முழுமையாகத் திரும்ப வரும்.  

ரிவர்ஸ் மார்ட்கேஜ் என்பது 60 வயது அதிகமானோருக்காக இந்தியாவிலும் நம் அரசு கொண்டு வந்திருக்கும் ஒரு திட்டம்.  60 வயதுக்கு மேற்பட்டோர், அவருக்குச் சொந்தமாக ஒரு வீடு இருக்கும் பட்சத்தில், அந்த வீட்டை வங்கிகளில் ரிவர்ஸ் மார்ட்கேஜில் வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம்.  இம்முறையில், ஏற்கெனவே சொந்தமான சொத்தை அடமானம் வைத்து, பணத்தைப் பெறுகிறோம்.  அதான் ம்னாமடஅ!! (Reverse mortgage)

கணவர், மனைவி இருவர் பெயரிலும் வீடு இருந்தால், கணவர் 60 வயதுக்கு மேற்பட்டிருக்க வேண்டும்; மனைவி வயது 58க்கு மேலிருந்தால போதும்.  அவர்கள் சேர்ந்து ரிவர்ஸ் மார்ட்கேஜுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் முக்கிய பயன் என்னவென்றால், பணத்தேவைக்காக தாம் குடியிருக்கும் சொந்த வீட்டை விற்க வேண்டாம். வீட்டைக் காலி செய்யவும் வேண்டாம். விதிமுறைகட்கு உட்பட்டு, தேவையான பணத்தை ஒரே முறையாகவோ, இன்ஸ்டால்மென்ட்களிலோ தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.  இந்தக் கடனை வாங்கியவர், வேண்ட் கடனை அடைத்து வீட்டை மீட்டுக் கொள்ளலாம்.  இல்லாவிடில், அதே வீட்டிலேயே தம் காலம் முடியும் வரை வாழலாம்.  ஒரு வேளை அவர் கடனை அடைக்காமல் இறந்து விட்டால், அவரது சட்டப்படியான வாரிசுகள் (legal heirs) கடனை வட்டியுடன் அடைத்து வீட்டை மீட்டுக் கொள்ளலாம்.  இல்லாவிடில், வீட்டை விற்றும் கடனை அடைக்கலாம்.  கடன் போக மிகுதி வாரிசுகளுக்குப் போகும்.  கடன் கொடுக்கும் போதே, வீட்டின் மதிப்பை வைத்துத் தான் கடன் கொடுப்பார்கள் என்பதால், நிச்சயமாக கடன் வீட்டு மதிப்பைத் தாண்டாது!! 
வருமான வரிச் சட்டத்தில் ரிவர்ஸ் மார்ட்கேஜுக்கு வரி விலக்கு உள்ளதாம் - இம்முறையில் வீட்டை வைத்து வாங்கும் பணத்துக்கு வரி கிடையாது. காபிடல் கெயின்ஸும் வராது.

ஆகவே, சொந்த வீடிருந்தும் ஆதரவில்லா முதியவர்களிடம் இந்தத் திட்டம் பற்றிச் சொல்லுங்கள்.  பல வங்கிகளில் இந்தச் சேவை இருக்கிறது. அருகாமையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியை அணுகினால் நல்லது.  உதாரணத்துக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் இந்தச் சுட்டியைப் பாருங்கள்.

இந்தக் கட்டுரையின் நீதி என்னவென்றால், இது வரை இல்லாவிட்டால், உங்களுக்கென்று கட்டாயமாக சொந்தமாய் வீடு ஒன்றை கட்டிக் கொள்ளுங்கள்/ வாங்கிக் கொள்ளுங்கள்!

டிஸ்கி: மேலும் இத்திட்டத்தைப் பற்றிச் சொல்ல, வங்கிகளிலும் வருமான வரி சம்பந்தப்பட்ட துறையிலும் இருக்கும் பதிவர்களை அழைக்கிறேன்!

Tuesday, November 8, 2011

அங்கீகாரம் - சிறுகதை

"நீ நல்லவளாகவே இருக்கலாம்; புத்திசாலியா, பார்க்க லட்சணமா இருக்கலாம்! ஆனால், நீ எங்கள் வீட்டுக்குத் தேவையில்லை! எங்கள் வீட்டுப் பழக்க வழக்கமும் உங்கள் பழக்க வழக்கமும் ஒத்துப் போகாது. என் மகன் உனக்கு வேண்டாம். உன்னை அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் என் மாப்பிள்ளைகள் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்?" இது ரிதம் படத்தில் வந்த வசனம் இல்லை. தேவியைப் பார்த்து ராஜாவின் அம்மா சொன்னது. தேவியும் ராஜாவும் காதலித்தனர். தேவியின் வீட்டில் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டனர். தேவி ராஜாவின் வீட்டிற்குச் சென்ற போது ராஜாவின் அம்மா பங்கஜம் சொன்னது தான் மேலே படித்தது!

