Monday, December 27, 2010

சின்னக் குறும்புகளும் கேள்விகளும்

இரு மகன்களில் பெரியவனுக்கு அரையாண்டு பரிட்சைகள் முடிந்துவிட்டன.  நேற்று இருவரும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆகி விட்டனர்.  வீட்டில் இருந்த வாஷிங் சோப், காலாவதியான மாத்திரைகள், மண் போன்ற எதையும் விட்டுவிடாமல் Nova-7 (?) என்று ஒன்றைத் தயார் செய்து fridge freezer-ல் வைத்து ஆராய்ந்து வருகிறார்கள்.  Fridge வாங்கி 12 வருடங்கள் ஆகி விட்டன.  அதனால், வந்தவரை நஷ்டமும் புது ஃப்ரிட்ஜ் லாபம் என்று விட்டு விட்டேன்!!
ஏற்கெனவே http://middleclassmadhavi.blogspot.com/2010/10/blog-post_29.html மற்றும்
http://middleclassmadhavi.blogspot.com/2010/10/blog-post_27.html பதிவுகளில் என் மகன்கள் பற்றி எழுதியுள்ளேன்.  இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு வைத்துள்ளனர்.  இன்னும் 6 ஆண்டுகளுக்கு முன்னே, இருவரும் சிறு குழந்தைகளாக இருந்த போது பள்ளியிலிருந்து வந்து வீட்டில் தனியே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.  (நான் பணி முடிந்து திரும்பும் வரை.) பெரியவனே சின்னவனுக்கு வேண்டிய சகலத்தையும் செய்தான்.  இவர்கள் அன்பை விளக்க ஒரு பின்னோட்டம் -
இன்றைக்கு 4 ஆண்டுகளுக்கு முன்---வழக்கம் போல நான் என் குழந்தைகளுடன் அந்தி நேரத்தில் பக்கத்தில் இருந்த பூங்கா பக்கம் நடைப் பயிற்சி, கூடவே புது ஊரில் புது பள்ளியில் நடந்த அனுபவங்களை நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தோம்.  இருள் கவியத் தொடங்கியது.  வெளிச்சமும் சரியாக இல்லை. ஒரு பக்கம் மூத்த்வன், மறுபக்கம் இளையவன், நடுவே நான்.  திடீரெனக் கண்முன்னே ஒரு வெள்ளி நதி போல ஒரு உருவம்..  சின்னவன் அடுத்த அடி வைத்திருந்தால், அந்தப் பாம்பு மேல் தான்!  உள்ளுணர்வில், அவனைப் பிடித்து பின்னே இழுத்து விட்டேன்.  பாம்பு ஓடி விட்டது.  பெரியவன் அதிர்ச்சியுடன் என்னிடம் "ரொம்ப தாங்க்ஸ்மா, என் தம்பி உயிரைக் காப்பாற்றியதற்கு" என்றான்!!!. 

இம்மாதிரி நிகழ்ச்சிகள் நம் எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கும்.  (வயதான பின்பு ஞாபகத்தில் வைத்து மகிழ எனக்கு இந்தப் பதிவு உதவும்!! :-)) ) சில சமயம் இம்மாதிரி பேச்சுகளால் சங்கடம் வருவதும் உண்டு.  காலாண்டு தேர்வின் போது, சின்னவன் அறிவியல் இரண்டாம் தாள் சரியாக எழுதவில்லை என்றான்.  என் நாக்கில் சனி புகுந்து 'ஏன்  சரியாகப் படிக்கவில்லை' எனக் கேட்டு விட்டேன்.  (அறிவியல் அதுவும் இரண்டாம் தாள் எனக்கு வராது என அவனுக்குத் தெரியும் - இந்த சப்ஜெக்ட்டில்  சந்தேகம் இருந்தால் அவன் அப்பா தான் சொல்லித் தருவார்).  "இந்த வாரம் சனிக் கிழமை நீ என் பாடப் புத்தகத்தைப் படிக்கிறே, ஞாயிறு என் question paperக்கே ஆன்ஸர் பண்றே" என்று சொல்லி விட்டான்.  அந்த வார விடுமுறையில் விருந்தினர் வர, நான் தப்பித்தேன். 
இப்படி எல்லாம் பேசினாலும், உதவுவதில் மன்னர்கள் என் பிள்ளைகள்.  என் handbag-ல் இருந்து ஒரு பொருளைக் கொண்டு வரச் சொன்னால், பையையே கொண்ர்ந்து கொடுத்துவிட்டு, 'நான் ஹனுமார்' என்று ஹைக்கூ படிப்பார்கள். (தேடச் சோம்பல்?!!)
சரி, எனது இப்போதைய சங்கடத்துக்கு வருகிறேன் - 'கடுகை எண்ணையில் போட்டால், ஏன் வெடிக்கிறது? அதனுள்ளே வெடிபொருள் இருக்கா?' இது சின்னவனின் இப்போதைய கேள்வி.  சின்னவனின் பரிட்சைகள் முடிவதற்குள் யாரேனும் எனக்கு விடை சொல்கிறீர்களா?????

