Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Sunday, November 27, 2011

ஞாபகமறதியை ஜெயிப்பது எப்படி?


           இந்தப் பதிவை 36 + என்று போடலாம் என்று நினைத்தேன், ஆனால் இப்போது ஞாபக மறதி இன்னும் சிறு வயதிலேயே ஆரம்பமாகி விடுகிறது.  இந்தப் பேனாவை எங்கு வைத்தேன், சாவி எங்கே, ATM card  எங்கே வைத்தேன் என்று அடிக்கடி தேடுபவரா நீங்கள்?  நானும் அப்படித் தான். 

           இன்னும் மேலே போய், 'டெலிஃஃபோன் பில்லை நான் இன்று கட்ட வேண்டும் என்று நீ ஏன் எனக்கு ஞாபகப்படுத்தவில்லை?' என்று உங்கள் ரங்கமணி/தங்கமணியை எகிறுகிறீர்களா? (என்ன ஒரு வில்லத்தனம்?)

          ஆஃபீஸ்/பள்ளி கிளம்பும் வேளை தான் இந்த ஞாபக மறதிக்கும் peak-hour.  'அம்மா, என் புக்கை/நோட்டை எங்கே ஒளிச்சு வைச்சே?' என்பது என் வீட்டில் அடிக்கடி கேட்கும் வசனம்.  (என் பிபி எகிறிப் போய் நான் என் மகனை எகிறினால், 'எங்கே ஒழிச்சு வைச்சேன்னு கேட்டேன்'  என்று மாற்றிப் பேசி சமாளிப்பான்!).  இந்த ஞாபகமறதி வில்லனை ஜெயிப்பது எப்படி?

            இதற்கு வழி கண்டால் நோபல் பரிசை வெல்லலாமே, நம் சக பதிவர்கள் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்களா என்று பார்த்த போது,  சிலரின் நல்ல ஐடியாக்களையும் பார்த்தேன்.   சும்மா சொல்லக் கூடாது, நம் பதிவர்கள் தொடாத துறையே இல்லை!  சரி, எதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்?... நீங்களும் மறந்துட்டீங்களா?!
       
         ஆராய்ந்து ஒரு வழியைக் கண்டுகொண்டேன்.  இந்த வழி மிக மிகச் சுலபமான வழி.  கணிணியில் உங்களுக்குப் பிடித்த விளையாட்டு இருக்குமில்லையா?  அதாவது நீங்கள் ஜெயிக்கும் விளையாட்டு - நேர் வழியிலோ, cheat  செய்தோ! இந்த விளையாட்டில் கணிணி போட்டியாளரின் பெயரை 'ஞாபக மறதி' என்று வைத்து விடுங்கள் - ஞாபகமறதியை ஜெயித்து விடலாம்.  இந்த வழியில் நான் ஞாபக மறதியை மட்டுமல்லாது சோம்பல், பொறாமை போன்ற தீய குணங்களையும் ஜெயித்திருக்கிறேன் பாருங்கள்:

இப்படி நீங்களும் ஜெயிக்கலாம்!
இந்த விளையாட்டில் ஜெயிக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது?  நான் தான் முதலிலேயே சொல்லிட்டேன் - ஜெயிக்கும் விளையாட்டாய் செலக்ட் பண்ணிக்கோங்க!! இல்லை, இருக்கவே இருக்கு cheat செய்வது (விளையாட்டில் மட்டும்!!) முயற்சி செய்தால் முடியாததே கிடையாது! (டூத் பேஸ்ட்டை வெளியில் எடுத்து பின் உள்ளே போடுவதைத் தவிர!!) திரும்பத் திரும்ப விளையாடி ஜெயித்து விடுங்கள்!!

உண்மையில் ஞாபக மறதியை ஜெயிப்பது எப்படி?  செய்ய வேண்டிய வேலைகளை ஞாபகம் வைத்துக் கொள்ள ஒரு சின்ன நோட்புக்/குறிப்பில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! :)) என்னைப் பொறுத்த வரையில், சின்ன சின்ன குறிப்புகளை  எழுதி வைப்பதன் மூலமாக - நிஜ பேப்பரிலோ இல்லை கணிணியிலோ -நான் ஞாபகம் வைத்துக் கொள்கிறேன்.  ஒரு சின்ன குறிப்பு நோட் வாங்க வேண்டும் என்பதையும் பலமுறை மறந்து போய் என் பையனின் போன வருஷ ஸ்கூல் டைரியை உபயோகிக்கிறேன்!  (என்ன கைபேசியில் reminder/to do வா?  கைப்பேசியையே எங்க வைச்சேன்னு landline நம்பரிலிருந்து கூப்பிட்டுத் தான் கண்டுபிடிக்கிறேன்!!)  

பொருட்களை எங்கே வைத்தது என்று திண்டாடாமல் இருக்க  systematic ஆக இருப்பதும், உபயோகித்த பின் பொருட்களை அவற்றிற்கு உரிய இடத்திலேயே வைப்பதும் தான் சரியான வழி! 

டிஸ்கி: இது ஒரு மீள் பதிவு - சின்ன எடிட்டிங்கோடு!! மறந்து போய் திரும்பப் பதிவிட்டு விட்டேன்!! :-)  

Sunday, November 20, 2011

தாங்க்ஸ் பூனைக்குட்டி!