ராஜா பிறகு எவ்வளவோ முயன்றும் அவன் அம்மாவின் மனதை மாற்ற முடியவில்லை. இப்படியே ஓரிரு வருடங்கள் கழிந்தன. கடைசியாக மணமகள் வீட்டில் 1 மாதம் கெடு கொடுத்து விட்டனர்! வேறு வழியில்லாமல், தேவி-ராஜா திருமணம், ராஜாவைத் தவிர மணமகன் தரப்பிலிருந்து ராஜாவின் தம்பி மட்டும் கலந்து கொண்டு நிறைவேறியது.  தம்பதியர் தனிக்குடித்தனம் சென்றனர்.

இரண்டு மாதம் உருண்டோடியது. ராஜா வீட்டிலிருந்து அவன் அம்மாவைத் தவிர, அவன் அப்பா உட்பட, அனைவரும் இந்தத் தம்பதியிடம் அன்பாகப் பழக ஆரம்பித்தனர். ராஜா திருமணமானதும் முதல் முதலில் அனுப்பிய காசோலையையும் திரும்ப அனுப்பிய அவன் அம்மா   பங்கஜம், அன்றொரு நாள் கூப்பிட்டு அனுப்பிய போது, ஆசையுடன் ஆசி வாங்கச் சென்றனர் இருவரும். பங்கஜத்தம்மாளோ, அங்கிருந்த ராஜாவின் சாமான்களை எடுத்துப் போகச் சொன்னதோடு, ராஜா கொடுத்து விட்ட தீபாவளிப் புடவையையும் திரும்பத் தந்தார்!! தம்பதி கண்ணீரோடு திரும்ப வந்தனர்.


இதோ, அந்தத் தம்பதிக்கு மகளும் பிறந்து விட்டாள்! லக்ஷ்மியை அப்பா வழிப் பாட்டியைத் தவிர அத்தனை சொந்தமும் கொஞ்சி மகிழ்ந்தனர். கூட்டிப் போன போதும் பாட்டி பார்க்க மறுத்து விட்டார்! ஆனாலும் சன்னலின் வழியே அவர் பார்த்ததை, இருவரும் கவனித்துக் கொஞ்சம் ஆறுதல் அடைந்தனர்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு திடீரென தேவியிடமிருந்து ராஜாவிற்குத் தொலைபேசி அழைப்பு - "அம்மா நம் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்". ராஜா உடனே வீட்டிற்குத் திரும்பினான். "ராஜா, நல்லாயிருக்கியா? பேத்தி, அப்படியே என் அம்மா ஜாடை!  லக்ஷ்மி தேவியே தான்" என்று பேசிய   பங்கஜத்தம்மாளைப் பார்த்து திகைத்தான் ராஜா. "எனக்கு லேசாக ஹார்ட் அட்டாக் வந்து, ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். உங்களிடம் எல்லாம் சொல்ல வேண்டாமென்று நான் தான் அப்பாவைத் தடுத்தேன்! ஆஸ்பத்திரியில் இருந்த போது தான் ஒரு கணத்தில் போயிருக்க வேண்டிய உயிர், எதற்கு இந்த வீண் சண்டை எனத் தோன்றியது. அதான் நல்லா குணமானதும் நானே உங்களைப் பார்க்க வந்து விட்டேன்!" என்றார் அவர்.

பங்கஜம்  அதன் பின் இவர்கள் வீட்டுக்கு அவ்வப்போது வந்து போக ஆரம்பித்தார். திடீரென ராஜாவின் அப்பா உடல் நலன் சரியில்லாமல் போக, அனைவரும் ஆஸ்பத்திரிக்கு அலைய ஆரம்பித்தனர். சிகிச்சைகள் பலனின்றி ராஜாவின் அப்பா இறைவனடி சேர்ந்தார். அவருக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தும் ஒன்றும் குறைவில்லாமல ராஜாவின் வீட்டிலேயே செய்து முடித்தனர்.

ஆயிற்று, மாமனார் இறந்து ஒரு வருடம் முடிந்து போனது -   வருஷத் திதி முடிந்த இரண்டாவது நாள் -  இன்று தேவியின் வீட்டில் எல்லா உறவினர்களும் கூடியிருந்தனர்.  வந்திருந்த உறவினர் ஊருக்குக் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். பங்கஜம், எல்லாரிடமும் ஆளுக்கு நூறு ரூபாயைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அங்கே அப்போது வந்த தேவி, "என்ன, எதற்குப் பணம்?" என்று கேட்க, "உன் மாமனார் இது வரை எல்லாருக்கும் கார்த்திகைப் பண்டிகைக்குப் பணம் கொடுத்தாரில்லையா, அதான் இப்போ நான் தொடர்கிறேன்" என்று பங்கஜம் பதில் சொன்னார். தேவியும் தனக்கும் அவர் ஆசிர்வாதமாகப் பணம் தருவார் எனப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் - அவர் இவள் பக்கம் திரும்பவே இல்லை!