Sunday, December 12, 2010

மேலும் மொக்கை / லாஜிக்

ஆங்கில எழுத்துக்கள் பற்றிய சில கேள்விகள்: (முன்பே பாபுலர் ஆகியிருந்தாலும் 'வரலாற்றில் பதி'வதற்காக)
1.வரிசையில் நிற்கும் எழுத்து Q; சூடான பானம் பருகும் எழுத்து T.  எப்பவும் கூலாக இருக்கும் எழுத்து எது?
2.எப்ப அடிபட்டாலும் சிகிச்சைக்குக் கவலைப்பட வேண்டாத எழுத்துகள் எவை?
இனி ஆங்கில எழுத்துகள்/வார்த்தைகள் கொண்டு தமிழ்/ஆங்கில பதில்கள் கொண்ட கேள்விகள்:
அ) உலகிலேயே உங்களை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கும் நகரம்(city) எது?
ஆ) அலைகள் இருந்தும் தண்ணீர் இல்லாத கடல்(சி) எது?
மூன்றாவது வகைக் கேள்விகள்
i) 50 கோழிகள் இருந்த கோழிப் பண்ணையில் இரண்டைத் தவிர மற்றவை இறந்துவிட்டன.  எத்தனை கோழிகள் உயிரோடு இருந்தன?
ii) உங்கள் ஒரு கையில் 4 ஆப்பிள்களும் 3 ஆரஞ்சுகளும் மற்றொரு கையில் 3 ஆப்பிள்களும் 4 ஆரஞ்சுகளும் இருந்தால், உங்களிடம் எவை இருக்கும்?
பதில்கள் வரவேற்கப்படுகின்றன.

Wednesday, December 8, 2010

ஜஸ்ட் லாஜிக்/ ஜஸ்ட் மொக்கை

இந்தக் கேள்விகளுக்கு விடைகள் தெரியுமா?
1. பத்தொன்பதிலிருந்து ஒன்றை எடுத்து இருபது ஆக்க முடியுமா?
2.இரு கதவுகள்ஒன்று சொர்க்கத்துக்கும் ஒன்று நரகத்துக்கும் வாசல்.  காவல் காப்பவர்களில் ஒருவர் பொய் மட்டுமே சொல்வார்; ஒருவர் உண்மை மட்டுமே சொல்வார்.  இரு காவலர்களிடமும் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்கலாம்.  சொர்க்கத்துக்கு போகும் வழியை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?
3.Chess Board-ல் எத்தனை சதுரங்கள் உள்ளன?
4.1-லிருந்து 100 வரை எத்தனை 8-கள் உள்ளன?
5.ஒரு கேள்வியை எத்தனை முறை ஒரு நாளில் கேட்டாலும் வெவ்வேறு பதில் வரும்.  ஆனால் எல்லா பதிலும் சரியாக இருக்கும்.  அது என்ன?
6.ஞாயிறு, செவ்வாய், வெள்ளி இவற்றை உபயோகிக்காமல் தொடர்ந்து 3 நாட்களைச் சொல்லவும்?
விடைகளை நாளை வெளியிடுகிறேன்.