"கண்ணு கமல்!" அம்மா கூப்பிடுவது காதில் விழுந்தது! 'கண்ணு' அடைமொழியோடு விளித்தால், ஏதோ எனக்குப் பிடிக்காத வேலை!

"என்னம்மா!"

"தம்பிக்கு ஜுரம் ஜாஸ்தியாயிருச்சு! கொஞ்சம் டாக்டர்கிட்ட அவனைக் கூட்டிகிட்டுப் போறயா?" அம்மா கெஞ்சுவது போல் கேட்டாள். "எனக்கு காமர்ஸில் நோட்ஸ் எடுக்கணும். நீயே கூட்டிப் போயேன்மா" என்றேன்.

"கிரைண்டர்ல இட்லிக்கு மாவரைக்கப் போட்டிருக்கேன். ஓடிட்டிருக்கு.  கரண்ட் இப்பத்தானே வந்தது... தம்பியை நீ அப்படியே உன் வண்டில வைச்சு கூட்டிட்டுப் போலாம்லயா? நாளைலருந்து அவனுக்கு மிட் டர்ம் டெஸ்டு நடக்குது. இன்னிக்கு ராஜன் டாக்டர் ஒரு ஊசி போட்டுவிட்டால், ஜுரம் சரியாயிரும்; நாளைக்கு நிம்மதியா டெஸ்ட் எழுதலாம்! அப்பா ஊருக்குப் போயிருக்கும் போதா இவனுக்கு ஜுரம் வரணும்!" என்று புலம்பிய அம்மா, "நீ கிரைண்டரைப் பார்த்து நிறுத்தறியா, நான் ஆட்டோவில் தம்பிய கூட்டிப் போறேன்" என்று என்னை ஆழம் பார்த்தாள்! எனக்குப் பிடிக்காத வேலை என்று அம்மாவுக்குத் தெரியும்!!

"சரி, சரி, நானே போறேன். டேய் விமல்! என்னைய கெட்டியாப் பிடிச்சுப்பியா வண்டில?" என்று கேட்டவாறு கிளம்பினேன். போச்சு, நோட்ஸ் எடுப்பது போச்சு! +2 வில் நல்ல மார்க் வாங்கி டே காலேஜிலேயே பி.காம். சேர்ந்து என்ன புண்ணியம்! எங்கள் காலேஜில் டே காலேஜை விட ஈவினிங் காலேஜுக்குத் தான் நல்ல லெக்சரர்ஸ்! காலையில் காலேஜ் முடித்து மதியம் சி.ஏ.வுக்கான கோர்ஸ் படிக்க வேண்டும் என ஆசை! படித்து பெரிய ஆடிட்டராக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. நிறைய படிக்க வேண்டும்! நோட்ஸ்??.. படிக்கத் தானே ஆசைப்படுகிறேன்! நான் என்ன அடுத்த வீட்டு சுரேஷைப் போல சினிமா, ஓட்டல் என்று வீட்டை ஏமாற்றிப் போகிறேனா என்ன...அலைந்த மனதை Be calm! என்று அடக்கிக் கொண்டே, "விமல்! போகலாமா! மேல போர்வை போர்த்தி விடட்டுமா?" என்று கேட்டபடி புறப்பட்டேன்.

விமல் என்னை இறுக்கப் பிடித்தவாறு பின் சீட்டில் உட்கார, டூ வீலரைக் கிளப்பினேன். டாக்டர் ராஜனின் கிளினிக்கில் ஏகப்பட்ட கூட்டம்! வேறு எந்த டாக்டரும் ஞாயிறு மதியம் கிளினிக் திறப்பதில்லை! இரண்டு மணி நேரமாவது ஆகலாம்! விதவிதமான நோயாளிகள், அவர்களின் செயல்கள் என்று வேடிக்கை பார்த்தவாறு காத்திருந்து டாக்டரைப் பார்த்தோம். கைராசியான டாக்டர்! தம்பியை ஞாபகமாகப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, "ஊசி போடட்டுமா, இல்லை மாத்திரையே போதுமா?" என்று கேட்டார். அவனும், "ஊசி வேண்டாம்" என்று விட்டான்! டாக்டர் மாத்திரைகளும் சிரப்பும் எழுதி, இரண்டு நாள் கழித்து வரச் சொன்னார். ஊரில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் என்று சொல்லி உணவுக்கான பத்திய முறைகளையும் சொன்னார்.