பக்கத்தில் இருந்த நாத்தனாரிடம் தேவி மெல்லிய குரலில், "எனக்குக் கிடையாதா?" என்று கேட்க, அவளோ, 'அம்மா, அண்ணி கேட்கறாங்க பாரு!" எனப் போட்டுக் கொடுத்து விட்டாள்! பங்கஜம் தேவியிடம், "உனக்குக் கிடையாது" என்று சொல்லி விட்டு, "இந்தா, உனக்கு இந்தப் புடவை வாங்கி வைத்திருக்கிறேன். நீ பொறுப்பாக எல்லாக் காரியத்தையும் செய்தாய். நான என் கையால் உனக்குப் புடவை வாங்கித் தரணும் என்று தோன்றியது" என்று புடவையைக் கொடுக்க, சுற்றியிருந்தவர்கள் கை தட்டினர்.   தேவி அழ ஆரம்பித்தாள்!  

Sunday, October 30, 2011

போட்டி!! (சவால் சிறுகதைப் போட்டி 2011)

குறிப்பு:- இது பரிசல், ஆதி மற்றும் உடான்ஸ் இணைந்து நடத்தும் சவால் சிறுகதைப்போட்டி-2011 க்கான போட்டிக் கதை. 

முரளியும் விஷ்ணுவும் நண்பர்கள். ஒரே ஹைடெக் அலுவலகத்தில் ஒன்றாகப் பணியுரியும் அவர்கள் ஒரே வீடெடுத்துத் தங்கியிருந்தார்கள். தற்சமயம் முரளியின் கவலை புதையல் போட்டியில் ஜெயிப்பது பற்றி. புகழ்பெற்ற கோரகிள் & கோ இம்முறை நடத்தும் புதையல் போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. இம்முறை போட்டியும் கடினமாக இருக்கும் என்று நிர்வாகம் சொல்லி விட்டது. வெல்பவர்களுக்கு பரிசு, குழுவாகப் பங்கு பெறும் இருவருக்கு ஜோடியுடன் அமெரிக்க சுற்றுலா - 10 நாட்கள் உணவு, தங்கும் வசதியுடன்! ஆசை யாரை விட்டது?! தவிரவும் முரளிக்கு வேறு காரணமும் இருந்தது!

சென்ற முறை இப்போட்டியில் வென்றவர்கள் சத்யப்பிரகாஷும் அவர் மகன் கோகுலும். அவர்கள் நகரத்தின் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சத்யப்பிரகாஷ், சுருக்கமாக, எஸ்.பி., ஒரு வியாபார காந்தம். (அதாங்க பிஸினஸ் மாக்னெட்); தம் பரந்த வியாபாரங்களில் தன் மகன் கோகுலுக்கும் மகள் ராஜீவிக்கும் உரிய ட்ரெய்னிங் கொடுத்துக் கொண்டிருந்தார். போட்டிப் பரிசான அமெரிக்க சுற்றுலா எல்லாம் அவர்களுக்கு இலவசமாய்த் தேவையில்லை என்றாலும், போட்டியில் தாங்களே ஜெயிக்க வேண்டும் என்ற கௌரவப் பிரச்னை அவர்களுக்கு இருந்தது.

முரளியும் ராஜீவியும் மேலாண்மைப் படிப்பின் போது அறிமுகமாகி, காதலிக்க ஆரம்பித்தனர். முரளி எஸ்.பி. குடும்பம் போல பரம்பரைப் பணக்காரன் இல்லை; அவனுக்கு படிப்பே மூலதனம். நல்ல புத்திசாலி! தன் இப்போதைய வேலையில் கை நிறையவும் பை நிறையவும் வங்கி கணக்கு நிறையவும் சம்பாத்தித்துக் கொண்டிருந்தான்!. சந்தர்ப்பம் கிடைக்கும் போது, அடுத்த வேலைக்குத் தாவவும் தயாராயிருந்தான்!  இந்தத் துறையில் இருக்கும் இளைஞர்களைப் போல, தானே ஒரு கம்பெனியைத் தொடங்க வேண்டும் என்பது அவன் எதிர்கால லட்சியம்!

ராஜீவியின் ஐடியா தான் புதையல் போட்டி 2011-ல் பங்கு பெற்று எப்படியாவது வெல்வது! எஸ்.பியிடம் பெண் கேட்பது சுலபமல்லவா?! இவ்விஷயத்தை முரளி தன் உயிர் நண்பன் விஷ்ணுவிடம் சொல்லித் தங்களுக்கு உதவுமாறு கேட்டான். புதையல் போட்டி நிர்வாகம், போட்டியை நடத்தும் பணியை ஜிம்மிக்ஸ் கம்பெனியிடம் விட்டிருந்தது. அதன் முக்கிய அதிகாரியைச் சந்திக்க முடிவு செய்தனர் நண்பர்கள்.

