Showing posts with label தேவையா இது? மொக்கையோ மொக்கை. Show all posts
Showing posts with label தேவையா இது? மொக்கையோ மொக்கை. Show all posts

Sunday, September 11, 2011

கதம்பம்-8


நம்பிக்கை இந்தியர்கள்!

என் நண்பர் சொன்ன சம்பவம் இது.  அவர் டூரிஸ்ட் பேருந்துகளும் வாகனங்களும் நிறைய நிற்கும் இடத்தின் அருகே தான் தினமும் நகரப் பேருந்துக்காகக் காத்திருப்பார்.  அப்போது  'வாடிக்கை'யாக அங்கே நிற்கும் வாகனங்களிடம் 'மாமூல்' வாங்கும் ஒரு போலீஸையும் கவனித்திருக்கிறார். 

அன்று  மஹாராஷ்ட்ரா மாநில பேருந்து ஒன்றில் ஒரு போலீஸ்காரர் மாமூல் கேட்க, உள்ளிருந்து மூன்று, நான்கு பேர் இறங்கி வந்துள்ளனர்.  அவர்கள், 'அண்ணா ஹஸாரே ஜிந்தாபாத்!" என்று முழக்கமிட்டனராம்! பின்னர், ஹிந்தியில், 'ராம் லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராக ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார்.  நாடே அவருக்கு ஆதரவு தருகிறது!  நீ லஞ்சமா கேட்கிறாய்?' என்று எகிற,  லஞ்சம் கேட்டவர் எஸ்கேப்!

ஒரு விழிப்புணர்வோடு கிளம்பி விட்டது இந்தியா!


சகோதர உணர்வு எங்கே?

மேற்கண்ட சம்பவத்தில் சந்தோஷப்பட்ட சில நாளிலேயே, டில்லி ஹைகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்து சக இந்தியரைச் சாகடித்த துயர சம்பவம் வருத்தப்பட வைத்தது.

ராஜீவ் கொலை வழக்கில் அண்மையில் மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஒற்றுமையாக அனைவரும் எதிர்க்க முக்கிய காரணம், அது நியாயமா, இல்லையா என்பதை விட, இருபது வருடங்களாக அவர்கள் சிறையில் வாடி விட்டனர்;  மனித உயிரை மனிதரே பறிக்கக் கூடாது என்பதினால் தானே! 

சம்பந்தமே இல்லாத அப்பாவி மக்களை, அதுவும் நியாயத்திற்காக நீதிமன்றம் வருபவர்களை, அதிகம் மக்கள் நடமாடும் தினமாகப் பார்த்து,  குண்டு வைத்து அவர்தம் உயிரினைப் பறிப்பது எந்த வகையில் நியாயம்?  இப்படிப்பட்ட தீவிரவாதச் செயலகளுக்கு எதிரான விழிப்புணர்வு வருவது எப்போது?  அதற்கும் யாராவது ஒரு முக்கியப் பிரமுகர் உண்ணாவிரதம் இருக்கக் கூடாதா?!

இன்று செப்டம்பர் 11ந் தேதி இந்தப் பதிவு - தீவிரவாதச் செயல்களத் தீர ஒழிக்க வகை செய்வோம்!

லீலைகள் புதிது!
குழந்தைகள் கேள்விகளுக்குப் பதில் சொல்வதே கடினம் தான்.  அதுவும் என் குழந்தைகள், "காக்கா ஏன் கறுப்பா இருக்கு?" என்று கேட்டு,  "அது வெயிலில் அலைவதினால்" என்று பதில் சொன்னால் ஒத்துக் கொள்ளும் ஸ்டேஜைத் தாண்டி விட்டனர்!  இருந்தாலும் வீட்டில் அடிக்கும் கூத்துகளால் தான் மற்ற வருத்தங்களைத் தாண்டி வாழ்க்கை இனிமையாகப் போகிறது.

என் இளைய மகன் சொன்னால் சொன்ன வேலையை மட்டும் சரியாகச் செய்வான்.  ஒரு விஷயத்தைக் கேட்டு வரச் சொன்னால், அதை மட்டும் கேட்டு வருவான்; கூடுதல் விவரங்கள் வராது!அவனை "நீ கம்ப்யூட்டர் மாதிரி!" என்று (வஞ்சப் புகழ்ச்சி அணியில்) சொல்வேன்!  