தம்பியை அங்கேயே உட்காரச் சொல்லி விட்டு, அடுத்திருந்த டாக்டரின் தம்பி நடத்தும் மருந்து பெட்டிக்கடை (அவ்வளவு சின்னது) சென்றேன். உள்ளேயிருந்த, வயலட் நிறத்தில் சூடிதார் அணிந்த அழகான பெண், கவுண்டரைத் தாண்டி ரோடையே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் மருந்துச் சீட்டை நீட்டினேன். "பூனைக்குட்டி அங்கே இருக்கா?" என்றாள். திரும்பிப் பார்த்த போது ஒரு பூனைக்குட்டி டாக்டரின் பைக்கின் கீழ் ஒளிந்திருந்தது!. "உங்களுக்கு வேணுமா? பிடித்துத் தரட்டுமா?" என்று கேட்டுத் திரும்பினால், அந்தப் பெண் ஸ்டூலின் மேல் நின்று கொண்டிருந்தாள். பூனைக்குட்டி, கடையின் படியேறி, கவுண்டரின் கீழ் நுழைய முயன்று கொண்டிருந்தது! "எனக்குப் பூனைக்குட்டின்னா பயம்!" என்று சொன்ன அவளைப் பார்த்து எனக்குச் சிரிப்பாக வந்தது! காட்டிக் கொள்ளாமல், "நீங்கள் அங்கிருந்து துரத்த வேண்டும். நான் துரத்தினால், உள்ளே தான் வரும்!" என்றேன்.


"கவலையில்லை! கவுண்டர் கீழ் ஓட்டையை அடைத்து வைத்திருக்கிறேன்!" என்றாள் அந்தப் பெண்! இப்போது என் சிரிப்பை அடக்க முடியவில்லை! "அப்ப ஏன் பயப்படறீங்க!" என்று கேட்டேன். இதற்குள் என் தம்பியும் வர, பூனைக்குட்டியை ஒருவழியாக அங்கிருந்து கிளப்பி விட்டோம்.

இந்தப் பெண்ணை எங்கேயோ பார்த்திருக்கிறோமோ என்று நினைத்த நான், "தப்பாக நினைக்கலேன்னா, உங்களை எங்கேயோ பார்த்த ஞாபகம்!" என்று இழுக்க, "  உங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆக்டிவாவில் பறப்பீர்களே! உங்கள் காலேஜில் தான் நானும் பி.காம் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன். நான் ஈவினிங் காலேஜ்;   இன்னிக்கு என் அண்ணனுக்கு ஹெல்ப் பண்ண மருந்துக் கடைக்கு வந்தேன்.  மதியமே வந்த நான், பூனைக்குட்டிக்குப் பயந்து உள்ளேயே உட்கார்ந்திருக்கிறேன்!  அண்ணன் வந்தவுடன் கிளம்பலாம் என்றிருந்தேன்!" என்றாள்!! ஆகா, பழம் நழுவிப் பாலில் விழுந்தது!

"அப்படியா! எனக்கு இன்னிக்கு லக்கி டே" என்று சொன்னேன் நான், என் தம்பி முறைப்பதையும் பொருட்படுத்தாமல். எப்படியும் கேட்கத் தானே வேண்டும்; நல்லதை ஒத்திப் போடக் கூடாது! "எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா? உங்கள் காமர்ஸ் நோட்ஸை எனக்குத் தந்து உதவ முடியுமா?" என்று ஆரம்பித்தேன்.

வியப்பில் விரிந்த கண்களோடு அவள், "ம், கட்டாயமாகத் தருகிறேன். நீங்கள் எனக்கு இங்கிலீஷ் நோட்ஸ் தந்தால்!! டாக்டரின் வீட்டுக்குப் பக்கத்து வீடு தான் என் வீடு். என் பெயர் ஸ்வேதா! நீங்கள்?" என்று கேட்டாள். "ஸ்... என்னை நான் இன்ரொடியூஸே பண்ணிக்கலையே, என் பெயர் கமலா" என்றேன் நான்.

ஒரு அழகான நட்பை உருவாக்கிக் கொடுத்த பூனைக்குட்டிக்குத் தாங்க்ஸ்!!

Sunday, May 22, 2011

ச்சும்மா... காமெடிக்கு...

முஸ்கி: இந்தப் பதிவில் வரும் பதிவர்கள் அனைவரும் கற்பனையே.   யாராவது தன்னைக் குறிக்கிறது என்று கருதினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல!

பதிவர் 1008 -ன் பதிவு இது:

தொட்டதெல்லாம் தோல்வி! ஏன் பிறந்தேன் என்று நோகிறேன்.. வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று யோசிக்கிறேன்... யோசித்த நேரத்தில் என் மானேஜர் வந்து ஏன் வேலை பார்க்கவில்லை என்று வைகிறார்..

பின்னூட்டங்கள்:
பதிவர் 1: வடை

பதிவர் 2: எனக்கு பஜ்ஜி

பதிவர் 1008:  @ ப.1 //வடை// வாங்க, வடை இந்தமுறை உங்களுக்கே!

பதிவர் 1008: @ ப.2 - //எனக்கு பஜ்ஜி// தாராளமா...

பதிவர் 1: இருங்க, படிச்சுட்டு வரேன்...

பதிவர் 1: பதிவு நல்லாயிருக்கு...

பதிவர் 3: தொடர வாழ்த்துக்கள்

பதிவர் 4: //ஏன் பிறந்தேன் என்று நோகிறேன்.. வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று யோசிக்கிறேன்... // தத்துவம்! தொடர...

பதிவர் 6: nice...

