Showing posts with label சந்திரலேகா. Show all posts
Showing posts with label சந்திரலேகா. Show all posts

Saturday, September 24, 2011

பழையன புகுதலும்...?

சந்திரலேகா - பட விமர்சனம்

இந்தப் படத்தை இப்போது தான் ரசித்துப் பார்த்து விமர்சனம் எழுத முடிகிறது!  அந்த மதியப் பொழுதில், வ்யிற்றுக்கு தயிர் சாதமும் வத்தக் குழம்பும் ஈந்து கொண்டு, கண்ணுக்கும் செவிக்கும் உணவுக்காக, தொலைக்காட்சியைப் பார்த்தேன்.  எப்போதோ, இரவு நேரத்தில் தூக்கக் கலக்கத்துடன் பார்த்த, 'சந்திரலேகா!'.  ஏற்கெனவே, என் பள்ளி நாட்களில், உணவு இடைவேளையில் வீட்டுக்கு சாப்பிட நானும் என் தங்கையும் வரும் பொழுதுகளில், கச்சட்டியில் பிசைந்த தயிர் சாதம், குழம்புடன், கையில் அம்மா உணவு உருட்டிப் போட்ட பழைய மலரும் நினைவுகளில் இருந்தேனா, இந்த கறுப்பு- வெள்ளைத் திரைப்படத்தை ஆர்வமுடன் பார்க்கலானேன்! (அன்று பழைய பட எதிர்ப்பாளர்கள் கல்லூரி/பள்ளிக்குச் சென்று விட்டனர்!)  கறுப்பு- வெள்ளைப் படங்களைப் பொறுத்த வரை, இந்த இரு நிறங்களைத் தவிர, வெவ்வேறு ஷேடில் அமைந்த சாம்பல் வர்ணங்கள் தாம் இருக்கும்  நிறங்கள் - இந்திந்த நிறங்கள் இப்படித் திரையில் தெரியும் என்று அதற்கும் திட்டமிட்டே அந்தக் காலத்தில் படம் எடுத்திருக்கின்றனர் என்ற ஆச்சரியமும் எப்போதும் எனக்கு உண்டு!  கூடவே, படமெடுக்கும் நேரத்தில் நடித்தவர்களை நேரில் பார்த்திருந்தால் என்னென்ன வண்ண ஆடைகளில் தோற்றமளித்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்த்து சிரித்ததுமுண்டு!

சந்திரலேகா - 1948-ல், எனக்கு ஓரிரு மூன்று தலைமுறைக்கு(!) முன்னே வந்த படம்.  ஆனாலும், தொழில் நுட்பத்தில், வசனத்தில், நடிப்பில் என்று எல்லாத் தரப்பையுமே ரசிக்க முடிந்தது.  கதை என்று பார்த்தால், சந்திரலேகா(டி.ஆர்.ராஜகுமாரி)வை, அந்த நாட்டின் இளவரசன் வீரசிம்மனும்(எம்.கே.ராதா), அவன் தம்பி சசாங்கனும்(ரஞ்சன்) விரும்புகின்றனர்.  சந்திரலேகாவின் அன்போ, மூத்தவருக்குத் தான், அவன் தான் இளவரசர் என்று தெரியாமலே!  சசாங்கன், தன் பெற்றோரைச் சிறையில் தள்ளி, அண்ணனைக் குகையில் போட்டு அடைத்து, அரசைக் கைப்பற்றுகிறான்.  சந்திரலேகாவையும் சிறைப்பிடிக்க, அவள் சாமர்த்தியமாக தப்பி ஓடி விடுகிறாள்.  அப்படி ஒளியும் போது, வீரசிம்மனை (அவளுக்கு பாபா) அடைத்து வைப்பதைப் பார்த்து விடுகிறாள்.  அந்த வழியில் போன ஒரு சர்க்கஸ் குழுவின் துணையோடு, அவனை விடுவித்து, அந்த சர்க்கஸ் குழுவினரோடு செல்கிறாள். 

சர்க்கஸ் சாகசங்களை மிக அருமையாகப் படம் பிடித்துள்ளனர்.  சர்க்கஸ் குழுவில் என்.எஸ். கிருஷ்ணனும் இருக்கிறார்; டி.ஏ.மதுரமும் இருக்கிறார் - பின் நகைச்சுவைக்குக் கேட்பானேன்!  கணக்கு உதைத்த போது, கணக்கர், யானைக்கு அல்வா வாங்கிப் போட்டதாகவும் புலிக்கு புல் வாங்கியதாகவும் எழுதச் சொல்லி, இன்றைய கணக்காளர்களுக்கு பாடம் எடுக்கிறார்!! ஆனால், அப்படி கணக்கு எழுதக் கூடாது என்று அவருக்கே மதுரம் அம்மாள் பாடம் எடுத்து விட்டார்!

