Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Saturday, September 24, 2011

பழையன புகுதலும்...?

சந்திரலேகா - பட விமர்சனம்

இந்தப் படத்தை இப்போது தான் ரசித்துப் பார்த்து விமர்சனம் எழுத முடிகிறது!  அந்த மதியப் பொழுதில், வ்யிற்றுக்கு தயிர் சாதமும் வத்தக் குழம்பும் ஈந்து கொண்டு, கண்ணுக்கும் செவிக்கும் உணவுக்காக, தொலைக்காட்சியைப் பார்த்தேன்.  எப்போதோ, இரவு நேரத்தில் தூக்கக் கலக்கத்துடன் பார்த்த, 'சந்திரலேகா!'.  ஏற்கெனவே, என் பள்ளி நாட்களில், உணவு இடைவேளையில் வீட்டுக்கு சாப்பிட நானும் என் தங்கையும் வரும் பொழுதுகளில், கச்சட்டியில் பிசைந்த தயிர் சாதம், குழம்புடன், கையில் அம்மா உணவு உருட்டிப் போட்ட பழைய மலரும் நினைவுகளில் இருந்தேனா, இந்த கறுப்பு- வெள்ளைத் திரைப்படத்தை ஆர்வமுடன் பார்க்கலானேன்! (அன்று பழைய பட எதிர்ப்பாளர்கள் கல்லூரி/பள்ளிக்குச் சென்று விட்டனர்!)  கறுப்பு- வெள்ளைப் படங்களைப் பொறுத்த வரை, இந்த இரு நிறங்களைத் தவிர, வெவ்வேறு ஷேடில் அமைந்த சாம்பல் வர்ணங்கள் தாம் இருக்கும்  நிறங்கள் - இந்திந்த நிறங்கள் இப்படித் திரையில் தெரியும் என்று அதற்கும் திட்டமிட்டே அந்தக் காலத்தில் படம் எடுத்திருக்கின்றனர் என்ற ஆச்சரியமும் எப்போதும் எனக்கு உண்டு!  கூடவே, படமெடுக்கும் நேரத்தில் நடித்தவர்களை நேரில் பார்த்திருந்தால் என்னென்ன வண்ண ஆடைகளில் தோற்றமளித்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்த்து சிரித்ததுமுண்டு!

சந்திரலேகா - 1948-ல், எனக்கு ஓரிரு மூன்று தலைமுறைக்கு(!) முன்னே வந்த படம்.  ஆனாலும், தொழில் நுட்பத்தில், வசனத்தில், நடிப்பில் என்று எல்லாத் தரப்பையுமே ரசிக்க முடிந்தது.  கதை என்று பார்த்தால், சந்திரலேகா(டி.ஆர்.ராஜகுமாரி)வை, அந்த நாட்டின் இளவரசன் வீரசிம்மனும்(எம்.கே.ராதா), அவன் தம்பி சசாங்கனும்(ரஞ்சன்) விரும்புகின்றனர்.  சந்திரலேகாவின் அன்போ, மூத்தவருக்குத் தான், அவன் தான் இளவரசர் என்று தெரியாமலே!  சசாங்கன், தன் பெற்றோரைச் சிறையில் தள்ளி, அண்ணனைக் குகையில் போட்டு அடைத்து, அரசைக் கைப்பற்றுகிறான்.  சந்திரலேகாவையும் சிறைப்பிடிக்க, அவள் சாமர்த்தியமாக தப்பி ஓடி விடுகிறாள்.  அப்படி ஒளியும் போது, வீரசிம்மனை (அவளுக்கு பாபா) அடைத்து வைப்பதைப் பார்த்து விடுகிறாள்.  அந்த வழியில் போன ஒரு சர்க்கஸ் குழுவின் துணையோடு, அவனை விடுவித்து, அந்த சர்க்கஸ் குழுவினரோடு செல்கிறாள். 

சர்க்கஸ் சாகசங்களை மிக அருமையாகப் படம் பிடித்துள்ளனர்.  சர்க்கஸ் குழுவில் என்.எஸ். கிருஷ்ணனும் இருக்கிறார்; டி.ஏ.மதுரமும் இருக்கிறார் - பின் நகைச்சுவைக்குக் கேட்பானேன்!  கணக்கு உதைத்த போது, கணக்கர், யானைக்கு அல்வா வாங்கிப் போட்டதாகவும் புலிக்கு புல் வாங்கியதாகவும் எழுதச் சொல்லி, இன்றைய கணக்காளர்களுக்கு பாடம் எடுக்கிறார்!! ஆனால், அப்படி கணக்கு எழுதக் கூடாது என்று அவருக்கே மதுரம் அம்மாள் பாடம் எடுத்து விட்டார்!