Saturday, November 27, 2010

ரயில் பயணங்களில் குறட்டை

அண்மையில் இரவு நேரத்தில் ரயில்வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தது.  பயண நேரம் 5-6 (11 டூ 5.30) மணி நேரம் தான்.  அடுத்த நாள் நான் என் தலைமையகத்தில் ஒரு முக்கியமான presentation படைக்க -படிக்க வேண்டியிருந்தது.  என் எதிரில் இருந்த நபர் விட்ட குறட்டை சப்தத்தில் ஒரு வினாடி கூட தூங்க இயலவில்லை.  என் பெட்டியில் இருந்த அனைவரும் தான்.  நான் பண்ணிய சப்தங்களுக்கோ, ஜன்னல் திரையைத் திறந்து வெளிச்சம் முகத்தில் பட வைத்ததற்கோ அந்த ஒல்லியான 30-35 வயதிற்கு உட்பட்ட நபர் கண்ணிமை முடியைக் கூட அசைக்கவில்லை.  அவர் விழித்தவுடன் நான் அவரைக் கேட்க நினைத்தது 'உங்கள் மனைவி உங்களுடன் தான் இருக்கிறாரா?, உங்களுக்கு அடினாய்ட் ப்ரச்னை உள்ளதா என்று  செக் பண்ணியிருக்கிறீர்களா?' என்று.  நாகரிகம் தடுத்தது.  அந்த நபர் சட்டென்று எழுந்து தனது பெட்டியுடன் நான் இறங்க வேண்டிய இடத்திற்கு 2 ஸ்டேஷன் முன்பே இறங்கிச் சென்றார்.
நான் இப்போது அறிய விழைவது - இம்மாதிரி குறைபாடு உள்ளவர்கள் அதை அறிந்தே இருப்பார்கள்.  இவர்களுக்கு ஏன் ரயில்வே நிர்வாகம் தனியாக ஒரு கம்பார்ட்மெண்டை ஒதுக்கக் கூடாது?

Wednesday, November 10, 2010

Gulab jamun for diabetic patients

I was diagnosed to be having this problem some time back.  I am learning to live with it and am keeping the diabetes under control.  This Deepavali I tried this:
With the ready mix gulab jamun powder, follow the regular procedure up to deep frying the jamuns.  Put them in the jeera (sugar-water heated solution) for others.  For those who could not take full sugar, keep the fried jamuns separately.  When you want to taste them, put the required quantity in hot water.  After water is absorbed, take the jamuns away, sprinkle them with sugar-free or equal etc covering them fully.  Enjoy your gulab-jamuns.  For added sweetness, you can put some sugar-free or equal in the hot water also.
Disclaimer: I am not a health food expert - but I myself was the guinea pig and I live to tell this story!

Saturday, November 6, 2010

ரஜினிகாந்தின் 'தீபாவளி'?

சபாஷ்! சரியான போட்டி! சன் டிவியில் எந்திரன் உருவான கதை, கலைஞர் டிவியில் சிவாஜி.  என் பிள்ளைகள் எதைப் பார்க்கப் போகிறீர்கள் என்று கேட்ட போது, இரண்டில் எது முதலில் ஆரம்பிக்கிறதோ, அதை என்றும், 'மிகப் பெரிய' விளம்பர இடைவேளையில் மற்றது என்றும் உத்தரவாதம் அளித்தோம், நானும் என் கணவரும்.

எந்திரன் உருவான கதை பார்க்க முக்கிய காரணம் தொழில்நுட்பம் எப்படி உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள - உண்மையான hero or heroes யார் என என் மகன்கள் புரிந்து கொள்ள.  கடைசியில் சன் டிவி தான் பார்த்தோம். 6.45 மணியளவில் என் மக்கள் rocketஐ மொட்டை மாடியில் விடும் அழகைப் பார்க்க மாடிக்குச் சென்றோம்.  பிறகு மொட்டை மாடியிலிருந்து அனைவர் வீட்டிலும் விட்ட fancy பட்டாசுகளின் அணிவகுப்பைப்  பார்த்தோம்.

கீழே வர மனமே இல்லை.  மிக அழகாக இருந்தது வானம்.  பெரிய மகன் தான் கீழே போய் fancy பட்டாசுகளைக் கொளுத்துவதாகவும், எங்களை மேலிருந்து பார்த்து ரசிக்கும் படி சொல்லி, மேலும் எங்களுக்கு திகிலுடன் கூடிய thrillஐக் கொடுத்தான்.