இந்த வாக்கியத்தையே திருப்பி இன்னொரு நாள் சொன்னவுடன் இதை ஏன் சொல்கிறேன் எனக் கேட்டான்;  'கம்ப்யூட்டர் கொடுத்த கமாண்ட்ஸ் மட்டும் சரியாகச் செய்யும்.  ப்ரொகிராமில் இல்லாத கட்டளைகளைச் செய்யாது.  நீ நான் சொன்ன வேலைகளை மட்டும் செய்கிறாய்!' என்று சொன்னேன்.  'அப்போ தவறு ப்ரொகிராம் செய்தவர் மேல் தான்!' என்று சொல்லிவிட்டான்!

இன்னொரு நாள், நான் காலை நேர அவசரத்தில் வேலைகளைச் செய்து கொண்டே அவனிடம், 'கொஞ்சம் ந்யூஸ்பேப்பரில் ஹெட்லைன்ஸ் படிச்சுச் சொல்லு!' என்று கேட்டேன்.  அவனும் சில தகவல்களை படித்துச் சொன்னான்.  எட்டிப் பார்த்த போது நாளிதழின் மேல் பக்கம் உள்ளவற்றை மட்டும் சொல்லியிருந்தான் - 'ஏன் கீழே உள்ளதைச் சொல்லவில்லை?' என்று கேட்டதற்கு, 'ஹெட்டர்(Header) பக்கம் இருப்பவற்றைச் சொல்லிட்டேன்; நீ ஃபுட்லைன்ஸ் படிக்கச் சொல்லி எங்கிட்ட கேட்கலை, அதனால் நான் ஃபுட்டர்(footer) பக்கம் போகலை!  நான் தான் கம்ப்யூட்டராச்சே!' என்றான்!! நான் என்ன சொல்ல?!!


Tuesday, June 7, 2011

மொக்கை...

நிறைய பதிவுகளில் 'மொக்கை' என்று tag போடுவது என் வழக்கம்.  (சில சமயம் தலைப்பிலும் போடுவேன்!!) இதை எட்டிப் பார்த்துவிட்டு என் இளைய மகனும் 'அம்மா உண்மைய இங்காவது ஒத்துக்கறார்'ன்னு சந்தோஷப்படுவான்!! இந்த 'மொக்கை'ங்கற வார்த்தையோட அர்த்தம் என்னன்னு ஆராய்ச்சி பண்ணலாம்னு இறங்கினேன்.  சாதாரணமாக அறுவை என்ற பொருளில் நான் இந்த சொல்லை உபயோகிப்பேன்! இவ்வார்த்தை எப்படி வந்தது என்று வேரைப்(root) பார்க்கலாம் என யோசித்தேன்.

எதைத் தேடுவதானாலும் முதலில் கூகிளாண்டவர் தான்!

கூகிளாண்டவர் சொல்படி 'மொக்கை என்றால் என்ன' என்கிற ஆராய்ச்சி கி.பி.2007 லேயே பதிவுலகில் ஆரம்பித்திருக்கிறது! இதை வைத்து 'கிறளெ'ல்லாம் எழுதியிருக்கிறார்கள்!


ஒரு online tamil dictionaryயில் மொக்கை என்ற வார்த்தைக்கு அர்த்தம் பார்த்த போது, "மன்னிக்கவும். நீங்கள் தேடிய சொல் இல்லை. உங்கள் கோரிக்கை பதிவு செய்யப்பட்டது. விரைவில் இந்த வார்த்தைக்கான பொருள் பட்டியலில் சேர்க்கப்படும்" என்று சொல்லப்பட்டது. சரி, நம்மாலான தமிழ்த்தொண்டு என்று அடுத்த தேடலுக்குத் தாவினேன்!

மற்றொரு அகராதியில் 'மொக்கை' என்பதற்கு "ignominy, shame, disgrace, வெட்கம். 2.bulkiness, பருமை; 3. a notch in a knife; 4. bluntness of an iron style " இவ்வாறு பொருள் தந்திருந்தனர்.

வேறொரு தமிழ் அகராதியில் இந்த வார்த்தைக்கு, "கூரின்மை; பருமை; மரத்துண்டு; அவமானம்; தாழ்வு; மதிப்பு; முகம்" என்று அர்த்தம் போடப்பட்டிருந்தது!!