கதை இன்னும் காடு, மலை தாண்டி, சந்திரலேகாவும் வீர்சிம்மனும் வில்லன்களுக்குத் தப்பும் போது, வேற்று மொழிப் பெண்கள் கூட்டத்தில் சேர்கின்றனர்.  அவர்கள் வேறு பாஷை பேசினாலும், அதற்கு மொழிபெயர்ப்போ, ஸப்-டைடிலோ வைக்காமல், சைகையிலேயும் பேச்சிலேயுமே புரிந்து கொள்ள வைத்திருக்கிறார்கள்! சபாஷ்!  சந்திரலேகா, வில்லன் பிடியில் மாட்டுகிறாள் - வீரசிம்மன் படைகளைத் தயார் செய்கிறான் - தம்பியை வென்று, பெற்றோரையும் சந்திரலேகாவையும் விடுவிக்க!

நான் ரசித்த இன்னொரு கதாபாத்திரத்தைச் சொல்ல வேண்டுமே -  அவர் சுந்தரிபாய் - ஆம், நாம் பிற்காலப் படங்களில் வில்லி சின்னம்மாவாகவோ, மாமியாராகவோ பார்த்தவர் தாம் - 'மழலைப்பட்டாளம்' என்ற படததிலும் வீட்டு ஓனர் மாமியாக வருவார் - இந்தப் படததில் சர்க்கஸ் பெண்ணாக வருகிறார்.  கதாநாயகியை, அரண்மனைச் சிறையில் பார்த்து, சசாங்கனைப் பிடித்ததாக நடித்து, தப்பிக்க வழியும் சொல்லிக் கொடுக்கும் கதாபாத்திரம்.  அருமையான நடிப்பு!  அந்தப் புகழ் பெற்ற முரசு நடனத்தை நடத்த வேண்டும் என்று சந்திரலேகா சசாங்கனைக் கேடக, பிரம்மாண்ட முரசு நடனம்!  முரசுகளிலிருந்து (Helen of Troy?) வீரர்கள் வந்து, சண்டை நடந்து, இறுதியில் சசாங்கன் வெல்லப்படுகிறான்!

அந்த முரசு நடனம் அனைவராலும் மறக்க முடியாதது - (அந்தத் தருணத்தில் பள்ளியிலிருந்த வந்த என் இளைய மகனை - இது தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான காட்சி பார் என்றவுடன் அவனும் ஆவலுடன் பார்த்தான்!)


ஆனால், இதை விட, சர்க்கஸில் 'நாட்டியக் குதிரை' பாட்டும் நடனமும் எனக்குப் பிடித்தது.  எவ்வளவு அழகான நடனம், பாட்டில் கிண்டல் எல்லாம் அமைந்திருக்கிறது பாருங்கள்! 'குதிரை'யின் கண்ணடிப்பைப் பார்க்க விட்டுவிடாதீர்கள்!



இந்தப் படத்தை எடுக்க 5 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன - சுதந்தரம் பெறுமுன்னே ஆரம்பித்து, பெற்ற பின்னர் வெளிவந்துள்ளது!  ஜெமினி ஃபிலிம்ஸில் திரு எஸ்.எஸ்.வாசன் முதல்முதலாகத் தயாரித்துள்ளார்.  பல சாதனைகளைப் படைத்துள்ள இந்தப் படத்தில் இடம்பெறும் சர்க்கஸ், தயாரித்த 'ஜெமினி' பெயராலேயே அழைக்கப்பட்டது என்றால் பாருங்கள்! ஹெலிகாப்டரிலிருந்து படத்தின் விளம்பர நோட்டீஸ்கள் பறக்கவிடப்பட்டதாம் - படத்தின் வசூலோ, அந்தக் காலத்திலேயே 2 கோடி  ரூபாய்கள்! ட்ரம் டான்ஸ் எடுக்க மூன்று மாதங்கள் ஆனதாம் - பின்னே இவ்வளவு தூரம் சொல்லிவிட்டு அந்த முரசு ஆட்டத்தைப் பார்க்காமல் இருக்க முடியுமா?