முன்னறிவிப்பில்லாமல் அப்போது அங்கு வந்த ராஜீவி, "முரளி, கோகுலுக்கு நம் விஷயம் தெரிந்து விட்டது. நீ என்னைக் கல்யாணம் செய்து கொண்டால், அப்பா உன்னை எங்கள் கம்பெனியிலேயே டைரக்டர் ஆக உன்னைப் போடலாம்; நீ தன் முன்னேற்றத்துக்குத் தடையாய் இருப்பாய் என நினைக்கிறான்! அவன் ஜிம்மிக்ஸ் கம்பெனியில் ஒருவரிடம் செல்ஃபோனில் பேசியதை நான் தற்செயலாய்க் கேட்டேன். அவன் செல்ஃபோனைக் கீழே வைத்து பாத்ரூம் சென்றவுடன், பேசிய நம்பரை நோட் செய்து எடுத்து வந்திருக்கிறேன், இந்தா" என்று படபடப்புடன் எண்ணைக் கொடுத்தாள்.

அந்த நம்பருக்குத் தன் கைப்பேசியிலிருந்து பேசினான் முரளி. எடுத்துப் பேசியவர் பெயரும் விஷ்ணு!! தன் கம்பெனியிலிருந்து பிஸினஸ் விஷயமாக நேரில் சந்திக்க விரும்புவதாகக் கூறி, அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினான்; ஏற்கெனவே நண்பன் விஷ்ணுவின் பெயர் செல்ஃபோனில் இருந்ததால், ஜிம்மிக்ஸ் விஷ்ணு என்று அவர் பெயரைத் தன் கைப்பேசியில் காப்பாற்றி, இல்லையில்லை, சேமித்துக் (save) கொண்டான்! அவர் அலுவலகப் பக்கத்திலிருக்கும் காஃபி ஷாப்புக்கு நண்பன் முரளி, ராஜீவி சகிதம் சென்றான்.

ஜிம்மிக்ஸ் விஷ்ணு, அறை எண் 305-ல் கடவுள் பிரகாஷ்ராஜ் மாதிரி இருந்தார்! முரளி தன் காதல் கதையையும் போட்டியில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தையும் அவரிடம் சொன்னான்! அவனையும் ராஜீவியையும் மாறி மாறிப் பார்த்த ஜிம்மிக்ஸ் விஷ்ணு, "உண்மையான காதலர்களை உலகமே காதலிக்கும்! உங்கள் காதலுக்கு நான் உதவத் தயார்! ஆக்சுவலாக, கோகுல் அவர்களும் என்னைத் தொடர்பு கொண்டார்!  என்னிடம் இந்தப் போட்டியில் தான் தான் ஜெயிக்க வேண்டும் என்றும், உங்கள் பெயரைச் சொல்லி, உங்களைத் தோற்கடித்துத் தன்னை ஜெயிக்க வைத்தால் ரூபாய் 25 லட்சம் தருவதாகவும் சொன்னார்! லஞ்சத்திற்கு நான் மயங்குகிறவன் இல்லை! ஆனாலும், நான் மாட்டேனென்றால், அவர் வேறு யார் மூலமாக முயற்சிக்கலாம் என்பதால், என் பதிலை யோசித்துச் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்! நீங்கள் ஃபோனில் என்னிடம் பேசியவுடன் நான் உங்களைப் பார்க்க ஒப்புக் கொண்டதற்கு கோகுல் தான் முக்கிய காரணம்!" என்று புன்னகையுடன் சொன்னார்!

"சார், அப்போ நீங்க எங்களுக்கு உதவுகிறீர்கள்! கடவுளே நேரில் சொன்ன மாதிரி இருக்கு! புதையலுக்கான க்ளூவை மட்டும் சொல்லி விட்டால்..." என்று முரளி அவரைக் கேட்டான். "வெயிட், வெயிட்,  இதை நான் ஹேண்டில் செய்கிறேன். போட்டிக்கு நாலைந்து குறியீடுகள் கொண்ட க்ளூக்கள் இருக்கு! எதைக் கொடுப்போம் என்று கடைசியில் குலுக்கலில் தான் தீர்மானிப்போம்! என் கம்பெனிக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன், ஆனால் எப்படியாவது உங்கள் காதலுக்கு உதவி செய்கிறேன்! என்னை நம்புங்கள்! " என்று சொன்ன ஜிம்மிக்ஸ் விஷ்ணு, "நம்மை ஒன்றாக யாராவது பார்த்தால் ஆபத்து, இங்கிருந்து கிளம்பலாம்! என்னிடம் இனி பேச வேண்டுமானால், இந்த நம்பரில் கூப்பிடுங்கள், ஆனால் இது எமர்ஜன்சிக்கு மட்டும் தான்! தேவையான தருணத்தில் நானே உங்களுக்கு இன்ஃபர்மேஷன் தருகிறேன், இதே நம்பரிலிருந்து." என்று ஒரு கைப்பேசி இலக்கத்தைக் கொடுத்தார்! முரளி, விஷ்ணு இவர்களின் தொடர்பு எண்களையும் விலாசத்தையும் வாங்கிச் சென்றார்! முரளி   ஏற்கெனவே வேறு 'விஷ்ணு'க்கள் அவன் கைப்பேசியில் ஸேவ் செய்யப்பட்டிருந்ததால்,  அவர் புதிதாகக் கொடுத்த கைப்பேசி இலக்கத்தை 'Vishnu informer' என்று தன் கைப்பேசியில் அடைக்கலப்படுத்தினான்!  

