Showing posts with label புரிதல். Show all posts
Showing posts with label புரிதல். Show all posts

Tuesday, November 8, 2011

அங்கீகாரம் - சிறுகதை

"நீ நல்லவளாகவே இருக்கலாம்; புத்திசாலியா, பார்க்க லட்சணமா இருக்கலாம்! ஆனால், நீ எங்கள் வீட்டுக்குத் தேவையில்லை! எங்கள் வீட்டுப் பழக்க வழக்கமும் உங்கள் பழக்க வழக்கமும் ஒத்துப் போகாது. என் மகன் உனக்கு வேண்டாம். உன்னை அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் என் மாப்பிள்ளைகள் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்?" இது ரிதம் படத்தில் வந்த வசனம் இல்லை. தேவியைப் பார்த்து ராஜாவின் அம்மா சொன்னது. தேவியும் ராஜாவும் காதலித்தனர். தேவியின் வீட்டில் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டனர். தேவி ராஜாவின் வீட்டிற்குச் சென்ற போது ராஜாவின் அம்மா பங்கஜம் சொன்னது தான் மேலே படித்தது!

ராஜா பிறகு எவ்வளவோ முயன்றும் அவன் அம்மாவின் மனதை மாற்ற முடியவில்லை. இப்படியே ஓரிரு வருடங்கள் கழிந்தன. கடைசியாக மணமகள் வீட்டில் 1 மாதம் கெடு கொடுத்து விட்டனர்! வேறு வழியில்லாமல், தேவி-ராஜா திருமணம், ராஜாவைத் தவிர மணமகன் தரப்பிலிருந்து ராஜாவின் தம்பி மட்டும் கலந்து கொண்டு நிறைவேறியது.  தம்பதியர் தனிக்குடித்தனம் சென்றனர்.

இரண்டு மாதம் உருண்டோடியது. ராஜா வீட்டிலிருந்து அவன் அம்மாவைத் தவிர, அவன் அப்பா உட்பட, அனைவரும் இந்தத் தம்பதியிடம் அன்பாகப் பழக ஆரம்பித்தனர். ராஜா திருமணமானதும் முதல் முதலில் அனுப்பிய காசோலையையும் திரும்ப அனுப்பிய அவன் அம்மா   பங்கஜம், அன்றொரு நாள் கூப்பிட்டு அனுப்பிய போது, ஆசையுடன் ஆசி வாங்கச் சென்றனர் இருவரும். பங்கஜத்தம்மாளோ, அங்கிருந்த ராஜாவின் சாமான்களை எடுத்துப் போகச் சொன்னதோடு, ராஜா கொடுத்து விட்ட தீபாவளிப் புடவையையும் திரும்பத் தந்தார்!! தம்பதி கண்ணீரோடு திரும்ப வந்தனர்.


இதோ, அந்தத் தம்பதிக்கு மகளும் பிறந்து விட்டாள்! லக்ஷ்மியை அப்பா வழிப் பாட்டியைத் தவிர அத்தனை சொந்தமும் கொஞ்சி மகிழ்ந்தனர். கூட்டிப் போன போதும் பாட்டி பார்க்க மறுத்து விட்டார்! ஆனாலும் சன்னலின் வழியே அவர் பார்த்ததை, இருவரும் கவனித்துக் கொஞ்சம் ஆறுதல் அடைந்தனர்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு திடீரென தேவியிடமிருந்து ராஜாவிற்குத் தொலைபேசி அழைப்பு - "அம்மா நம் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்". ராஜா உடனே வீட்டிற்குத் திரும்பினான். "ராஜா, நல்லாயிருக்கியா? பேத்தி, அப்படியே என் அம்மா ஜாடை!  லக்ஷ்மி தேவியே தான்" என்று பேசிய   பங்கஜத்தம்மாளைப் பார்த்து திகைத்தான் ராஜா. "எனக்கு லேசாக ஹார்ட் அட்டாக் வந்து, ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். உங்களிடம் எல்லாம் சொல்ல வேண்டாமென்று நான் தான் அப்பாவைத் தடுத்தேன்! ஆஸ்பத்திரியில் இருந்த போது தான் ஒரு கணத்தில் போயிருக்க வேண்டிய உயிர், எதற்கு இந்த வீண் சண்டை எனத் தோன்றியது. அதான் நல்லா குணமானதும் நானே உங்களைப் பார்க்க வந்து விட்டேன்!" என்றார் அவர்.

பங்கஜம்  அதன் பின் இவர்கள் வீட்டுக்கு அவ்வப்போது வந்து போக ஆரம்பித்தார். திடீரென ராஜாவின் அப்பா உடல் நலன் சரியில்லாமல் போக, அனைவரும் ஆஸ்பத்திரிக்கு அலைய ஆரம்பித்தனர். சிகிச்சைகள் பலனின்றி ராஜாவின் அப்பா இறைவனடி சேர்ந்தார். அவருக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தும் ஒன்றும் குறைவில்லாமல ராஜாவின் வீட்டிலேயே செய்து முடித்தனர்.

ஆயிற்று, மாமனார் இறந்து ஒரு வருடம் முடிந்து போனது -   வருஷத் திதி முடிந்த இரண்டாவது நாள் -  இன்று தேவியின் வீட்டில் எல்லா உறவினர்களும் கூடியிருந்தனர்.  வந்திருந்த உறவினர் ஊருக்குக் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். பங்கஜம், எல்லாரிடமும் ஆளுக்கு நூறு ரூபாயைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அங்கே அப்போது வந்த தேவி, "என்ன, எதற்குப் பணம்?" என்று கேட்க, "உன் மாமனார் இது வரை எல்லாருக்கும் கார்த்திகைப் பண்டிகைக்குப் பணம் கொடுத்தாரில்லையா, அதான் இப்போ நான் தொடர்கிறேன்" என்று பங்கஜம் பதில் சொன்னார். தேவியும் தனக்கும் அவர் ஆசிர்வாதமாகப் பணம் தருவார் எனப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் - அவர் இவள் பக்கம் திரும்பவே இல்லை!


பக்கத்தில் இருந்த நாத்தனாரிடம் தேவி மெல்லிய குரலில், "எனக்குக் கிடையாதா?" என்று கேட்க, அவளோ, 'அம்மா, அண்ணி கேட்கறாங்க பாரு!" எனப் போட்டுக் கொடுத்து விட்டாள்! பங்கஜம் தேவியிடம், "உனக்குக் கிடையாது" என்று சொல்லி விட்டு, "இந்தா, உனக்கு இந்தப் புடவை வாங்கி வைத்திருக்கிறேன். நீ பொறுப்பாக எல்லாக் காரியத்தையும் செய்தாய். நான என் கையால் உனக்குப் புடவை வாங்கித் தரணும் என்று தோன்றியது" என்று புடவையைக் கொடுக்க, சுற்றியிருந்தவர்கள் கை தட்டினர்.   தேவி அழ ஆரம்பித்தாள்!