படித்த எனக்கு அவமானமாக இருந்தது!!  பதிவுலகில் நாம் பயன்படுத்தும் வார்த்தைக்கு இந்த அர்த்தம் வராதே! அறுவை, அர்த்தம் இல்லாத பதிவு போன்று தானே வரும்!??  எப்படித் தான் இந்த அர்த்தம் வந்திருக்கும்? சரி, மேலும் தமிழ்த்தொண்டுக்குத் தயாரானேன்!!
பெரிய மகனுடன் தமிழ் இலக்கணத்தைப் படித்தது நினைவுக்கு வந்தது; ஆகா, வார்த்தையைப் பிரித்துப் பொருள் பார்க்கலாமே!

மொக்கை = மொ+க்+கை!

இதில் ஈற்றுப் பகுதியில் இருக்கும் கை என்றால் கை! நடுவில் ஒற்று இரட்டித்துள்ளது! மொ என்றால்...??

மொ = ம்+ஒ; ம் என்றால் ஆம் என்பதன் மரூஉ. ஒப்புதல் எனக் கொள்ளலாம்! அப்போ, மொக்கை என்றால், கை இருக்குன்னு ஒத்துக் கொள்வதா??!! அப்படியென்றால், புழக்கத்தில் இருக்கும் அர்த்தத்தை வைத்துப் பார்த்தால், கை இருந்தாலே அறுத்துத் தள்ளலாம்!!!!

ஆமாமாம், கையை வைத்துத் தானே இதையெல்லாம் தட்டச்சினேன்!!

எப்படியோ, மொக்கைக்கு என்ன அர்த்தம் எத்தனை அகராதிகளில் சொன்னாலும் இப்போது ஒரே அர்த்தமாகிவிட்டது!  நாற்றம் என்ற நல்ல வாசனையான சொல் இப்போது துர்நாற்றத்தை மட்டும் குறிப்பது போல!!

 ஆக மொத்தத்தில், அர்த்தமே இல்லாமல் எழுதினால் அதன் பெயர் மொக்கையாம்!  ஐயையோ! நான் இங்கே அகராதியில் இருந்தெல்லாம் வேற அர்த்தம் போட்டுட்டேனே? அப்போ இது மொக்கை இல்லையா?!! :-((


டிஸ்கி: இந்தப் பதிவை எழுத உதவிய பல பதிவுலக துரோணர்களுக்கு இந்த ஏகலைவளின் நன்றிகள்.  இதற்காக என் கட்டைவிரலை எல்லாம் கேட்காதீர்கள்!.  அப்புறம்ஸ்பேஸ்பாரைத்தட்டமுடியாமல்இப்படிஎழுதவேண்டியிருக்கும்!!!!

Thursday, May 26, 2011

சொந்த சரக்கில்லை!!...

சுட்ட குறுந்தகவல்களிலிருந்து:
[ஜாக்கிரதை! -ஊதிவிட்டுப் படிக்கவும்!! :-)]

மனைவி ஊருக்குச் சென்றிருந்தார்.  கணவர் தன் மனைவி மேல் இருக்கும் கோபத்தை சுதந்தரமாகக் காட்ட நினைத்து, மனைவியின் படத்தை வைத்து, தூரத்திலிருந்து அதன் மேல் டார்ட்ஸ்(darts) அடித்துக் கொண்டிருந்தார்.  எதுவும் சரியாகப் படத்தின் மேல் படவில்லை.  அப்போது மனைவியிடமிருந்து கைப்பேசி அழைப்பு - " என்ன செய்ஞ்சுட்டிருக்கீங்க?" என்று மனைவி கேட்க, 'உன்னை மிஸ் செய்ஞ்சுட்டிருக்கேன்" என்று கணவர் 'உண்மையாக' பதிலளித்தார்!!.

(பெண்ணீயவாதிகளுக்காக ஒரு அடிஷன்: மனைவி அந்தப் பக்கம், 'நான் உங்கள் ஃபோட்டாவை பக்கத்தில்தான் வைத்துக் கொண்டிருக்கிறேன் - உங்களை மிஸ் பண்ணலை!' என்றாள்!!)
***********************************************************************************
அமெரிக்காவில் ஒரு தந்தை தன் மகனிடம் அவன் திருமணம் செய்து கொள்ள, தான் ஒரு பெண்ணைப் பார்த்திருப்பதாகக் கூறுகிறார்.  மகன் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள முடியாதென்றான்.  பெண்ணின் தந்தை பில் கேட்ஸ் என்று தந்தை சொல்லவும், மகன் ஒத்துக் கொண்டான்! 