போட்டி நாளும் வந்து விட்டது!  போட்டிக்குச் சற்று முன் ராஜீவி முரளியிடம், "கோகுல் ரொம்ப சந்தோஷமாயிருக்கான்; என்னிடம், நீ தோற்கப் போவது உறுதி என்று சொல்லியிருக்கிறான். எனக்கென்னவோ...." என்று ஆரம்பித்ததும், முரளி, "நான் விஷ்ணு சாரை நம்புகிறேன்! என் நண்பன் விஷ்ணு எனக்கு எப்படி உதவி செய்வானோ, அப்படியே அவரும் கட்டாயம் செய்வார்! அதனால் தான் அவர் பேரும் அதே பேராய் அமைந்திருக்கு!" என்று சிரித்துக் கொண்டே சொன்னான்! ஆனால், அவரிடமிருந்து எந்த ஃபோனும் வரவில்லை! அவருடைய ஃபோன் நம்பர்களுக்குப் பேசினால், சுவிட்ச் ஆஃப் என்றே தகவல் வந்தது! நேரம் ஆகி விட்டதால், ராஜீவியிடம் விடை பெற்று போட்டிக்குச் சென்றனர், முரளியும் அவன் நண்பன் விஷ்ணுவும்!

போட்டிக்கான க்ளூவைக் கொடுத்தனர். அந்தப் பெரிய மைதானத்தில், உலக வரைபட மாதிரியில் பல்வேறு நாடுகளும் அவற்றில் வித விதமான ஸ்டால்களும் அமைக்கப்பட்டிருந்தன. க்ளூவை வைத்துக் கொண்டு அவர்கள் குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு பொருளைக் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு வர வேண்டும். இவர்களுக்கு உதவ உலக வரைபட அட்லாஸ், என்ஸைக்ளோப்பீடியா இவையும் கொடுக்கப்பட்டன (எப்படியும் செல்ஃபோனை வைத்துக் கண்டுபிடிக்கப் போகிறார்கள், தாமே கொடுத்து விடலாமே என்று)! தன் க்ளுவைப் பார்த்தான் முரளி! கையால் எழுதப்பட்ட அந்தத் துண்டு சீட்டில், SUU H2 6F என்று எழுதியிருந்தது! முரளியும் விஷ்ணுவும் ஆலோசித்தனர்! SUU என்றால் என்ன, H2 மற்றும் 6F எவற்றைக் குறிக்கிறது என்று! உலக வரைபடம் இருந்ததால், நாட்டைக் கண்டுபிடித்தால், அந்த நாட்டின் பிரபலமான பொருளைக் கண்டுபிடித்து விடலாம்!! யோசித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு, H2 மற்றும் 6F உலக அட்லாஸில் அடையாளம் காண்பிக்க, வரைபடத்தை, A, B, C,... போன்ற எழுத்துக்களாலும், 1,2,3,... என்ற எண்களாலும் பிரித்திருப்பார்கள் என்று ஞாபகம் வந்தது!! அட்லஸில் அப்பெண்டிக்ஸ் H-ல் ஆரம்பித்த இண்டக்ஸில் H2 என்ற பக்கத்தில் பார்த்தனர்!! அதில் L-ல் ஆரம்பித்து நிறைய நாடுகளின் பெயர்ப் பட்டியல் இருந்தது! முதலில் இருந்த SUU முக்கிய க்ளூ என்று உணர்ந்தவுடன், இந்தப் பெயரை எங்கே கேட்டிருக்கிறோம் என்று இருவரும் விவாதித்தனர்!

சூ... என்ற பெயர் சைனாவில் வருமா இல்லை வேறு எங்கும் என்று யோசித்த போது Aung San Suu Kyi பெயர் நினைவுக்கு வந்தது! பர்மா என்ற மியான்மரில் வீட்டுச் சிறையிலே வைக்கப்பட்ட தலைவி, நோபல் அமைதிப் பரிசு, ஜவஹர்லால் நேரு பரிசு எனப் பல விருதுகளைப் பெற்றவர்!! "யுரேகா! நாம் மியான்மரைத் தான் தேட வேண்டும்!"

