Showing posts with label wikileaks. Show all posts
Showing posts with label wikileaks. Show all posts

Saturday, March 19, 2011

கதம்பம் -4

விக்கிலீக்ஸ்...
          விக்கிலீக்ஸ் செய்திகள் பற்றி நாளிதழில் பார்த்திருப்பீர்கள்.  தேர்தல் சமயங்களில் தமிழகத்தில் ஒரு கட்சியில் நாளிதழ்களில் உள்ளே 5000 ரூபாயை கவரில்- கூட கட்சிச் சின்னத்துடன் வோடர்ஸ் லிஸ்ட் நம்பருடன் தருவார்களாம்.  இன்னொரு கட்சியில் என்ன உதவி கேட்டாலும் வேட்பாளரின் மகன் உடனடியாகச் செய்வாராம்.  நாட்டில் மற்றொரு கட்சியிலோ மக்களுக்கு நேரடியாகக் கொடுக்காமல், அவர்களுக்கு கிணறு வெட்டணுமா, சமுதாயக் கூடம் கட்டணுமா என்று பார்த்துப் பார்த்து செய்வார்களாம்.  இந்தத் தகவல்களெல்லாம் சம்பந்தப்பட்ட பெரிய மனிதர்களே அமெரிக்கத் தூதரகத்து ஆட்களுக்குச் சொன்னதாக விக்கிக் கசிவுகளிலிருந்து 'தி இந்து' நாளிதழ் வெளியிட்டிருக்கிறது!

          இது போக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சாதகமாக வோட்டுப் போட பீரோ நிறைய பணம் வைத்து, அமெரிக்காவிற்கு உழைப்பவர்களுக்குக் காண்பிப்பார்களாம். எனக்கு வரும் சந்தேகங்கள்:
  • ஒரு நாளிதழில் ரூபாய் 5000 என்றால், 2/3 நாளிதழ்கள் வாங்கும் வீட்டிற்கு எவ்வளவு? (!!) ஒரே வீட்டில் வெவ்வேறு agents-டமிருந்து பேப்பர்கள் வாங்கினால் எப்படிக் கணக்கு வைத்துக் கொள்வார்கள்?
  • ஒரு வீட்டில் ஒரு வாக்காளர் இருந்தாலும் டஜன் வாக்காளர்கள் இருந்தாலும் கவரில் ஒரே அமவுண்ட் தானா?
  • நாளிதழே வாங்காதவரை எப்படி 'கவர்' செய்வார்கள்?
  • உதவிகள் தேர்தல் சமயத்தில் மட்டும் செய்தால் மக்கள் அடிக்கடி தேர்தல் வர வேண்டும் என விரும்பிப் பிரார்த்திக்க மாட்டார்களா?!!(கூட்டுப் பிரார்த்தனைக்கு பலன் ஜாஸ்தி!!)
Jokes apart, என்னுடைய முக்கிய சந்தேகம், இப்படி மூன்றாம் மனிதர்களிடம் தம் ரகசியங்களைப் பெரிய மனிதர்களே சொல்லியிருக்கிறார்களே - அதாவது நாலாவது தூணான பத்திரிகைத் துறை, போட்டித் தொலைக்காட்சிகள் இவர்களால் கண்டுபிடிக்க இயலாமல் போன செய்திகளைச் சொல்லியிருக்கிறார்களே - இவர்களை இப்படி உண்மை விளம்பிகளாக்க பெரிய அண்ணனால் எப்படி முடிந்தது?  பின்னணியைக் கொஞ்சம் யோசித்தால்... எந்த அளவுக்கு ஊழல் போகிறதோ அதைக் கண்டுபிடித்து தம் நாட்டுக்கு உதவிக் கொள்ள பெரிய அண்ணன் அதற்கும் மேல் போகும் போலிருக்கிறது!
(முக்கியக் குறிப்பு - நான் ஊழலை எந்த வகையிலும் இங்கோ, எங்குமோ, எப்போதுமோ நியாயப்படுத்தவில்லை.)

வடை போச்சே!!
          சில வருடங்களுக்கு முன் என் அலுவலகத் தோழியின் அனுபவம் இது.  அவருக்குத் திருமணமான புதிது. கணவருக்குத் தொலைவில் அலுவலகம் என்பதால் அவர் விடியற்காலையிலேயே புறப்பட்டுச் சென்று விடுவார் - தன்னுடைய காலை, மதிய உணவுகளைத் தன் அலுவலக காண்டீனிலேயே பார்த்துக் கொள்வார். தோழியும் அப்படியே.  இரவு உணவும் வெளியிலிருந்து தான்- கணவரே வாங்கி வந்து விடுவார். தோழிக்கு சமைக்கவே வாய்ப்பில்லை! 
         
          ஒரு நாள் தன் கணவருக்கு surprise கொடுக்க, அவருக்குப் பிடித்த மெதுவடையைத் தான் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  எனவே, மெதுவடை செய்வது எப்படி என்று  அலுவலகத் தோழிகளிடமும் காண்டீன் சமையற்காரரிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.  மாலை வீட்டிற்குச் சென்றவுடன் வேண்டிய சாமான்களை ஊறப் போட்டார்.  கணவர் வர இரவு 10 மணியாகிவிடும், வடை சூடாக இருக்க 9.30 மணிக்கு மேல் போட்டால் போதும் என முடிவு செய்து அதற்கேற்ப மாவையும் அரைத்தார்.    அடுப்பில் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு வடை போடப் போகும் போது தான் வடையின் நடுவில் எப்படி ஓட்டை போடுவது என்று கற்றுக் கொள்ளவில்லையே என்று ஞாபகம் வந்து, குழம்பி விட்டார்.  எப்படி யோசித்தாலும் அவரால் கண்டுபிடிக்கவும் இயலவில்லை; யாரையேனும் ஃபோன் செய்து கேட்கலாமென்றால் வெட்கம், இரவு 10 மணியாகிவிட்டது வேறு.  அலுவலக வேலைகளை ஊதித் தள்ளும் அவருக்கு வடையின் நடுவில் ஓட்டை போடத் தெரியாததால், அந்த மாவை அட்ஜஸ்ட் செய்து அடுத்த நாள் கணவருக்கு போதிய முன்னறிவிப்புடன் தோசையாக்கி விட்டார்! மொத்தத்தில் வடை போச்சு!       


25 - எண்ணின் மகிமைகள்
           25 என்னும் எண் கால் செஞ்சுரி; 5-ன் வர்க்கம்(square);  3 மற்றும் 4 இவற்றின் வர்க்கங்களைக் கூட்டி வர்க்கமூலம்(square root) எடுத்தால் 25, அதாவது  32 +  42= 52.  (நிறைய பிதாகரஸ் தியரி கணக்குகளில் வரும்!)
          முதல் 5 ஒற்றைப்படை எண்களைக் கூட்டினால், 25. (1 + 3 + 5 + 7 + 9).  3,4,5,6,7 என்ற அடுத்தடுத்த எண்களைக் கூட்டினாலும் 25!  25ன் powers எல்லாமே 25-ல் தான் முடியும்!  25-ன் பெருமைகளை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்!

         வேறொன்றுமில்லை.. இது என் 25-வது இடுகை!  உங்கள் ஆதரவுக்கும் ஆசிகளுக்கும் நன்றி!