பதிவர் 8: இன்று எம் பதிவில்... ஆணி பிடுங்குவது எப்படி?  http://www.பதிவர்8.////

பதிவர் 1008: @ ப.1 - //பதிவு நல்லாயிருக்கு...// நன்றி

பதிவர் 1008: @ ப.3 - //தொடர வாழ்த்துக்கள்// வாழ்த்துக்கு நன்றி

பதிவர் 1008: @ ப.4-  ////ஏன் பிறந்தேன் என்று நோகிறேன்.. வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று யோசிக்கிறேன்... // தத்துவம்! தொடர...//
கருத்துக்கு நன்றி

பதிவர் 1008: @ ப.6 - //nice// நன்றி

பதிவர் 10: இப்பத்தான் உங்கள் பதிவைப் பார்த்தேன்.  மிக நன்றாக இருக்கிறது.  நீங்கள் எதற்கும் இவானோவ் இல்டிமிச் டாவின்ஸ்கி எழுதிய வொய் புத்தகத்தையும் படித்துப் பாருங்கள்...

பதிவர் 11: உங்கள் மானேஜர் செய்தது சரிதான்... இருந்தாலும் அன்பாகச் சொல்லியிருக்கலாம்! :-)

பதிவர் 12: வாழ்த்துக்கள்!

பதிவர் 13: :-))

பதிவர் 1008: @ ப.10 - கட்டாயம் புத்தகம் கிடைத்தவுடன் படிக்கிறேன், நன்றி

பதிவர் 1008: @ ப.11 - மானேஜருக்கு அன்பாகப் பேசவே தெரியாது..!! அவர் எப்பவுமே இப்படித் தான், அவரும் யோசிக்க மாட்டார், யோசிக்கவும் விட மாட்டார்!

 பதிவர் 1008: @ ப.12, 13 - நன்றி

பதிவர் 1008: இன்ட்லி,தமிழ் 10,.... எல்லாவற்றிலும் ஓட்டுப் போட்டவர்களுக்கு நன்றி!!

Dashboard மறைவில்... பதிவர் 5 பதிவைப் படித்தார்... இந்தப் பதிவர் நம் பதிவுக்கு எதுவும் கமெண்டே சமீபத்தில எழுதலை.. தான் எதற்கு எழுதணும்... அடுத்த பதிவுக்கு மவுஸை க்ளிக் செய்துவிட்டார்.
பதிவர் 7 லீவில் இருக்கிறார்...அவர் பதிவு எழுதுவார், மற்றவர் பதிவுக்கு பின்னூட்டம் எழுத நேரம் இருப்பதில்லை.... மற்ற  பதிவர்களுக்கு வெவ்வேறு வேலைகள்..
..........................
பதிவர் 1008 மட்டும் மாபெரும் குழப்பத்தில்... எதைத் தொடர்வது....... எதற்கு வாழ்த்து..........சரி, அடுத்த பதிவுக்கு யோசிப்போம்....

டிஸ்கி: மறுபடி முஸ்கியைப் படித்துப் பாருங்கள் ப்ளீஸ்!

Thursday, March 24, 2011

இந்தியா தோற்காது! - கிரிக்கெட்டும் நானும்

          கூடப் பிறந்த சகோதரர்கள் இல்லாத, லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு முதல்முதலாக கிரிக்கெட்டில் ஆர்வம் வரக் காரணம் - தெருக்களில் நிம்மதியாக நடமாட முடியாமல் 30 அடிக்கு 30 அடி வெவ்வேறு குழுக்கள் அமைத்து விளையாடுகிறார்களே, அப்படியென்ன இருக்கிறது இந்த விளையாட்டில்  என்ற சந்தேகம் தான்!  இதனுடன் ஆங்கிலத்தில் வந்த கிரிக்கெட் -ஜென்டில்மென்ஸ் கேம் என்ற பாடமும்.
          கிரிக்கெட்டை எனக்குப் புரிய வைக்கும் விதமாக வந்தது - வானொலியில் தமிழில் கிரிக்கெட் கமெண்ட்ரி!  படிக்கும் காலத்தில் - அதுவும் பொங்கல் விடுமுறையில் - திருவாளர்கள் அப்துல் ஜப்பார், ராமமூர்த்தி, வல்லுனர் மணி இவர்கள் வர்ணனை கேட்டே கிரிக்கெட் தெரிந்து கொண்டேன்!  'சற்று அளவு குறைவாக வந்த பந்து', 'வீசும் கை விக்கெட்டின் மேல் வர' இவை போன்ற அருமையான phrases.  தமிழ் கொஞ்சி விளையாடும் - முதல் இருவரிடமும்.  தமிழ் கெஞ்சும், வாஸ்தவமாகவே கொஞ்சிப் பேசும் வல்லுனரிடம்.  இதன் பிறகு தொலைக்காட்சியுடன் வர்ணனை என்று என் சிற்றறிவு கொஞ்சம் வளர்ந்தது!
           என் கணவர், மகன்களின் புண்ணியத்தில் இப்போது அதிகம் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கிறேன்.  நேற்றைய நட்சத்திரங்களின் இன்றைய வர்ணனை முன்பு போல அவ்வளவு ரசிக்கவில்லை - visuals ன் முக்கியத்துவத்தினால்!.  மற்ற நாடுகள் விளையாடும் போது இடியட் பாக்ஸின் பக்கம் எட்டிப் பார்க்காத நான், இந்தியா விளையாடும் போது மட்டும் மிக்க ஆர்வத்துடன் பார்ப்பேன்.  மற்ற அணியின் பிரபல ஆட்டக்காரர்களின் பெயர்கள் மட்டுமே தெரியும் எனக்கு, இந்திய வீரர்களை அடையாளம் காண இயலும்! 
          பதிவுலகிலும், தொலைக்காட்சியிலும் யார் எவ்வளவு ரன் அடித்தால்/அடிக்காமலிருந்தால் வெற்றி வாய்ப்பிருக்கிறது என்று ஆராய்ச்சியைப் பார்க்கிறேன்.  அடிக்கடி குறுக்கிடும் வார்த்தைகள் - இப்படியிருந்தால் இந்தியா ஜெயிக்கும் - இல்லை, தோற்கும்!
          எனக்குத் தமிழில், ஆங்கிலத்தில் மற்றும் உலகின் எந்த மொழியிலும் பிடிக்காத வார்த்தைகள் 'இந்தியா தோற்று விடும்"!   இதற்கு வாய்ப்பே இல்லை!  இந்தியன் டீம் வேண்டுமானால் தோற்குமே தவிர, இந்தியா என்றும் தோற்காது!
          இந்தியன் டீம் ஜெயிக்க நம் கிரிக்கெட்டர்கள்  டீம் ஸ்பிரிட்டுடன், கடைசி ஓவர் வரை நம்பிக்கை இழக்காமல் விளையாடினால் போதும்.  எண்ணங்களின் சக்தியைப் பற்றி படித்திருப்பீர்கள்! இந்தியன் டீம் கட்டாயம் ஜெயிக்கும் என நம்புங்கள்! Keep your fingers crossed!
          இந்தியா எப்போதும் ஜெயிக்கும்! ஜெய் ஹிந்த்! 