அவர்களுக்கு அளித்திருந்த அட்லஸில் மியான்மரில் 6 -F- கட்டத்தில் ரங்கூன் என்ற Yangon! உடனே மைதானத்தில் மியான்மர் நாட்டுப் பகுதிக்கு விரைந்தனர் அவர்கள்! அங்கே எதிர்கொண்டழைத்தன மூன்று ஸ்டால்கள்! அவற்றில் எதில் நுழைவது? கோவில் போன்ற ஒன்று, படகு வீடு போன்ற ஒன்று,கோவிலுமில்லாமல் மசூதியுமில்லாமல் ஒன்று! 

முரளி கையில் உள்ள என்சைக்ளோபீடியா உதவியுடன் சொன்னான், "நாம் மூன்றாவது ஸ்டாலில் தான் நுழைய வேண்டும்; ரங்கூனில் ஒரு பழங்காலப் புத்தரின் ஆலயம் இருக்கிறது - Shwe Dagon Pagoda – இது தான் அது" என்று! அந்த ஸ்டாலில் நுழைந்து 'வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்' என்ற குறிப்போடு இருந்த புத்தர் சிலையொன்றையும் கைப்பற்றினர்! 

 

             
போட்டி முடிந்த மணி ஒலித்த பின், பலரும் வெறுங்கையோடு வந்த போது ஒரு பொம்மைத் துப்பாக்கியோடு கோகுலும் வந்தான்!!

முரளியின் குழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது! கோகுல் கடுகடுத்தபடியும், எஸ்.பி. புன்னகைத்தபடியும் வாழ்த்தினர்! முரளி பற்றிய தகவல்களைக் கேட்டறிந்த எஸ்.பி., தம் அலுவலகத்திற்கு வேலைக்கு வர முடியுமா என்று கேட்டார்! அருகே வந்த ராஜீவி, "உங்கள் மாப்பிள்ளையாக வரவும் அவர் ரெடி!" என்று சொன்னாள்!! முரளி, "சார், நானே உங்களிடம் நேரில் வந்து இது குறித்துச் சொல்லலாம் என்றிருந்தேன்! உங்களுக்குப் பிடித்த போட்டியில் வென்ற பின் சொல்லலாம் என்று தான்....! ஆனால், உங்கள் கம்பெனியில் வேலை செய்ய எனக்கு தற்போது விருப்பமில்லை, மன்னித்துக் கொள்ளுங்கள்! அதற்குப் பதிலாக என் சிறந்த பாதி - better half தான் அங்கு இருக்கப் போகிறாளே!!" என்று சொன்னான். கேட்டுக் கொண்டிருந்த கோகுலுக்கும் மகிழ்ச்சி! முரளிக்குக் கைகொடுத்து "கங்கிராட்ஸ் மாப்பிள்ளை" என்று தன் ஒப்புதலையும் குறிப்பாக வெளிப்படுத்தினான்!! முரளியின் பெற்றோரோடு அடுத்த ஞாயிறன்று பேச வருவதாக எஸ்.பி. சொன்னார்!! திருமணம், வெற்றிப் பரிசான அமெரிக்க ட்ரிப்பை ஹனிமூன் ட்ரிப்பாக இருக்கும் வண்ணம் நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்!!

தம் தங்குமிடத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்த முரளியும், விஷ்ணுவும், ஜிம்மிக்ஸ் விஷ்ணு ஒன்றும் உதவி செய்யாமலேயே வென்று விட்டதாகப் பேசிக் கொண்டிருந்தனர்!! ஆனாலும் கோகுல் ஏன் பொம்மைத் துப்பாக்கியுடன் வந்தான் என்றும் அவர்களுக்குப் புரியவில்லை! வீட்டில் நுழையும் போது கொரியரில் ஒரு கவர் வந்ததாக பக்கத்து ஃப்ளாட்டில் கொடுத்தனர். பிரித்த போது அதில் இரு துண்டுச் சீட்டுகள்:

Mr. கோகுல்,
S W H2 6F - இதுதான் குறியீடு கவனம்
- விஷ்ணு

Sir,
எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான
குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்
கவலை வேண்டாம்.
-- விஷ்ணு


அவற்றை மேஜையில் வைத்து, புரிந்து கொள்ள முரளி முயற்சித்த போது, கைப்பேசி ஒலித்தது; Vishnu Informer கூப்பிடுவதாக அறிவித்தது கைப்பேசி! 