ரஜினிகாந்தின் 'தீபாவளி'யாக மாற இருந்த மாலைப் பொழுதை செலவே இல்லாமல் வாண வேடிக்கையுடன் ஆனந்தமாகக்  கழிக்க வைத்த என் மக்களுக்கும், அக்கம்பக்கத்து 'மக்களு'க்கும் நன்றி.

Friday, October 29, 2010

ஏன் என்ற கேள்வி?

சின்னவனின் சின்ன வயதுக் கேள்விகள் -
கடிகாரத்தில் ஏன் 13-வது முள் இல்லை?
நடக்கும் போது வலது கால் ஏன் முன்னாடி வருது?
மூடியிருக்கும் மொட்டுக்குள் இவ்வளவு வாசனை எப்படி வந்தது?
இன்னும் இந்த ஏன்-கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்போது இன்னும் யோசித்துச் சொல்லும் வகையில் உள்ளன கேள்விகள். (பதில் சொல்லித் தான் ஆக வேண்டும். ஏனென்றால், அவர் என்னை KBC நிகழ்ச்சிக்குப் போகச் சொல்லும் அளவுக்கு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருக்கிறாராக்கும்!)

Wednesday, October 27, 2010

புது மொழிகள்

'தோளுக்கு மிஞ்சினால் தோழன்' பழமொழி தெரியும். என்னை விட உயர்ந்த என் மகனின் புது மொழி - 'தலைக்கு மிஞ்சினால் தலைவன்'

Tuesday, October 26, 2010

விஜிலன்ஸ் வீக் - நினைவு கூர்கிறேன்

இந்த வாரம் விஜிலன்ஸ் அவேர்னஸ் வாரம்.  வருடம் முழுக்க நேர்மையாக இருப்பவர்களுக்கு இதைப் பற்றி நினைவு கூரத் தேவையில்லை.  நான் இங்கு சொல்லப் போவது இதைப் பற்றி இல்லை.  இப்படி வாழ வேண்டும் என்று எனக்குத் தூண்டுகோலாய் இருந்தவர் பற்றி நினைவு கூர்கிறேன.

படித்துக் கொண்டிருந்த எனக்கு பணியில் சேர அழைப்பு.  இதற்கு நான் குறிப்பிட்ட ஒரு  மாஜிஸ்ட்ரேட்டிடம் certificate வாங்கி அனுப்பச் சொல்லியிருந்தது.  எனக்கு கூட வர பொறுப்பான பெரியவர் யாரும் வரும் நிலையில் இல்லை.  நானும் என் தோழியும் Court campusக்குச் சென்றோம்.  ஒரு வக்கீல் குமாஸ்தா உதவ முன்வந்தார்.  எனது certificateல் கையெழுத்து வாங்க அந்த குமாஸ்தா எங்களை வெளியே நிற்க வைத்து விட்டு  ஒரு ஒரு இடமாக போய் வெளியே வந்து உதட்டைப் பிதுக்கியது தான் நடந்தது.   அவருடன் அந்த கோர்ட் முழுக்க அலைந்தது தான் மிச்சம்.  2,3 மணி நேரமானது.  களைத்துப் போனோம்.என்ன செய்வது எனப் புரியவில்லை.  அப்போது வக்கீல் உடையணிந்த ஒருவர் வந்து என்னிடம் என்ன விஷயம் என ஆங்கிலத்தில் கேட்டார்.  நானும் விடையளித்து என்னிடம் இருந்த formsஐக் காட்டினேன்.  அவர் எங்களை உடன் வரப் பணித்து ஒரு மாஜிஸ்ட்ரேட்டின் chamberக்குக் கூட்டிச் சென்றார்.  மாஜிஸ்ட்ரேட்டிடம் எனக்கு வந்த கடிதத்தைக் காட்டி, எங்கள் சிரமத்தை விளக்கினார்.  கொஞ்ச நேரம் அவருடன் உரையாடி விட்டு, என்னிடம் வக்கீல் சொன்னார் 'இந்த ஃபார்ம்-ல் குறிப்பிட்டுள்ள பதவி இப்போது கிடையாது. இந்த மாஜிஸ்ட்ரேட் அதற்கு equal rank தான். இவர் உனக்கு உதவுவார்' என்று.  அந்த மாஜிஸ்ட்ரேட்டிடம் கையெழுத்து வாங்கினேன்.  நன்றி கூறி வெளியே வந்தோம்.