Friday, February 25, 2011

ஃபிஃப்டி-ஃபிஃப்டி- பகுதி 2

முன் கதைச் சுருக்கம்: அப்பா ராஜா, அம்மா தேவி, மகன் ஆனந்த், மகள் ஆர்த்தி நால்வர் கொண்ட குடும்பம்.  தேவி, குழந்தைகளிடம், சண்டை வந்தால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும் - விட்டுக் கொடுத்தலில்  ஃபிஃப்டி-ஃபிஃப்டி இருக்க வேண்டும் என்று சொல்கிறாள். (முழுமையாகப் படிக்க இங்கே க்ளிக்கவும்) இனி....

          மாலையானதும் குழந்தைகள் விளையாடிவிட்டு, ஹோம்வொர்க் செய்ய, தம் அறைக்குச் சென்றனர்.  ராஜா, இசையுலகில் உலவ, கணிணிக்குச் சென்றான்.  வீட்டு வேலைகளை முடித்த தேவி அயர்வுடன், திரும்பத் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்தாள்.  சானல் சர்ஃபிங்கில் மசாலாப் படங்களில் மாறுபட்டுத் தெரிந்த அந்த படத்தைப் பார்க்க ஆரம்பித்தாள்.  குழந்தைகள் இரவு உணவு உண்டு, மிச்ச ஹோம்வொர்க் எழுத்து வேலையை அங்கேயே முடிப்பதாகச் சொல்லி எழுத ஆரம்பித்தனர்.

          ராஜா, "குழந்தைங்க சாப்பிட்டாச்சா?" என்று கேட்டபடி சாப்பிட வர, ராஜாவும் தேவியும் சாப்பிட ஆரம்பித்தனர்.  "என்ன சினிமா பார்க்கறே?" என்று ராஜா கேட்க, தேவி, "ஏதோ மதுரை டு தேனின்னு பஸ் ரூட் போட்டு படம்; வித்தியாசமா இருக்கு" என்று ரிமோட்டில் தன் உரிமையை நிலைநாட்டினாள்!.   சாப்பிட்டு முடித்தாயிற்று.

          அப்போது திரையில் ஒரு பாட்டு ஓட ஆரம்பிக்க, தேவி, "இந்த ட்யூன் தெரிஞ்சா மாதிரி இருக்கே, ம்...." என்றவள்,  "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே" என்று பாட ஆரம்பித்தாள்.  ராஜா, "இல்லை, இது 'ஏச்சுப் பொழக்கும் தொழிலே சரிதானா, எண்ணிப் பாருங்க'ங்கற பாட்டு, நீ சொல்ற பாட்டு இல்ல!" என்றான்!

          தேவி, "என் அப்பா பாடி நான் கேட்டிருக்கேன், நான் சொன்ன பாட்டுத் தான், M K தியாகராஜ பாகவதர் பாடினது" என்றாள்.  ராஜாவோ, "இது MGR பாட்டு, மதுரை வீரன் படம்" என்று சொல்ல, அங்கு ஒரு கருத்து வேறுபாடு - சண்டையானது.  திரையில் பாடல் முடிவுக்கு வந்தது, "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே"என்ற வரிகளோடு! தேவியின் கொண்டாட்டத்தைக் கேட்க வேண்டுமா!  ராஜாவோ தான் சொன்ன பாட்டு சரி தான் என்றும், இந்தப் பாடல் முடிந்தது வேண்டுமானால் - தேவி சொன்ன பாட்டில் என்றும் சொல்லிக் கொண்டிருந்தான்!