பேசிய ஜிம்மிக்ஸ்-கம்-இன்ஃபார்மர் விஷ்ணு, "கங்கிராட்ஸ், என் சீட்டுகளைப் பார்த்தீர்களா? போட்டிக்கு முன்பே உங்களிடம் கொடுக்க முயற்சித்தேன், முடியவில்லை!  அதான் கொடுத்தனுப்பினேன்!  கோகுலுக்கு உதவுவதாகச் சொல்லி, அவனுக்கு SUU என்பதை SW என்று - அதாவது எஸ் டபுள்யூ என்று படிக்க வேண்டும் என்று சொல்லி விட்டேன்! க்ளூவை மாற்றி விட்டேன்! அவனுக்கு போட்டி தொடங்கும் முன் கொடுத்த அந்தச் சீட்டையும் உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன், பாருங்க! SW என்றால் ஸ்வீடனா, ஸ்விட்சர்லாந்தா என்று குழம்பி கடைசியில் Smith Wesson பொம்மைத் துப்பாக்கியை பிடித்து வந்து விட்டான் கோகுல்! ஹா ஹா ஹா!" எனச் சிரித்து விட்டு, "முரளி, தயவு செய்து கல்யாண இன்விடேஷனை எனக்கு அனுப்பிடாதீங்க, அனுப்பினாலும் நான் வர முடியாது இல்லையா?!! கல்யாணப் பரிசை தான் நான் முன் கூட்டியே கொடுத்து விட்டேனே!! குட்-பை! God bless you!" என்று சொல்லி, முரளி நன்றி சொல்லக் கூட வாய்ப்பளிக்காமல் ஃபோனைத் துண்டித்தார்!

தனக்கும் ராஜீவிக்கும் பிறக்கப் போகும் முதல் குழந்தைக்கு, விஷ்ணு என்றோ, விஷ்ணுப்ரியா என்றோ தான் பெயர் வைக்கப் போவதாக முரளி முடிவு செய்து விட்டான்!! கைப்பேசியில் அந்தக் குழந்தையின் ஃபோன் நம்பரை ஸேவ் செய்யும் காலம் வரும் போது ஒரு வேளை - 'விஷ்ணு ஜுனியர்' என்று வைப்பானோ என்னவோ!!

Friday, October 28, 2011

ஏழாம் அறிவு - வேலாயுதம் - Assassin's creed!

ஏழாம் அறிவும் வேலாயுதமும் இப்போது ரிலீஸ் ஆன திரைப்படங்கள். Assassin's creed என்றால் என்ன என்று கேட்கும் என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு(!), அது ஒரு game - விளையாட்டு!. Assassins என்னும் பெரும் கொலைகாரர் பரம்பரை (creed)- யில் பிறந்து மிஞ்சியிருக்கும் சிலரில் ஒருவருக்கு, அவரது DNA இன்ன பிற அம்சங்கள் மூலம் அந்தக் காலத்துக்கே சென்று, பற்பல சாகசங்களைச் செய்யும் கணிணி - வீடியோ கேம் விளையாட்டு! Bleeding effects மூலம் தன் முன்னோரின் ஸ்கில்ஸை அவர் அடைவார்!  இதன் சமீபத்திய வெர்ஷன் - Brotherhood ஆகும்.  நவம்பரில் அடுத்ததாக Revelations வரப் போகிறது.  இந்த விளையாட்டுக்கு என் மகன்கள் இருவரும் ரசிகர்கள். அவர்கள் சொல்லி நான் இதைப் பற்றித் தெரிந்து கொண்டேன். முழுமையான விவரங்களுக்கு விக்கிபீடியாவில் பாருங்கள்!

Assassin's creed கதையை எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தால், --- ஏழாம் அறிவு விமர்சனத்தைப் படித்தவர்களுக்குக் கட்டாயம் இப்படித் தோன்றும்!!  போதி தருமர் என்னும் தமிழர், இங்கிருந்து சீனா சென்று அங்கு அவர் சொல்லித் தரும் உடற்பயிற்சிக் கலையே குங்க்ஃபூ (உண்மை); அவரது வம்சாவழியில் வரும் சூர்யா, DNA இன்ன பிற சமாச்சாரம் மூலம் அழிந்த கலைகளை இக்காலத்துக்கு கொணரும் முயற்சி கதையில் ஒரு முக்கிய அம்சமாக வருகிறது.

வேலாயுதத்திற்கும் Assaassin's creed -க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், கீழே உள்ள படங்களைப் பாருங்கள்:


ஃபேஸ் புக்கில் இது குறித்து ஏற்கெனவே சிலர் படித்திருந்திருக்கலாம். வேலாயுதம் Azad என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக் என்பதை அறிந்திருப்பீர்கள்.  தமிழ்க் கதையில் காமெடி கலந்து, வெகு நாட்களுக்குப் பின் விஜய் ரசிகர்களுக்குப் பிடித்தமான படமாக வந்திருப்பதாக விமர்சனங்கள் கூறுகின்றன.  Assassin's creed விளையாட்டிலிருந்து காட்சிகளை நகலெடுத்திருப்பது இளைய ரசிகர்களைக் கவர்வதற்காக இருக்கலாம்!  

தமிழ் சினிமாவில் கற்பனை வளங்கள் குறைந்து விட்டனவா?!!

Tuesday, October 25, 2011

தீபாவளி - சிறப்புப் பேட்டி!!