கதை இன்னும் காடு, மலை தாண்டி, சந்திரலேகாவும் வீர்சிம்மனும் வில்லன்களுக்குத் தப்பும் போது, வேற்று மொழிப் பெண்கள் கூட்டத்தில் சேர்கின்றனர்.  அவர்கள் வேறு பாஷை பேசினாலும், அதற்கு மொழிபெயர்ப்போ, ஸப்-டைடிலோ வைக்காமல், சைகையிலேயும் பேச்சிலேயுமே புரிந்து கொள்ள வைத்திருக்கிறார்கள்! சபாஷ்!  சந்திரலேகா, வில்லன் பிடியில் மாட்டுகிறாள் - வீரசிம்மன் படைகளைத் தயார் செய்கிறான் - தம்பியை வென்று, பெற்றோரையும் சந்திரலேகாவையும் விடுவிக்க!

நான் ரசித்த இன்னொரு கதாபாத்திரத்தைச் சொல்ல வேண்டுமே -  அவர் சுந்தரிபாய் - ஆம், நாம் பிற்காலப் படங்களில் வில்லி சின்னம்மாவாகவோ, மாமியாராகவோ பார்த்தவர் தாம் - 'மழலைப்பட்டாளம்' என்ற படததிலும் வீட்டு ஓனர் மாமியாக வருவார் - இந்தப் படததில் சர்க்கஸ் பெண்ணாக வருகிறார்.  கதாநாயகியை, அரண்மனைச் சிறையில் பார்த்து, சசாங்கனைப் பிடித்ததாக நடித்து, தப்பிக்க வழியும் சொல்லிக் கொடுக்கும் கதாபாத்திரம்.  அருமையான நடிப்பு!  அந்தப் புகழ் பெற்ற முரசு நடனத்தை நடத்த வேண்டும் என்று சந்திரலேகா சசாங்கனைக் கேடக, பிரம்மாண்ட முரசு நடனம்!  முரசுகளிலிருந்து (Helen of Troy?) வீரர்கள் வந்து, சண்டை நடந்து, இறுதியில் சசாங்கன் வெல்லப்படுகிறான்!

அந்த முரசு நடனம் அனைவராலும் மறக்க முடியாதது - (அந்தத் தருணத்தில் பள்ளியிலிருந்த வந்த என் இளைய மகனை - இது தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான காட்சி பார் என்றவுடன் அவனும் ஆவலுடன் பார்த்தான்!)


ஆனால், இதை விட, சர்க்கஸில் 'நாட்டியக் குதிரை' பாட்டும் நடனமும் எனக்குப் பிடித்தது.  எவ்வளவு அழகான நடனம், பாட்டில் கிண்டல் எல்லாம் அமைந்திருக்கிறது பாருங்கள்! 'குதிரை'யின் கண்ணடிப்பைப் பார்க்க விட்டுவிடாதீர்கள்!



இந்தப் படத்தை எடுக்க 5 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன - சுதந்தரம் பெறுமுன்னே ஆரம்பித்து, பெற்ற பின்னர் வெளிவந்துள்ளது!  ஜெமினி ஃபிலிம்ஸில் திரு எஸ்.எஸ்.வாசன் முதல்முதலாகத் தயாரித்துள்ளார்.  பல சாதனைகளைப் படைத்துள்ள இந்தப் படத்தில் இடம்பெறும் சர்க்கஸ், தயாரித்த 'ஜெமினி' பெயராலேயே அழைக்கப்பட்டது என்றால் பாருங்கள்! ஹெலிகாப்டரிலிருந்து படத்தின் விளம்பர நோட்டீஸ்கள் பறக்கவிடப்பட்டதாம் - படத்தின் வசூலோ, அந்தக் காலத்திலேயே 2 கோடி  ரூபாய்கள்! ட்ரம் டான்ஸ் எடுக்க மூன்று மாதங்கள் ஆனதாம் - பின்னே இவ்வளவு தூரம் சொல்லிவிட்டு அந்த முரசு ஆட்டத்தைப் பார்க்காமல் இருக்க முடியுமா?

Saturday, June 25, 2011

மாவீரன் - திரைப்பட விமர்சனம்



          
          ஒரு சரித்திர காலத் திரைப்படத்தை வெகு நாட்களுக்குப் பிறகு பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷத்துடன் படம் பார்க்கத் தயாரானேன். தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த படம் (தெலுங்கில் - மகதீரா); சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா நடித்த படம் என்ற கூடுதல் காரணங்களும் ஆர்வத்துக்கு காரணம்.

          ஆனாலும் கதை இவ்வளவு காமெடியாக இருக்கும் என நினைக்கவில்லை. காதில் முழம் முழமாகப் பூவைச் சுற்றப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தே படத்தைப் பார்க்கப் போனாலும், பூமாலைகள் நிறையக் கிடைத்தன!