          குழந்தைகள் பெற்றோரிடம் வந்து, "அம்மா, எங்களை சண்டையில் விட்டுத் தரச் சொன்னியே, இப்ப நீ விட்டுத் தாம்மா! அப்பா, நீயும் தான்ப்பா" என்று கேட்க, தேவி "விட்டுத் தரதில ஃபிஃப்டி-ஃபிஃப்டி வேணாமா?" என்று சொன்னவாறு அந்த இடத்தை விட்டு நகர, சண்டை ஒருவழியாக ஓய்ந்தது.

          தேவி அடுத்த நாள் ராஜா, குழந்தைகள் கிளம்பி அலுவலகம், பள்ளி என்று சென்றபின் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, கணிணியில் வலைத் தளங்களில் தங்கள் பிரச்னைக்குரிய பாடல்கள் பற்றியத் தகவல்களைத் தேட ஆரம்பித்தாள். 

          1939-ல் வெளியான 'திருநீலகண்டர்' படத்தில் M K தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே".  இப்படத்தின் இசையமைப்பாளர் பற்றிய குறிப்புகள் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறாக இருந்தது.

          இசை மேதை திரு G.ராமனாதன் அவர்கள் M K தியாகராஜ பாகவதரின் தீவிர அபிமானி.  அவர் இந்தப் பாடலின் இசையில் கவரப்பட்டு, தான் இசையமைத்த M G R நடித்த மதுரைவீரன்(1956-ல் வெளியானது) படத்தில் இதே ட்யூனில் "'ஏச்சுப் பொழக்கும் தொழிலே சரிதானா, எண்ணிப் பாருங்க" என்று TMSஐயும் ஜிக்கியையும் பாட வைத்தார்!

          தேவிக்குத் திகைப்பு - ஜெயித்தது யார், -  இருவரும் ஆளுக்கு ஒரு பாடல் - அவரவருக்குத் தெரிந்ததைச் சொன்னோம், இருவரும் சரி!, ஜெயிச்சதிலயும் ஃபிஃப்டி-ஃபிஃப்டி!!  ராஜாவுக்குக் கைப்பேசியில் விவரத்தைச் சொல்ல, ராஜா, "அப்போ,  நான் ஆஃபிஸ் விட்டு வரும்போது ஸ்வீட் காரம் வாங்கி வரவா, ஜெயிச்சதுக்கும் தோத்ததுக்கும் ஃபிஃப்டி-ஃபிஃப்டி!!" என்றான்!! 

குறிப்பு: பாடல்கள் இதோ:
1. 'மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி'  படத்தில் இவர்களுக்குப் பிரச்னையான பாடல் 'கலகலக்கும் எங்க காலேஜ்..'(கடைசி வரிகள் சினிமாவில்):
http://www.youtube.com/watch?v=XbMMhCMfvHU&feature=related
2. "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே" பாடலுக்கு:
http://www.youtube.com/watch?v=6wTGjx4lIQY
3. "'ஏச்சுப் பொழக்கும் தொழிலே சரிதானா, எண்ணிப் பாருங்க"  பாடலுக்கு: 
http://www.musicglitz.com/player.do?SongId=4046&pagesrc=undefined&id=undefined (பாடல் மட்டும்) அல்லது
http://www.youtube.com/watch?v=VdDyCcros6g  

