எனக்குப் பிடிக்காத வேலையை வேறு வழியில்லாமல் மும்பைக்குச் சென்றிருந்த எனது மனைவியின் உத்தரவின் பேரில் செய்து கொண்டிருக்கிறேன். நான் கவனித்த போது டாக்டர் அந்தப் பெண்ணிடம், "காமினி, உங்கள் நலத்திற்குத் தான் சொல்கிறேன், கொஞ்சம் பொறுமையாக ட்ரீட்மென்ட் முடியும்வரை ஒத்துழையுங்கள்" என்று சொல்லிவிட்டு, ஏதேதோ உபகரணங்களை சரிபார்த்தார். டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
இது என்ன, பயங்கரமாக இருக்கே, என் வேலை இத்தருணத்தில் என்ன என்று கேட்பதற்காக நான் அந்த இடத்தில் இருந்து எனது மனைவிக்கு கைபேசியில் அழைத்தேன். தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதை ஒரு பெண்மணி சொன்னார். சரி, காமினிக்கு என்ன நடக்கிறது என்று பாப்போம் என நானே முடிவு செய்து செயல்படுத்தினேன்.
காமினியை வழியில் ஒரு ஆள் தடுத்து நிறுத்தினான். "சிவா, புரியாமல் தடுக்காதே, நமது பிரச்சனையை பின்னாடி தீர்த்துக்கலாம், உன் பாஸ் பற்றி முழுக்கத் தெரியாமல் எந்த தப்பு முடிவுக்கும் வராதே" என்றால் காமினி. “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
திடீர் என்று எனது கைபேசியில் அழைப்பு. அங்கிருந்து சற்றே தள்ளிச் சென்று பேசினால், எனது மனைவி! "என்னங்க, சொன்னது ஞாபகம் இருக்கா? என்ன செய்துகிட்டு இருக்கீங்க?" என்று கேட்டாள். "நீ சொன்ன சீரியலைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன், விளம்பர இடைவேளையிலேயே போன் செய்தேன், நீ தான் கிடைக்கவில்லை" என்றேன். "சரி, சரி, பூராத்தையும் பார்த்து பிறகு சொல்லுங்கள்" என்று சொல்லி கைபேசியை அணைத்தாள் என் தர்ம பத்தினி. அங்கு தொலைக்காட்சிப் பெட்டியில்,
“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன் என்று பெயர் அட்டை தாங்கிய நபர். "நீ நம் 'ரா' அமைப்புக்குத் தகுந்த ஆள் தான்" என்று அவர் சொன்னதோடு அன்றைய எபிசோடு முடிந்தது. நடுவில் நான் பார்க்காத பகுதியை நான் எப்படி இட்டு நிரப்பப் போகிறேன் என் மனைவியிடம்?