         400 ஆண்டுகளுக்கு முன் ஒரு குறுநில மன்னனின் மகளுக்கும் வீரர் படைத்தலைவனான ராஜ பார்த்திபனுக்கும் இடையே நிறைவேறாத காதல், இக்காலத்தில் என்ன ஆகிறது, நிறைவேறியதா இல்லையா என்ற கதை. முற்காலத்தில் வந்த வில்லன் சேனாதிபதி, இக்காலத்தில் அரச வம்ச வாரிசாக வருகிறான்!! ஹீரோ, ஹீரோயின் கைவிரல்களை யதேச்சையாகத் தொட, அவனுக்கு முற்பிறப்பு ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது. ஆனால் ஹீரோயினுக்கு கிளைமாக்ஸில் தான் முற்பிறப்பு ஞாபகம் வருகிறது!!! வில்லனுக்கு இடைவேளை சமயத்தில்!!! ஆனாலும், வில்லன் ஹீரோயினை மணம் முடிக்க எல்லா வில்லத்தனமும் வழக்கம் போலச் செய்கிறான் - ஹீரோயினை நெருங்கும் போது, (பழைய) காதலனின் ஆவி வந்து தடுப்பதாக உணர்கிறான் - அதான் அந்த காதலன் மறுபிறப்பு எடுத்துவிட்டானே, இது என்ன ஆவின்னு யாரையாவது கேட்கலாம்னு பார்த்தேன். அப்புறம் எல்லாரையும் போல நானும் மூளையைக் கழற்றி வைத்து விட்டேன்!

           முற்பிறப்புக் கதையின் ஷேர்கான் பாத்திரம் நல்ல படைப்பு. இப்பிறப்பில் அவன் ஒரு மீனவனாகப் பிறந்து அனுமாரின் வேலையைக் காமெடியுடன் செய்கிறான்.

           சண்டைக்காட்சிகள் நடக்கும் இடம் அழகாகவும் கவனத்தை ஈர்ப்பதாகவும் இருக்கிறது. பெரிய காலபைரவர் சிலை. மலைகள் மேல்பரப்பு சமதளமாக உள்ளது - இரண்டு மலைகளையும் இணைப்பது ஒரு பாதை. முற்பிறப்பு வீரன், தன்னந்தனியாளாக 100 பேரை வீழ்த்த சவாலை ஏற்கிறான். முக்காலேமூணுவாசி பேரை வீழ்த்திய பின், சோர்வுற்ற தருணத்தில் இரண்டு வீரர்கள் பாய்ந்து வருகின்றனர். உடனே நம் ஹீரோ, ஒரே ஈட்டியின் மூலம் இருவரையும் குத்திக் கொல்லும் காட்சி இருக்கிறதே... சொல்ல வார்த்தைகளே இல்லை!! என்னையறியாமல் நான் கைதட்டி, 'ஆஹா, விஜயகாந்தால் கூட முடியாத காரியம்' என்று வியந்தேன். பக்கத்தில் இருந்தவர்கள் சிலர் சிரித்தனர், சிலர் முறைத்தனர்!!

          நான் ரசித்த இன்னொரு காட்சி, கிளைமாக்ஸில் இதே மலைத்தொடர் - இக்காலத்தில்.  இடையில் உள்ள மலைப்பாதை சண்டைக்கு நடுவில் துண்டாகி விடுகிறது.  ஹீரோ, ஹீரோயின், வில்லன் மட்டும் ஒரு பக்கம்!.  வில்லன் ஹீரோவை அடித்துப் போட்டுவிட்டு ஹீரோயினை தனக்கு துணைக்கு வந்த ஒரு ஹெலிகாப்டர் மூலம் கடத்தப் பார்க்கிறான். அப்போது நம் மீனவ நண்பன் தான் வந்த காரைப் பறக்க விட்டு, ஹெலிகாப்டரின் மேல் மோதி, வில்லனை வீழ்த்தி, ஹீரோ-ஹீரோயினைக் காப்பாற்றுகிறான். என்ன ஒரு டெக்னிக்!! என் வியப்பு இன்னும் அடங்கவேயில்லை!

          ஹீரோயினைப் பற்றிச் சொல்லவில்லையே என்பவர்களுக்காக - காஜல் அகர்வால் அழகான மெழுகு பொம்மையாக வந்து போகிறார். எப்போது தான் ஹீரோயின்கள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவார்களோ?!!

          கடைசியாக, இந்தப் படத்தைப் பற்றி இவ்வளவு விரிவாக எழுதியதன் காரணம், உலகத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக ஒளிபரப்பபடும்போது இத்திரைப்படத்தைக் காணத் தவறி விடாதீர்கள் என்று சொல்லத்தான்!!