Monday, February 14, 2011

சூடான ஜோக்ஸ்

ஒருவர் வீட்டில் வந்து ஒட்டிக் கொண்ட பூனையை எப்படியாவது ஒழித்துக் கட்டத் திட்டமிட்டார்.  அந்தப் பூனையை அவர் வாக்கிங் போகும் சமயம் 2 கி.மீ. தள்ளியிருந்த இடத்தில் விட்டுவிட்டார்.
அவர் வீடு திரும்பும் முன்னே அது வீட்டுக்குப் போய் விட்டது!
அடுத்த முறை டூ வீலரில் எடுத்துச் சென்று 5 கி.மீ.தள்ளியிருந்த இடத்தில் விட்டார்.  பூனை அவர் வீடு வந்த 15 நிமிடங்களில் வீட்டுக்கு வந்து விட்டது!
 வழி தெரிவதால் தான் பூனை வீட்டுக்கு வருகிறது என்று எண்ணிய அவர், இம்முறை காரை எடுத்துக் கொண்டு கிழக்கில்   5 கி.மீ., மேற்கில் 6 கி.மீ., பிறகு தெற்கே, வடக்கே என்று திசை மாற்றி மாற்றிச் சுற்றி விட்டு, வழியில் பூனையையும் இறக்கி விட்டார். 
இதன் நடுவே அவர் கிளம்பி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் கவலைப்பட்ட அவர் மனைவி அவரைக் கைப்பேசியில் அழைக்க, ஒரு மணி நேரம் வரை 'தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக' திரும்பத் திரும்ப பதில் வந்தது!  சரி, கொஞ்சம் பொறுத்துக் கூப்பிடுவோம் என்று விட்டுவிட்டார்.
அரைமணி நேரம் கழித்து மனைவியைக் கைப்பேசியில் அவரே கூப்பிட்டார்.  டென்ஷனாயிருந்த மனைவி, "ஏன் நீங்க இன்னும் வீட்டுக்கு வரலை? நீங்க கொண்டுவிட்ட பூனை வந்து அரை மணியாகிவிட்டது!" என்று கூறினார்.  கணவர். "அந்த சனியன் பிடிச்ச பூனையிடம் ஃபோனைக் கொடு, எனக்கு வீட்டுக்கு வர வழி தெரியலை!" என்றார்!!
######################################################################
மற்றொருவர் வாரந்தோறும் கோயிலுக்குச் செல்லும்போது அங்கிருந்த ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  6 மாதம் கழிந்த பிறகு, அவர் அந்தப் பிச்சைக்காரனுக்கு 75 பைசாக்கள் மட்டும் போட்டார்.  ஒரு வருடம் கழித்தது.  இப்போது அவர் அந்தப் பிச்சைக்காரனுக்கு 50 காசுகள் மட்டும் போட்டார்.  அடுத்த 2 வருடங்களில் இதுவும் குறைந்து அவர் பிச்சைக்காரனுக்கு 25 காசுகள் மட்டுமே போட்டார்.  இத்தனை நாள் பொறுத்த பிச்சைகாரன்(ர்), (அவருக்கும் வயசாகிடுச்சில்ல!) ஏன் இப்படி படிப்படியாக குறைந்த காசுகளைப் பிச்சை போடுகிறார் எனக் கேட்க, அந்த மனிதரும் ஸின்ஸியராக, 'மிஸ்டர் பெக்கர், முதலில் நான் பேச்சிலர், 1 ரூபாய் போட்டேன், பிறகு கல்யாணமாச்சு, பெண்டாட்டியையும் கவனிக்கணும், 75 காசு போட்டேன், பிறகு குழந்தை பிறந்தது, 50 காசு போட்டேன்.  இப்போ அந்தக் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கக் காசு சேமிக்க வேண்டியிருக்கு, அதனால் 25 காசு போடறேன்' என்றார்.
பிச்சைக்காரர் யோசித்தார். 'அப்போ என் வருமானத்தில் தான் நீ குடும்பம் நடத்தறேன்னு சொல்லு' என்றார்!!
###################################################################
நஸ்கி 1 : நடுவில் வருவதால் நஸ்கி!
நஸ்கி 2 : இந்த ஜோக்ஸ் சுட்டவையாதலால், சூடான ஜோக்ஸ்!! சுட்ட இடம், ஜீ தமிழ் டி.வி., ஒரு நிகழ்ச்சியில் Humour club ஐச் சேர்ந்த இருவர் பேசியதிலிருந்து
###################################################################
பேசிய ஒருவர் பட்டிமன்றப் பேச்சாளராம்.  அவர் அடுத்த நாள் வெளியூர் கிளம்ப வேண்டுமானால், முதல் நாள் இரவு தன் மனைவியிடம் தான் அடுத்த நாள் கிளம்ப வேண்டும் என்று சொல்லி விடுவாராம், காரணம் மனைவி விடியற்காலை 4 மணிக்கு இவரை எழுப்பி காஃபி கொடுத்து வழியனுப்ப வேண்டும்!  இப்படி ஒரு நாள் திருச்சிக்குக் கிளம்ப வேண்டும் என்று  மனைவியிடம் சொல்கிறார்.  மனைவியும் அவரைக் காலையில்  எழுப்பி காஃபி கொடுக்கிறார்.  அப்போது வீட்டில் வளர்க்கும் செல்ல நாய் அங்கு அவரைச் சுற்றிச் சுற்றி வர, அதை 2 நாள் பிரியப் போகிறோமே என்று மனம் உருகி, கொஞ்சம் காஃபியை அதன் தட்டில் விடுகிறார்.  அதைக் குடிக்கச் சொல்லிக் கொஞ்சும்போது உள்ளிருந்து மனைவியின் வாய்ஸ்: 'நாய்க்கு உங்களுக்குக் கொடுத்த காஃபியை கொடுக்காதீர்கள், அதற்கு முந்தின நாள் பால் ஆகாது!'
#####################################################################
வாய் விட்டுச் சிரிப்பதால், மன அழுத்தம் குறைகிறது, நோய்கள் குறைகிறது, நோய்கள் வரும் வாய்ப்பும் குறைகிறது, இதனாலேயே ஒரு புகழ் பெற்ற cardiologistம் தங்கள் humour club ன் அங்கத்தினர் என்று சொன்ன ஒருவர், அந்தக் கார்டியாலஜிஸ்ட் சம்பாதிப்பது நேர் வழியில் இல்லை என்று அறிமுகப்படுத்தப்பட்டதாகச் சொன்னார், - சம்பாதிப்பது எல்லாம் By-pass-லயாம்!!
#####################################################################

வாலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்!!

Thursday, February 10, 2011

ஞாபகமறதியை ஜெயிப்பது எப்படி?