அந்தக் காலத்தில் என் அப்பா ஒவ்வொரு தீபாவளிக்கு முதல் நாளும், 'விடிந்தால் தீபாவளி, பௌர்ணமி நிலவு ஒளி வீசிக் கொண்டிருந்தது' என்று கடி ஜோக் அடித்துக் கொண்டிருப்பார்!   இப்படி எழுதிக் கொண்டிருந்த போது, சக பதிவர்களின் அன்றைய தீபாவளி - இன்றைய தீபாவளிப் பதிவுகள் பலவற்றைக் கண்டேன்.  சரி, தொலைக்காட்சி பாணியில் சிறப்புப் பேட்டி எடுக்கலாம் என்று கிளம்பி விட்டேன்!  கேள்விகளை எழுதித் தயார்ப்படுத்திக் கொண்டேன்.

அந்த முக்கியமான மனிதரிடம் பேட்டி வேண்டும் என்று கேட்டவுடன் ரொம்பவும் தான் அலட்டிக் கொண்டார்!  மிகவும் கெஞ்சிக் கேட்ட பின் ஐந்து நிமிட பேட்டிக்கு ஒத்துக் கொண்டார்!  இனி மினி பேட்டி:

கேள்வி 1: பேட்டியை ஆரம்பிக்கலாமா? உங்களைப் பற்றி...
பதில்:   'லோக க்ஷேமம் வஹாம்யகம்'!!  எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ இறைவன் அருளட்டும்!  

கேள்வி 2: தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?
பதில்:    இப்போதைய தீபாவளிக் கொண்டாட்டங்களில் விதவிதமான பட்டாசுகள் வந்து விட்டன.  வாண வேடிக்கைகளை, வானத்தில் பார்த்து மகிழ நன்றாகத் தான் இருக்கிறது.  தொலைக்காட்சி பார்ப்பதும் வெடிகளின் சத்தத்தில் கடினம் தான்; அதனால், புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து,   சுற்றம், சொந்தத்தோடு, இனிப்புகள் பரிமாறி, பண்டிகையைக் கொண்டாடுவோம்!!      

கேள்வி 3: ம்,... உங்கள் முதல் தீபாவளி நினைவுகளைச் சொல்லுங்கள்
பதில்:   தீபாவளி என்றால் குடும்பத் தலைவனுக்கு செலவுகள் தான் ஞாபகம் வரும்! குழந்தைகளுக்கு பட்டாசும் புத்தாடையும் ஞாபகம் வரும்!  

கேள்வி 4:  தலைதீபாவளி..?
பதில்:  எங்கள் குடும்பத்தில் அப்போது 8 குழந்தைகள்.  அப்பா ஐம்பது ரூபாய்க்கு பட்டாசு வாங்கி, எல்லாருக்கும் பங்கு பிரிச்சுத் தருவார்! ஒரு சர வெடி, ஒரே ஒரு கலசம், சக்கரம், ஒத்தை வெடி பாக்கெட் என்று என் பங்குக்கு வருவதை சந்தோஷமாக வெடிப்பேன்.  எல்லாருடனும் சேர்ந்து வெடிகளை வெடித்து, ஜாலியாகப் பொழுது போகும். 

கேள்வி 5: இப்போதைய தீபாவளி.?
பதில்:  தலை தீபாவளியை மறக்க முடியுமா?  ஆமாம், அந்த தீபாவளிக்கு என் மனைவி பணியின் காரணமாக வெளியூரில் இருந்ததால், அந்த ஒரு நாள் மட்டும் வந்து போனாள்; சொந்தக்காரர்கள் அவளுக்கு முன்பே வந்திருந்தனர்!! 
 
கேள்வி 6: மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
பதில்: வணக்கம்.  என்னைப் பற்றித் தெரியாதா என்ன? நான் என்ன பெரிய ஆளுன்னு என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள்?


பேட்டி கொடுத்த முக்கிய நபர் என் கணவர்!  பதில் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறதே என்று என் மேல் பரிதாபப்படும்முன் (!!)   என் கேள்விக் குறிப்புகளின் கீழே, பதில்களை நான் தான் மாற்றி எழுதி விட்டேன்!!  முதல் மற்றும் கடைசிக் கேள்விகளின் விடைகள் அப்படியே மாறி விட்டன. இரண்டாம் கேள்விக்கான பதில்   மூன்றில்,  மூன்றாம்   கேள்விக்கான பதில்   நான்கில்,   நான்காம் கேள்விக்கான பதில   ஐந்தில் , ஐந்தாம் கேள்விக்கான பதில்    இரண்டில் !!


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! முடிந்த வரை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தீபாவளியைக் கொண்டாடுவோம்!.  ராக்கெட் போன்ற வெடிகளை அதற்கான  உரிய இடத்தில் தகுந்த பாதுகாப்போடு வெடிப்போம்!   கீழே இருக்கும் வாணத்தை மட்டும் இங்கேயே விடலாம்!! :-))