காணும் பொங்கலன்று இந்தப் பதிவு! காண வந்தோருக்கு வந்தனம்!!!
உங்களுக்காக ஒரு கதம்பம்!
டி.வி. பொங்கல்
பொங்கல் விடுமுறைக்கு டி.வி. யை நம்பினோர் ஏமாற்றப்பட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். எல்லா சேனல்களிலும் பட்டிமன்றம், பேச்சு மன்றம், ஏதேனும் ஒரு நடிகருடன் ஒரு ஊரில் பொங்கல்.. இது போலவே இருந்தன. போட்ட திரைப்பட வரிசையில் ஆதவன், அயன், மதராசப் பட்டினம் தான் பார்க்கும்படி இருந்தன. சுறா... சொல்லவே வருத்தமாக இருக்கு .. விஜய் விசிறியான என் இரண்டாவது மகன் படம் ஆரம்பித்து 20 நிமிடத்தில் வாக்-அவுட் (நான் 10 நிமிடத்தில்)!!
இவை தாம் இப்படி என்றால், மகர விளக்கு ஜோதி காண்பிப்பதிலும் 5, 6 சேனல்களுக்கு இடையே போட்டி. ஒவ்வொன்றிலும் தனித்தனியே வெவ்வேறு நேரத்தில் ஜோதி தெரிந்தது காமெடி. இதன்பின் நிகழ்ந்த விபத்துக்களும் உயிரிழப்புகளும் ட்ராஜெடி.:((((.
மொத்தத்தில் டி.வி. பொங்கலில் இனிப்பில்லை, சுகர்-ஃப்ரீயுமில்லை!!
மாயச் சுழல்
இன்றைய செய்தித் தாளில் ஒரு செய்தி. இன்ஜினியரிங் காலேஜ்களில் ஃபீஸ் உயரப் போகிறதாம். இதற்குச் சொல்லப்படும் காரணம், 6-வது சம்பளக் கமிஷனின் பரிந்துரைப்படி பிரின்ஸிபல், ப்ரொஃபெஸர்கள், லெக்சரர்கள் இவர்களுக்கு சம்பளம் உயர்த்தியதால், நிதி நிலையைச் சமாளிக்க மாணவர்களின் பயிற்சிக் கட்டணத்தை உயர்த்த வேண்டுமாம்! 6 -வது சம்பளக் கமிஷன், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியத்தினை நிர்ணயம் செய்ய நிறுவப்பட்டது. மாணவர்களின் கட்டணம் கூட்டப் பட்டால், பெற்றோரின் சுமை அதிகமாகும். இந்த கூடுதல் சுமையைச் சமாளிக்க அரிசி, புளி, மிளகாய், காய்கறி, முதலியன விலைகள் உயரும். விலைவாசி உயர்ந்தால், சம்பளம் உயரும். மறுபடி...எல்லாம் உயரும். இந்த மாயச் சுழல் - vicious circle -லில் இருந்து வெளிவருவது எப்படி? ஏதாவது ஒரு இடத்தில் சுழற்சிக்குத தடை ஏற்படுத்த வேண்டும். பூனைக்கு யார் மணி கட்டுவது?
ரசித்த ஜோக்
சோவின் பேட்டி வழக்கம் போல ரசிக்கும்படி இருந்தது. (தினமலரில் வெளியானபடி) கடைசியில் சொன்ன ஜோக்: ஒருவன் குளத்திலிருந்து மீன் பிடித்து வந்தான்; சமைக்க மனைவியிடம் கொடுத்த போது அவள் வெங்காயம், மற்ற சாமான்கள் விலை காரணமாக அதைச் சமைக்க இயலாது எனவும், மீனை மறுபடி குளத்திலேயே விட்டுவிடும்படியும் கூறினாள். அவனும் அப்படியே மீனைக் குளத்தில் விட்டுவிட்டான். அது துள்ளி உள்ளே சென்று, தன் துணை மீன்களிடம் தான் 'கலைஞர் உயிர் காக்கும் திட்டத்தில்' பிழைத்து வந்ததாகக் கூறுகிறது!!. சோ சொன்னாராம், 'நல்ல வேளை, மீன் சொன்னது கலைஞருக்குத் தெரியாது, தெரிந்திருந்தால், மீன்களை விட்டுத் தனக்கு பாராட்டு விழா நடத்தச் சொல்லியிருப்பார்' என்று.