வக்கீல் என்னைத் தனியே அழைத்து, 'என் பெயர் சொல்லி யாரும் பணம் கேட்டால் கொடுக்காதே.  அந்த் குமாஸ்தா உன்னுடன் காலை முதல் அலைந்ததாகச் சொல்கிறாய்.  அவருக்கு மட்டும் 20  ரூபாய் கொடு.  அவரே எனக்குத் தர வேண்டும் எனச் சொல்லிக் கேட்டாலும் தராதே' என்று சொன்னார்.  எனக்கு இருந்த களைப்பில் அந்த மனித தெய்வத்தின் பெயரைக் கூடக் கேட்கத் தோன்றவில்லை.  நன்றி மட்டும் சொன்னதாக நினைவு.

ஆனால், இந்த சம்பவத்தை மட்டும் நான் மறக்கவில்லை.  என்னைப் போல பலருக்கும் வழிகாட்டியாக விளங்க அந்த வக்கீல் பல்லாண்டு வாழ   என்றென்றும்  என் ப்ரார்த்தனை உண்டு.

Monday, October 18, 2010

சவால் -short story competition - பரிசல்காரன்- 'சவாலே சமாளி'

எனக்குப் பிடிக்காத வேலையை வேறு வழியில்லாமல் மும்பைக்குச் சென்றிருந்த எனது மனைவியின் உத்தரவின் பேரில் செய்து கொண்டிருக்கிறேன். நான் கவனித்த போது டாக்டர் அந்தப் பெண்ணிடம், "காமினி, உங்கள் நலத்திற்குத் தான் சொல்கிறேன், கொஞ்சம் பொறுமையாக ட்ரீட்மென்ட் முடியும்வரை ஒத்துழையுங்கள்" என்று சொல்லிவிட்டு, ஏதேதோ உபகரணங்களை சரிபார்த்தார். டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
இது என்ன, பயங்கரமாக இருக்கே, என் வேலை இத்தருணத்தில் என்ன என்று கேட்பதற்காக நான் அந்த இடத்தில் இருந்து எனது மனைவிக்கு கைபேசியில் அழைத்தேன். தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதை ஒரு பெண்மணி சொன்னார். சரி, காமினிக்கு என்ன நடக்கிறது என்று பாப்போம் என நானே முடிவு செய்து செயல்படுத்தினேன்.
காமினியை வழியில் ஒரு ஆள் தடுத்து நிறுத்தினான். "சிவா, புரியாமல் தடுக்காதே, நமது பிரச்சனையை பின்னாடி தீர்த்துக்கலாம், உன் பாஸ் பற்றி முழுக்கத் தெரியாமல் எந்த தப்பு முடிவுக்கும் வராதே" என்றால் காமினி. “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
திடீர் என்று எனது கைபேசியில் அழைப்பு. அங்கிருந்து சற்றே தள்ளிச் சென்று பேசினால், எனது மனைவி! "என்னங்க, சொன்னது ஞாபகம் இருக்கா? என்ன செய்துகிட்டு இருக்கீங்க?" என்று கேட்டாள். "நீ சொன்ன சீரியலைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன், விளம்பர இடைவேளையிலேயே போன் செய்தேன், நீ தான் கிடைக்கவில்லை" என்றேன். "சரி, சரி, பூராத்தையும் பார்த்து பிறகு சொல்லுங்கள்" என்று சொல்லி கைபேசியை அணைத்தாள் என் தர்ம பத்தினி. அங்கு தொலைக்காட்சிப் பெட்டியில்,
“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன் என்று பெயர் அட்டை தாங்கிய நபர். "நீ நம் 'ரா' அமைப்புக்குத் தகுந்த ஆள் தான்" என்று அவர் சொன்னதோடு அன்றைய எபிசோடு முடிந்தது. நடுவில் நான் பார்க்காத பகுதியை நான் எப்படி இட்டு நிரப்பப் போகிறேன் என் மனைவியிடம்?