           இந்தப் பதிவை 36 + என்று போடலாம் என்று நினைத்தேன், ஆனால் இப்போது ஞாபக மறதி இன்னும் சிறு வயதிலேயே ஆரம்பமாகி விடுகிறது.  இந்தப் பேனாவை எங்கு வைத்தேன், சாவி எங்கே, ATM card  எங்கே வைத்தேன் என்று அடிக்கடி தேடுபவரா நீங்கள்?  நானும் அப்படித் தான். 
           இன்னும் மேலே போய், 'டெலிஃஃபோன் பில்லை நான் இன்று கட்ட வேண்டும் என்று ஏன் ஞாபகப்படுத்தவில்லை?' என்று உங்கள் ரங்கமணி/தங்கமணியை எகிறுகிறீர்களா? (என்ன ஒரு வில்லத்தனம்?)
          ஆஃபீஸ்/பள்ளி கிளம்பும் வேளை தான் இந்த ஞாபக மறதிக்கும் peak-hour.  'அம்மா, என் புக்கை/நோட்டை எங்கே ஒளிச்சு வைச்சே?' என்பது என் வீட்டில் அடிக்கடி கேட்கும் வசனம்.  (என் பிபி எகிறிப் போய் நான் என் மகனை எகிறினால், 'எங்கே ஒழிச்சு வைச்சேன்னு கேட்டேன்'  என்று மாற்றிப் பேசி சமாளிப்பான்!).  இந்த ஞாபகமறதி வில்லனை ஜெயிப்பது எப்படி?
            இதற்கு வழி கண்டால் நோபல் பரிசை வெல்லலாமே, நம் சக பதிவர்கள் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்களா என்று பார்த்த போது,  சிலரின் நல்ல ஐடியாக்களையும் பார்த்தேன்.   சும்மா சொல்லக் கூடாது, நம் பதிவர்கள் தொடாத துறையே இல்லை!  சரி, எதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்?... நீங்களும் மறந்துட்டீங்களா?!
          ஆராய்ந்து ஒரு வழியைக் கண்டுகொண்டேன்.  இந்த வழி மிக மிகச் சுலபமான வழி.  கணிணியில் உங்களுக்குப் பிடித்த விளையாட்டு இருக்குமில்லையா?  அதாவது நீங்கள் ஜெயிக்கும் விளையாட்டு - நேர் வழியிலோ, cheat  செய்தோ! இந்த விளையாட்டில் கணிணி போட்டியாளரின் பெயரை 'ஞாபக மறதி' என்று வைத்து விடுங்கள் - ஞாபகமறதியை ஜெயித்து விடலாம்.  இந்த வழியில் நான் ஞாபக மறதியை மட்டுமல்லாது சோம்பல், பொறாமை போன்ற தீய குணங்களையும் ஜெயித்திருக்கிறேன் பாருங்கள்:

இப்படி நீங்களும் ஜெயிக்கலாம்!
இந்தக் குறிப்புகளை ஞாபகம் வைத்துக் கொள்ள ஒரு சின்ன நோட்புக்/குறிப்பில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! :)) - கணிணியில் இல்லாத சமயம் சின்ன சின்ன குறிப்புகளை  எழுதி வைப்பதன் மூலமாக நான் ஞாபகம் வைத்துக் கொள்கிறேன்.  ஒரு சின்ன குறிப்பு நோட் வாங்க வேண்டும் என்பதையும் பலமுறை மறந்து போய் என் பையனின் போன வருஷ ஸ்கூல் டைரியை உபயோகிக்கிறேன்!  (என்ன கைபேசியில் reminder/to do வா?  அதையே எங்க வைச்சேன்னு landline நம்பரிலிருந்து கூப்பிட்டுத் தான் கண்டுபிடிக்கிறேன்!!)  பொருட்களை எங்கே வைத்தது என்று திண்டாடாமல் இருக்க  systematic ஆக இருப்பதும், உபயோகித்த பின் பொருட்களை அவற்றிற்கு உரிய இடத்திலேயே வைப்பதும் தான் வழி!

Wednesday, December 8, 2010

ஜஸ்ட் லாஜிக்/ ஜஸ்ட் மொக்கை

இந்தக் கேள்விகளுக்கு விடைகள் தெரியுமா?
1. பத்தொன்பதிலிருந்து ஒன்றை எடுத்து இருபது ஆக்க முடியுமா?
2.இரு கதவுகள்ஒன்று சொர்க்கத்துக்கும் ஒன்று நரகத்துக்கும் வாசல்.  காவல் காப்பவர்களில் ஒருவர் பொய் மட்டுமே சொல்வார்; ஒருவர் உண்மை மட்டுமே சொல்வார்.  இரு காவலர்களிடமும் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்கலாம்.  சொர்க்கத்துக்கு போகும் வழியை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?
3.Chess Board-ல் எத்தனை சதுரங்கள் உள்ளன?
4.1-லிருந்து 100 வரை எத்தனை 8-கள் உள்ளன?
5.ஒரு கேள்வியை எத்தனை முறை ஒரு நாளில் கேட்டாலும் வெவ்வேறு பதில் வரும்.  ஆனால் எல்லா பதிலும் சரியாக இருக்கும்.  அது என்ன?
6.ஞாயிறு, செவ்வாய், வெள்ளி இவற்றை உபயோகிக்காமல் தொடர்ந்து 3 நாட்களைச் சொல்லவும்?
விடைகளை நாளை வெளியிடுகிறேன்.