பின்னர், தந்தை பில் கேட்ஸிடம் போய் அவர் மகளைத் தன் மகனுக்கு மணம் முடிக்கக் கேட்க, பில் கேட்ஸ் மறுத்தார்! 'மாப்பிள்ளை வேர்ல்ட் பாங்கின் CEO வாக இருந்தாற்கூடவா மறுப்பீர்கள்?' என இந்த வியாபாரத் தந்தை கேட்க, பில் கேட்ஸ் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்!

இந்தத் தந்தை அடுத்துச் சென்றது வேர்ல்ட் பாங்கின் தலைவரிடம்.  அவரிடம் தன் மகனுக்கு CEO வேலை கேட்டார் - தலைவர் மறுக்க, 'பில் கேட்ஸின் மாப்பிள்ளைக்கு இந்த வேலையைத் தர மாட்டீர்களா?' என்று தந்தை கேட்டார்! பிறகென்ன, வேலையும் கிடைத்தது!

இதற்குப் பெயர் தான் பிஸினஸாம்!
####################################################################
காதலி தன் காதலனிடம், 'என் பிறந்த நாளுக்கு என்ன பரிசு வாங்கியிருக்கிறீர்கள்?' எனக் கேட்டாள்; காதலன், 'அதோ, அங்கு செக்கச் செவேல்னு ஒரு BMW கார் நிற்குதில்லையா,..' என்று ஆரம்பித்தவுடன், காதலி, 'அடடா, உங்களுக்கு என் மேல் எத்தனை அன்பு!' என்று சொன்னாள்.  கலவரமடைந்த காதலன், 'அந்தக் கலரில் nail polish வாங்கியிருக்கேன்!' என்று கூறி முடித்தான்!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மதிப்பெண்கள் குறைந்த மகனிடம் அப்பா காரணம் கேட்டார்; மகன்- 'ஒரு டீச்சர் எல்லா சப்ஜெக்டையும் நடத்த முடியாத போது, ஒரு ஸ்டூடண்ட்டை மட்டும் எல்லா சப்ஜெக்டையும் படிக்கச் சொல்வது என்ன நியாயம்?' என்று கேட்டான்!!
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஒரு பள்ளியில் அனைவரும் இனி ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என ஆணையிடப்பட்டது.  அவ்வளவாக ஆங்கிலம் தெரியாத ஒரு பி.டி. மாஸ்டர் மாணவர்களிடம் பேசியதிலிருந்து:
1. There is no wind in the football
2. I talk, he talk, why you middle talk?
3. You rotate the ground 4 times
4. You go and understand the tree
5. Bring your parents with your mother and father
6. Why haircut not cut?
7. Stand in a straight circle
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
டிஸ்கி 1: மேலே உள்ள யாவும் கற்பனையே
டிஸ்கி 2: மேலே உள்ளவற்றை ஏற்கெனவே படித்திருந்தால், போனாப் போகுதுன்னு ஒரு ஸ்மைல் பண்ணிட்டு, மன்னிச்சு உட்டுடுங்க!!

Tuesday, March 15, 2011

முதல் சிறுகதை அனுபவம்


     நண்பர் பார்வையாளன் இப்படி ஒரு பதிவைக் கேட்டதால், முதல் சிறுகதை - சவால் சிறுகதைப் போட்டிக்காக 'சவாலே சமாளி'  - எழுதிய அனுபவம் இங்கே.
(மைன்ட் வாய்ஸ்(#) : ரொம்ப தான் சிறுகதை எழுதிக் கிழிச்ச மாதிரி!! ம்க்கும்!)

     எனது முந்தைய இடுகையில் வலைப்பூ தொடங்கி சிறுகதை அனுப்பியதை எல்லாம் சொல்லியிருக்கிறேன் (மைன்ட் வாய்ஸ் - சுய புராணம் தாங்கலை!....). என் நலன் விரும்பி என்னை போட்டிக்குச் சிறுகதை எழுதச் சொல்லிக் கட்டாயப் படுத்தியதாகச் சொன்னேன் - அவர் மேலும் சொன்ன ஒரு வாக்கியம் தான் என்னை எப்பாடு பட்டாவது கதையை போட்டிக்கு அனுப்ப வேண்டும் எனத் தூண்டியது!  அவர் என்னை அப்படி என்ன சொன்னார் தெரியுமா?!!  'நீ எழுதுவாய் என்றுதான் நான் போட்டிக்குச் சிறுகதை அனுப்பவில்லை!! '   (மைன்ட் வாய்ஸ் - இது அவர் தன் மேலே வைத்திருந்த self confidence - இதைப் போய் பாராட்டுன்னு....)

