மாதங்களில் மார்கழியான இறைவன்... விடியற்காலையிலேயே எழுப்பும் பாடல்கள்... சுப்ரபாதத்திற்கு பதிலாக திருப்பாவை கேட்கும் ஆந்திரக் கோயில்கள்...
தையிலே தைப்பூசம் - நடந்தே செல்லும் பக்தர்கள் கூட்டம். மாசி, பங்குனி என்று உற்சவங்களும், வெயிலில் வெறுங்காலுடனே கலசம் ஏந்திச் செல்லும் அன்பர்கள்..... பங்குனி, சித்திரைகளில் தேர்த்திருவிழாக்களும் மற்றைய இறை கல்யாண வைபோகங்களும்.... வருஷா வருஷம் நடக்கும் நிகழ்ச்சியானாலும் குவியும் மக்கள் கூட்டம்!
எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக பக்தி!!
என்னைப் பொறுத்தவரை இறைசக்தி உண்டென்று நம்புகிறேன். அந்த சக்தியை எந்த வடிவில் வேண்டுமானாலும் கும்பிடலாம். இறைவன்/இறைவி இந்த வடிவில் கும்பிட வேண்டும் என்பது அவரவர் விருப்பமே. என் ஆங்கிலோ-இந்தியத் தோழி வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போகும் தோழியரைப் பார்த்து, "என்ன, சர்ச்சுக்கா?" என்று கேட்பார்; அவரைப் பொறுத்த வரை இறைவன் குடியிருக்கும் இடத்துக்கு சர்ச் என்று பெயர்!!
இறைசக்தியைக் குறித்த இந்த எண்ணங்கள் என் சிறு வயது முதலே தொடங்கி விட்டன. என் அண்ணா முறையாகும் கிருஷ்ணன் என்பவருடன் சின்ன வயதில் - பள்ளிப் பருவத்தில் - நடந்த சொற்போர் நினைவுக்கு வருகிறது. என் மேற்கண்ட அபிப்ராயத்தைச் சொன்னவுடன் அவர் அது எப்படி சாத்தியமாகும் என்று என்னைக் கேட்டார். நான், "நீங்கள் எனக்கு அண்ணன். உங்கள் மனைவிக்கு கணவர்; உங்கள் குழந்தைகளுக்கு தந்தை; மற்றும் உங்கள் சொந்தக்காரர்களுக்கு பெரியப்பா, சித்தப்பா, மாமா,... இப்படி! உங்கள் அலுவலகத்தோருக்கு மேலதிகாரி, ஊழியர்... ஆனால், நீங்கள் இத்தனை உருவங்களா, இல்லை, கிருஷ்ணன் என்ற பெயர் கொண்ட ஒரே நபர். அப்படித் தான் கடவுளை எப்படி வணங்கினாலும் பரம்பொருள் ஒன்றே" என்று சொன்னேன்!
மேலே சொன்னதை வைத்து பக்தி சிரோன்மணியாக என்னை எண்ணிக் கொள்ளாதீர்கள்! பக்தி எந்த அளவிற்குப் போகிறது என்று அண்ணாந்து வியந்து எழுதும் பதிவே இது.
பட்டினத்தாரின் இந்தப் பாடலைப் பாருங்கள்:
வாளால் மகவரிந் தூட்டவல் லேன்அல்லன்; மாது சொன்ன
சூளால் இளமை துறக்கவல் லேன்அல்லன்; தொண்டுசெய்த
நாளாறில் கண் இடந்து அப்பவல் லேன்அல்லன்; நான்இனிச்சென்று
ஆளாவ தெப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே?
"சிவனடியார் கேட்டதற்காக, மகனையே வாளால் வெட்டிக் கொன்று பிள்ளைக்கறி அளித்த சிறுத்தொண்டர்; மனைவி சொன்ன சொல்லால், இளமையைத் துறந்து சத்தியம் செய்த திருநீலகண்டர்; ஆறே நாள் பழக்கத்தில் கண்ணையே பறித்து சிவனுக்கு வைத்த கண்ணப்ப நாயனார் - இவர்களின் செயல்களை என்னால் செய்ய இயலாது - நான்இனிச்சென்று
ஆளாவ தெப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே?" பட்டினத்தாரே இப்படி வியந்தால், சாதாரண மனிதர் எம்மாத்திரம்?
இவ்வளவு பின்னால் செல்வானேன்? ஸ்ரீரங்கத்து கோயிலுக்குப் போன அனுபவம் நம்மில் அநேகருக்கு உண்டு. வானளாவ உயர்ந்து நிற்கும் தெற்கு ராஜகோபுரம் பற்றி பெருமையும் உண்டு. கோயிலின் கிழக்கு வாயிலில் வெள்ளைக் கோபுரம் என்று ஒரு கோபுரம் இருக்கிறது. பக்கத்து மண்டபத்து குதிரைச் சிற்பங்களும் மிகவும் பிரசித்தம். மற்ற கோபுரங்கள் வண்ண மயமாய் காணப்பட்டாலும் இந்தக் கோபுரம் எப்போதும் வெண்ணிறம் தான். ஸ்ரீவேணுகோபாலனின் 'திருவரங்கன் உலா' படித்திருப்போருக்கு காரணம் தெரிந்திருக்கும். 16, 17ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் - குறிப்பாக கோயில்களின் அளப்பரிய செல்வங்களைக் குறி வைத்து நடந்த ஒரு தாக்குதலின் போது, அரங்கனை படையெடுப்பிலிருந்து தப்புவிக்க எண்ணிய ஒரு ஆடல்மங்கை, ஆங்கிலேய தளபதியை மயக்கி, அவனை கோபுரத்திற்கு மேல் கூட்டிப் போய், அவனை அங்கிருந்து தள்ளிக் கொன்று, தானும் கோபுரத்தின் உச்சியிலிருந்து விழுந்து மடிந்தாள். அந்த பக்தை வெள்ளையம்மாளின் பெயராலேயே அந்த வெள்ளைக் கோபுரம் பக்தியின் அருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது!!

இறைசக்தியே! என்னால் இவ்வளவு தூரம் பக்தி செலுத்த இயலுமா என்று தெரியவில்லை. தாயுமானவ சுவாமிகளின் 'நெஞ்சமே கோயில்; நினைவே சுகந்தம்; அன்பே மஞ்சன நீர்! பூசை கொள்ள வாராய் பராபரமே!' - இதுவே தாரக மந்திரமாகி விட்டது.
ஆனாலும், பக்தர்களை ஒரு வியப்புடனும் மரியாதையுடனும் பார்க்கிறேன். அவர்களின் பக்திக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!