     நான் போட்டிக்கான விதிமுறைகளைப் படித்தேன்.  கொடுக்கப்பட்ட மூன்று வாக்கியங்களை கதையின் போக்கில் வரிசை மாறாமல் கொண்டு வர வேண்டும்.  காமினி என்ற காரக்டரைக் கெட்டவராகக் காண்பிக்கக் கூடாது, வாக்கியங்கள் பயன்படுத்துவது ஃபிளாஷ்பாக்கோ, கனவு சீனாகவோ இருக்கக் கூடாது.  October 15ம் தேதி- இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு போட்டிக்கான டெட்லைன். (மைன்ட் வாய்ஸ் - இதெல்லாம் சக பதிவர்களுக்கே தெரியும்....)  கதை எழுத உட்கார்ந்தது October 15ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு மேலே-    (மைன்ட் வாய்ஸ் - ராகு காலம் ஆரம்பிச்சிடுச்சி....)
     எனக்கோ வலைப்பூ தொடங்கியிருந்தாலும் அதில் எழுதத் தெரியாது;  தமிழில் தனியாகத் தட்டச்சு செய்தும் பழக்கமில்லை.  சரி, மின்னஞ்சலிலேயே முயற்சிப்போம் என்று தொடங்கினேன்.  கதைக்குக் கரு?  சரி, ஃபிளாஷ்பாக்கோ, கனவு சீனாகவோ இருக்கக் கூடாது என்றால் ஏன் இது ஒரு தொலைக்காட்சி ஸீரியலில் வரக் கூடாது என்று மனதிற்குள் ஒரு வில்லச் சிரிப்போடு சாவிப்பலகையில்,  ஸாரி, கீபோர்டில் தட்ட ஆரம்பித்தேன்!. முன்பே சொன்ன மாதிரி 11.16 க்கு அனுப்பி விட்டேன்.  (மைன்ட் வாய்ஸ் - edit எல்லாம் பண்ணத் தெரியலைன்னு நேரடியாகச் சொல்றது தானே...)

      அனுப்பிய கதை போட்டியில் ஏற்கப்பட்டது,  இந்த வாசகங்களோடு - "இவருக்கு வலைப்பூ கிடையாது. இவர் இந்தப் போட்டிக்காகத்தான் முதன்முதலில் எழுதுகிறார்..."  பின்னர் முன்பே சொன்ன மாதிரி கதையை வலைப்பூவில் முதல் (authorised)இடுகையாகத் தட்டுத் தடுமாறி வெளியிட்டேன்.
     கதையைப் படித்திருப்பீர்கள்
(மைன்ட் வாய்ஸ்- என்ன கொடுமை பார்வையாளன் சார் இது.... ).  கதைக்கு நீதிபதியின் விமர்சனம் கீழே:  
78. சவாலே சமாளி – மிடில்கிளாஸ் மாதவி
மனைவிக்காக வீட்டில் சீரியல் பார்க்கும் கணவன். சீரியலில் வருவதாக, போட்டிக்கான வரிகள். மொத்த கதையுமே ஒரு பக்கக் கதையின் அளவில் பாதிதான் என்பதே இதை சீரியஸ் முயற்சியாக நினைக்க வைக்கவில்லை.

 தீர்ப்புக்கு   எனது பின்னுரை:

முதலில் ஒரு ஷொட்டு - நான் சீரியசாக எழுதவில்லை என்று சொன்னதற்கு - நான் காமெடியாக எழுதத் தான் முயற்சி செய்தேன்!:)). ...ஆனாலும் ஒரு வருத்தம்- சீரியலில் அந்த 3 வாக்கியங்கள் வந்தாலும், அந்தக் கதைக்கும் ஒரு தொடர்ச்சியும் முடிவும் இருந்ததாக நினைக்கிறேன். என்னை தொடர்ந்து எழுதத் தூண்டியமைக்கு நன்றி.   

டிஸ்கி - நன்றி பார்வையாளன்.  (மைன்ட் வாய்ஸ் - ம்... மத்தவங்க என்ன சொல்லப் போறாங்களோ,.. பாவம்..)

(#) மைன்ட் வாய்ஸ் - ஆமாம்; நீங்க நினைக்கிற பதிவர்கிட்டேருந்து தான் காப்பி - காப்பி அடிப்பது ஒருவரைப் புகழறதாகத் தானே அர்த்தம்!! - Imitation is the best form of flattery! - Thanks சொன்னா - Any Time Madhaviன்னு அவங்க பெரிய மனசோட சொல்லிடுவாங்க!